Friday 1 February 2019

கிருஷ்ண முரளி - 1

உனது இசை
கடக்கச் செய்கிறது
பழகியிருக்கும் பெருந்தொலைவுகளை
படிந்து போயிருக்கும் மனநிலைகளை
சாதாரண அன்றாடத்தின் மாறா சலிப்பை
உனது இசை கேட்ட
முதல் கணம்
என் அகத்தில் உணர்ந்தேன்
என் நதியில் ஓடும் நீரின் மென்னோசையை
என் பூங்காக்கள் மலரத் துவங்குவதை
நீ
நதிகளால் ஆன நதியாக
ஓடிக் கொண்டிருந்தாய்
தயக்கத்தால் முகம் கவிழும்
என் கரம் பற்றி இழுக்கிறாய்
என் அகம் மாறியிருப்பதை
அவ்வப்போது உணர்கிறேன்
உனது இசை
என்னை அன்பின் பெருங்கடலில்
மூழ்கச் செய்கிறது
நான் உனக்கு
கண்ணீரை அர்ப்பணிக்கிறேன்
என் அன்பின் கண்ணீரை
என் பிரியங்களின் கண்ணீரை
என் உணர்வின் கண்ணீரை
தன் சிறகுகளை
சிலுப்பிக் கொள்ளும்
சிட்டுக்குருவியைப் போல்
துடிக்கும் உயிர் கொண்ட
கண்ணீரை