Wednesday 10 April 2019

கலையும் சமூகமும்

நான் ஆலயங்களுக்குத் தொடர்ந்து செல்லும் பழக்கம் உள்ளவன். நான் வாழும் பிராந்தியம் ஆலயங்களால் நிறைந்தது. எனக்கு சின்ன வயதிலிருந்தே வரலாற்றின் மீது ஆர்வம் இருந்தது. சங்க காலத்தின் மதுரையில் பிற்காலச் சோழர்களின் நந்திபுரத்தில் விஜயநகரப் பேரரசில் சத்ரபதி சிவாஜியின் சைனியங்களில் குரு கோவிந்த சிம்மனின் படையணிகளில் என எப்போதும் ஒரு மானசீக உலகை உருவாக்கிக் கொண்டு அதில் உலவிக் கொண்டிருப்பேன். சட்டென நிகழ்காலத்திலிருந்து கடந்த காலங்களுக்குச் செல்வதற்கு ஆலயங்கள் உதவும். ஆயிரம் ஆண்டு கால ஆலயம் அதில் நாம் இருக்கும் போது தொல் காலங்களுக்கு இட்டுச் சென்று விடும். திருஞான சம்பந்தரை திருமங்கை ஆழ்வாரை அப்பரை சுந்தரரை குமரகுருபரரை மனதில் மிக அணுக்கமாக உணர ஆலயங்கள் துணை செய்திருக்கின்றன. இங்கு தான் சம்பந்தர் பதிகம் பாடியிருப்பார்; இங்கு தான் குமரகுருபரர் நடந்து சென்றிருப்பார் என பல இடங்களை கற்பனை செய்து கொள்வேன். தமிழ்ச் சமூகத்தின் கடந்த காலத்தை ஆலயங்களிலிருந்து தொடங்கி அறிந்திருக்கிறேன். தமிழ்ச் சமூகத்தின் அரசியலை, வாணிகத்தை, ஆட்சிமுறைகளை, கலையை, பண்பாட்டை.

இன்று பேராலயங்களில் ஓரிரு அர்ச்சகர்களே உள்ளனர். கிராமங்களில் இருக்கும் ஆலயங்களுக்கு வழிபட வரும் கிராமவாசிகள் மிகவும் குறைவாக உள்ளனர். பகல் பத்து மணிக்கு மேலும் மாலைகளிலும் பெண்கள் சிலர் வழிபட வருகின்றனர். கிராமங்களின் பகல் பொழுதுகளில் ஆண்கள்  எவரும் கோவிலுக்குள் வருவதில்லை. சிறுவர்கள் மற்றும் சிறுமிகளின் மாலைப் பொழுதை தொலைக்காட்சி ஆக்கிரமிக்கிறது. இளைஞர்கள் இணையத்தின் தாக்கத்தால் பீடிக்கப்பட்டுள்ளனர். 

ஆலயங்களில் எலெக்டிரிக் மங்கள இசை ஒலிக்கிறது. 

தமிழ்நாட்டின் சமய நிறுவனங்கள் தங்கள் பொறுப்பில் உள்ள ஆலயங்களில் ஊதியத்திற்கு ஆட்களை நியமித்து தேவாரம், நாலாயிர திவ்யப் பிரபந்தம் ஆகியவற்றை அந்த ஊரில் இருக்கும் குழந்தைகளுக்குச் சொல்லித் தரலாம். நியமிக்கப்படுபவர்களுக்கு மிக நல்ல ஊதியம் வழங்கப்பட வேண்டும். ஒவ்வொரு ஆலயமும் குறைந்தபட்சம் முப்பது மாணவர்களுக்கு ஆண்டுதோறும் பயிற்சி அளித்தாலே ஐந்திலிருந்து பத்து ஆண்டுகளில் சமூகத்தில் ஆலயங்கள் மற்றும் ஆலய பராமரிப்பு குறித்த விழிப்புணர்வை உருவாக்க முடியும். ஆலயத்தின் ஒரு பகுதியாக இசையும் நடனமும் பயிற்றுவிக்கப்பட வேண்டும்.

இன்று தமிழ்ச்சமூகத்தின் கலை உணர்வை பெருமளவில் பாதிக்கும் சக்தியாக பரப்பிய கேளிக்கை கலைகளே உள்ளன. அவற்றுக்கு மாற்றாக ஒன்றை ஆலயங்களை மையமாக வைத்தே உருவாக்க முடியும். 

கலைகளின் வழியாக பண்பாடு எழுச்சி பெறும். பண்பாடு எழுச்சி பெற்றால் சமயமும் சிறக்கும்.

கலைஞன் தான் நம்புவதை உறுதியாக பேசிக் கொண்டிருக்கிறான். அவன் எப்போதும் நம்பிக்கை இழப்பதேயில்லை.