Tuesday 30 October 2018

அங்கிங்கெனாதபடி

கால்வாய்க் கரை ஒன்றில் அமர்ந்திருக்கிறது
அந்த நூற்றாண்டு ஆலமரம்
வேர்கொண்டுள்ள விழுதுகள்
கால்வாயில் இறங்கி
நீரோட்டத்திற்கு ஒலி தருகின்றன
நாளில்
வெவ்வேறு பொழுதில்
புதிது புதிதாய்
இடம் பிடித்து
நிழல்பரப்பில் ஜம்மென இருக்கிறது
ஆலமரம்
சூலமும் சிவலிங்கமும்
பறவை கணங்களுடன்
ஆயாசமாய் இருக்கின்றன
முதல் முறை பார்க்கும்
ஒவ்வொருவரும்
ஆச்சர்யப்படுகின்றனர்
எப்படி இவ்வளவு பெரிய மரமென
ஊருக்கு விருந்தாளி வந்த
ஏழு வயது சிறுவன்
ஆலமரத்தை
எடுத்துக் கொண்டு சென்றான்
தன்னுடன்
எப்படி எடுத்து வந்தாய்
என்று கேட்ட
தோழனுக்கு
இன்னொன்றை உருவாக்கித் தந்தான்
வருகிறாயா
எனக் கேட்ட ஒவ்வொருவரிடம்
சென்று கொண்டேயிருந்த
மரம்
இருந்தது
அங்கும்
இங்கும்
எங்கும்