Tuesday 14 May 2019

நீர்மரம்

நீ
அறையில்
அமர்ந்திருக்கும் போது
உன் வானில்
மேகங்களுக்கு நடுவே பறந்தமர்ந்த
தோகைமயிலின் பீலியை
இருபுறமும் பார்த்து விட்டு
மேஜை மேல் வைக்கிறாய்
அக்கண்கள் உன் கண்களை
ஓயாமல் நோக்குகின்றன

பீலியின் கண்கள்
காணும்
இரு வைரங்கள்
முன்னர்
பேருறக்கம் கொண்டிருந்தன

அகழப்பட்ட போது
ஆழங்கள்
அளித்தன
கணந்தோறும்
தாம் புரிந்த தவத்தை

ஆழங்களின் தவத்துக்கு
இறைவன்
அளித்தது
தன்னின் ஒரு துளி

ஒரு துளி நீர்
ஆன
மாபெரும்
நீராலான
நீர்மரமாய்
நீ
ஆனாய்

உன் விரல் நகங்களில்
நீண்ட கைகளில்
மென் தோள்களில்
பறக்கும் கூந்தல் இழைகளில்
கூட்டமாய் அமர்ந்தன
பூமியின் பறவைகள்

இன்னும் உலகறியாத
குழவிப்புள்
வற்றாமல் இருப்பது எது
என்று கேட்ட போது
தாய்ப்புள் சொன்னது
தொட்டனைத்தூறும்
அன்பின் ஊற்றுக்கள்