Thursday 6 June 2019

அதிகாலை


கேரளாவில் விடிகாலைப்பொழுதுகளில் மக்கள் ஆலயங்களுக்குச் செல்லும் காட்சியைக் காண முடியும். இளைஞர்கள், இளம்பெண்கள், நடுத்தர வயதுடையவர்கள் என சகலரும் செல்வதைக் காண முடியும். அதிகாலையில் உள்ளூரில் இருப்பவர்கள் ஆலயம் செல்ல வேண்டுமெனில் அது பலநாட்களாக உருவான சமூக பழக்கமாக இருந்தால் மட்டுமே சாத்தியம். சமயம், நுண்கலை, கலை ஆகியவற்றில் ஆர்வமும் அறிமுகமும் பழக்கமும் கொண்ட ஊர்களில் மட்டுமே இது முழுமையாக நிகழ முடியும். இன்று தமிழ்நாட்டில் அதிகாலை வேளையில் பக்தர்கள் அதிகளவில் வழிபடும் ஆலயங்கள் வெளியூரிலிருந்து தரிசனத்துக்கு வருபவர்களாலேயே நிரம்பியிருக்கிறது. விதிவிலக்கு உண்டு.

அதிகாலையிலேயே ஆலயம் சென்று பரிவார மூர்த்திகளை வணங்கி காத்திருந்து சுவாமி தரிசனம் செய்வது தமிழ்நாட்டில் எல்லா ஊர்களிலும் நிகழ்கிறதா என்பது ஐயமே. எங்கள் பகுதியின் பெரும்பான்மையான கிராமங்கள் ஆயிரம் ஆண்டு தொன்மையான ஆலயங்களால் ஆனவை. அவை இப்போதெல்லாம் காலை ஏழு மணி அளவில் மட்டுமே திறக்கப்படுகின்றன. பெண்கள் காலை பத்து மணிக்கு மேல்தான் வருகிறார்கள். சோழர்கள் சமூகத்த்தை ஆலயம் மூலமே தொகுத்தனர். இன்றும் ஆலயங்கள் மிகப் பெரிய விவசாய நிலங்களைக் கொண்டுள்ளன. அவற்றின் வருவாயை ஆலயம்  சார்ந்த கலைகளுக்கும் நுண்கலைகளுக்கும் செலவிடுவது ஒரு வரலாற்றுக் கடமை. இசை, நடனம் ஆகியவை எப்போதும் புரவலர்களாலேயே நிலைபெற்றுள்ளன.

நமது சமயம் எதையும் கட்டாயப்படுத்தவில்லை. அதனாலேயே அதனைக் காப்பதற்கு சமூகம் இன்னும் கூடுதல் அக்கறை காட்ட வேண்டியிருக்கிறது.