நீ
அறையில்
அமர்ந்திருக்கும் போது
உன் வானில்
மேகங்களுக்கு நடுவே பறந்தமர்ந்த
தோகைமயிலின் பீலியை
இருபுறமும் பார்த்து விட்டு
மேஜை மேல் வைக்கிறாய்
அக்கண்கள் உன் கண்களை
ஓயாமல் நோக்குகின்றன
பீலியின் கண்கள்
காணும்
இரு வைரங்கள்
முன்னர்
பேருறக்கம் கொண்டிருந்தன
அகழப்பட்ட போது
ஆழங்கள்
அளித்தன
கணந்தோறும்
தாம் புரிந்த தவத்தை
ஆழங்களின் தவத்துக்கு
இறைவன்
அளித்தது
தன்னின் ஒரு துளி
ஒரு துளி நீர்
ஆன
மாபெரும்
நீராலான
நீர்மரமாய்
நீ
ஆனாய்
உன் விரல் நகங்களில்
நீண்ட கைகளில்
மென் தோள்களில்
பறக்கும் கூந்தல் இழைகளில்
கூட்டமாய் அமர்ந்தன
பூமியின் பறவைகள்
இன்னும் உலகறியாத
குழவிப்புள்
வற்றாமல் இருப்பது எது
என்று கேட்ட போது
தாய்ப்புள் சொன்னது
தொட்டனைத்தூறும்
அன்பின் ஊற்றுக்கள்