Tuesday 14 May 2019

ஜி எஸ் எம் ஃபோனும் ஸ்மார்ட் ஃபோனும்

நான் ஸ்மார்ட்ஃபோன் வைத்துக் கொள்ளவில்லை. வாட்ஸப்பில் இல்லை. வேறு எந்த சமூக ஊடகத்திலும் இல்லை. 2004ம் ஆண்டிலிருந்து அலைபேசி பயன்படுத்துகிறேன். இப்போது பயன்படுத்துவது என்னுடைய மூன்றாவது அலைபேசி. அலைபேசி பயன்படுத்த ஆரம்பித்த நாளிலிருந்து நான் சில நியதிகளைப் பின்பற்றுகிறேன். நான் ஒருவரைச் சந்திக்க  செல்லும் போது என்னுடைய  செல்ஃபோனை Silent Modeல் வைத்திருப்பேன். ஒருவரை வீட்டிலோ அலுவலகத்திலோ சென்று நான் சந்தித்தால் அவர்கள் என் அலைபேசி ஒலித்துக் கேட்டிருக்கவே முடியாது. அப்போதைய மிஸ்டு கால்களை சந்திப்பு முடிந்ததும் மீண்டும் அழைத்துப் பேசிவிடுவேன். பேச முடியாத சூழ்நிலை இருந்தால் எஸ். எம். எஸ் கொடுத்து விடுவேன். தவிர்க்க இயலாத சூழ்நிலைகளைத் தவிர மிகப் பெரும்பாலும் எல்லா மிஸ்டு கால்களையும் மீண்டும் அழைத்துப் பேசிவிடுவேன். அன்றோ அல்லது மறுநாளோ.

ஜி.எஸ்.எம் ஃபோனில் அலாரம் வைத்துக் கொள்வேன். டிராஃப்டில் சில விபரங்களை வைத்திருப்பேன். என்னுடைய லேப்டாப்பில் மின்னஞ்சல்கள் பார்ப்பேன். எழுதுவேன். பிரசுரமான எனது எல்லா எழுத்துக்களும் நான் லேப்டாப்பில் எழுதியவையே.

என்னுடைய கட்டுமானத் தொழில் சார்ந்து நான் பலரை தினமும் சந்திப்பவன். சப்ளையர்கள். தொழிலாளர்கள். வியாபாரிகள், லோடுமேன்கள், சர்க்கார்வாலாக்கள், மீடியேட்டர்கள், வாடிக்கையாளர்கள் என பலரையும் சந்திப்பவன். பலருடன் இணைந்து - பலரை ஒருங்கிணைத்து - செயலாற்றும் தன்மை கொண்ட தொழிலை மேற்கொள்பவன். நேர மேலாண்மையும் ஒருங்கிணையும் பயிற்சியும் எங்கள் தொழிலுக்கு முக்கியமானது. அது என்றுமே எனக்கு லகுவாகவே இருந்திருக்கிறது.

பஸ் பயணங்களிலும் ரயில் பயணங்களிலும் இப்போதும் ஜன்னல் ஓர சீட்டில் ஆர்வமாக அமர்ந்து கொண்டு காட்சிகளை வேடிக்கை பார்க்கிறேன். இந்த உலகம் எத்தனை காட்சிகள் கொண்ட நாடகம் என்ற வியப்பும் ஆர்வமும் இப்போதும் இருக்கிறது. இருபத்து இரண்டு நாட்கள் இந்திய நிலத்தில் மோட்டார் சைக்கிளில்  ரிஷிகேஷ் வரை பயணித்தேன். ஆனால் கையில் அலைபேசி எடுத்துக் கொள்ளவில்லை.

இன்றுவரை பலர் என்னிடம் ஸ்மார்ட்ஃபோன் வைத்துக் கொள்ள சொல்லி பரிந்துரைத்தாலும்  இன்னும் நான் ஸ்மார்ட்ஃபோன் வைத்துக் கொள்ளவில்லை. நான் என்னுடைய லௌகிக செயல்களை ஸ்மார்ட்ஃபோன் இன்றியே நன்றாகச் செய்ய முடிவதாகவே எண்ணுகிறேன்.  இன்று ஒரு நண்பர் 1. ரயில் பயணச்சீட்டு 2. ரயில் முன்பதிவு 3. பீம் செயலி ஆகியவற்றை மட்டும் கொண்ட ஒரு ஸ்மார்ட்ஃபோன் வைத்துக் கொள்ளுங்கள் என்றார்.

இந்த மூன்றுக்காக அவ்வளவு பெரிய தொகை செலவழிக்க வேண்டுமா என்று மனதில் கேள்வி எழுந்தது.

ஸ்மார்ட்ஃபோன் வைத்திருப்பவர்களுக்கு நான் ஒரு பரிந்துரையை அளிப்பதுண்டு. அதில் Star Gazing App என ஒன்று உண்டு. ஸ்மார்ட்ஃபோன் கேமரா வழியே வானத்தைக் கண்டால் அதில் உள்ள பெயரிடப்பட்ட விண்மீன்கள், கோள்கள், துணைக்கோள்கள் ஆகியவற்றைப் பெயருடன் அடையாளப்படுத்தும். வானத்தின் புதிர்கள் மேல் ஆர்வம் கொண்டவர்களுக்கு மிகவும் துணையானது. நான் தினமும் இரவு மாடியில் அமர்ந்து வானம் பார்ப்பவன்.

Star Gazingக்காக மட்டும் ஒரு ஸ்மார்ட்ஃபோன் பயன்படுத்தலாமா என்று யோசிக்கிறேன். பேசுவதற்கும் கையில் எடுத்துச் செல்வதற்கும் சாதாரண எளிய ஜி.எஸ்.எம் ஃபோன். Star Gazingக்கு ஸ்மார்ட் ஃபோன்.