Tuesday 15 January 2019

கதிரோனே ஒளியோனே அறிவோனே

கதிரே
உன்னை வணங்குகிறேன்

வாழ்வு என்பதை நீயாய் நாங்கள் உணர்கிறோம்
உலகென்பது எங்களுக்கு உனது ஒளியாய் அனுபவமானது
உன் கருணையை நாங்கள் உணவாய் அருந்தினோம்
உன் அன்பு எங்கள் மேல் மழையாய்ப் பொழிந்தது

எங்களை நீ அறிவாய்

எங்கள்
எல்லைகளை
சிறுமைகளை
இச்சைகளை
பூசல்களை
தடைகளை

ஒவ்வொரு நாளும்
வெள்ளிக்குப் பின்
முளைக்கும்
உன் முதற் கதிர்

எங்களை
மன்னிக்கிறது
எங்களுக்கு
வாய்ப்பு தருகிறது

இன்று உன்னிடம் யாசிக்கிறோம்
உனது ஆற்றலை
உனது திறனை
முடிவிலா உன் அன்பை