Tuesday 30 July 2019

வாசிப்பு மாரத்தான்

அறிவுச் செயல்பாட்டிலும் வாசிப்பிலும் ஆர்வமும் நம்பிக்கையும் கொண்ட நண்பர்கள் இணைந்து ஒரு வாசிப்பு மாரத்தானைத் துவங்க இருக்கிறோம். 48 நாட்கள். குறைந்தது 100 மணி நேரம் வாசிக்க வேண்டும். ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் அரைமணி நேரமாவது வாசித்திருக்க வேண்டும். வாசிப்பு ஒருநாள் கூட விடுபடக் கூடாது. இவை விதிமுறைகள். எவ்வளவு விரைவில் 100 மணி நேர வாசிப்பு இலக்கை எட்டுவோம் என்ற ஆர்வம் அனைவருக்கும் உள்ளது. அதே நேரம் ஒருநாள் கூட வாசிப்பு இல்லாமல் இருக்கக் கூடாது. வாசிப்பு மாரத்தான் விதிமுறைகள் உருவாக்கத்தில் எனது சிறு பங்களிப்பு இருக்கிறது. 

இந்தியாவில் தமிழ்ச் சமூகம் ஒப்புநோக்கும் விதத்தில் முன்னோடியானது. மற்ற மாநிலங்களை விட இங்கே போக்குவரத்து வசதிகள் அதிகம். போக்குவரத்து வலைப்பின்னல் மாநிலத்தை இணைத்துள்ளது. ஆனால் வெகுஜன தமிழ் மனோபாவம் இன்னும் பழங்குடித்தன்மை கொண்டதாகவே இருக்கிறது. அதற்கான காரணம் தமிழ் மக்கள் அறிவுச் செயல்பாட்டில் நம்பிக்கை கொள்ளவில்லை. தமது மரபு குறித்த புரிதலுடன் இல்லை.

அமெரிக்காவில் பள்ளிக்கூடங்களில் நூல் வாசிப்புக்கு எவ்வளவு முக்கியத்துவம் தரப்படுகிறது என்பதை அமெரிக்காவில் பணிபுரியும் நண்பர்களிடம் கேட்டால் சொல்வார்கள். அங்கே கல்வி என்பதே நூல் வாசிப்புதான். இங்கே லட்சத்தில் ஒருவரே வாசிக்கக் கூடியவராயிருக்கிறார். ஒரு நூலை - அறிவியல், தொழில்நுட்பம், கலை, இலக்கியம், பொருளாதாரம், தத்துவம், அரசியல் என எத்துறையானாலும்- வாசித்து அதனை உள்வாங்கிக் கொள்பவராக தமிழ்நாட்டில் லட்சத்தில் ஒருவரே இருக்கிறார். 

வாசிப்பில்லாமல் இருக்கும் சமூகம் - அறிவுச்செயல்பாட்டில் நம்பிக்கை கொள்ளாத சமூகம் - இன்னும் பிறக்காத தலைமுறைகளுக்கு பெரும் துரோகம் இழைக்கிறது.

நான் தினமும் வாசிக்கிறேன். நினைவு தெரிந்த நாள் முதல். எனினும் வாசிப்பு மாரத்தான் ஆர்வமூட்டுவதாகவே இருக்கிறது. தயார் செய்து கொள்ளும் விதமாக இப்போதே சில நூல்களை வாசிக்கத் துவங்கியிருக்கிறேன். 

இப்போது வாசிக்கும் நூல்கள்

1. திருவருண்மொழி - ஸ்ரீரமணர்
2. Mossad - The Greatest Mission Of the Israeli secret service