Tuesday 6 August 2019

ஒரு மகத்தான செயல்

இந்தியா சுதந்திரம் பெற்ற பொழுது பல்வேறு விதமான பதட்டங்களால் நிறைந்திருந்தது. முகமது அலி ஜின்னா தனது கட்சி மூலம் நேரடி வன்முறையைத் தூண்டிக் கொண்டிருந்தார். பிரிட்டாஷார் விலகப் போகும் நேரத்தில் இந்தியாவுக்கு ஏதேனும் பெரிய இடையூறை உருவாக்க விரும்பினர். அன்று காலனி நாடுகள் விடுதலை பெற்றுக் கொண்டிருந்தன. அவற்றின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதை அந்நாடுகளோ அல்லது அவற்றில் ஆதிக்கம் செலுத்திய ஏகாதிபத்திய நாடுகளோ அறிந்திருக்கவில்லை. விடுதலை பெற்ற நாடுகள் அனைத்தும் உள்முரண்களால் சிதறிப் போகும் என்றே ஏகாதிபத்திய  நாடுகள் நினைத்தன.

ஜவஹர்லால் நேரு இராணுவ பலத்தை அரசியல்சூழ்கையில் முக்கியமாகக் கருதாதவர். அதில் நம்பிக்கை அற்றவர். அதனால் இராணுவத்தை நாட்டு நலனுக்காகப் பயன்படுத்துவது எவ்வாறு என்பது குறித்த முன்யோசனைகளே இல்லாதவர். அது அவருடைய செயல் எல்லை. காஷ்மீர் விவகாரத்தில் நேரு எடுத்த முடிவுகள் வேலை செய்யாமல் போயின. இந்திய சீன உறவை நேரு கையாண்ட விதமும் இந்தியாவுக்கு ஏமாற்றத்தையே அளித்தது. 

நேருவுக்கு இந்திய நிர்மாணம் குறித்து பெரிய கனவுகள் இருந்தன. அதற்கான பல செயல்களை அவர் செய்தார். அதில் ஐயமில்லை. எனினும் அதற்கான இடம் அவருக்குத் தரப்படும் போது அவர் செய்த பிழைகளும் நிழல் போல உடன் வரவே செய்யும். அது தவிர்க்க இயலாதது.

உலக அரசியல் போக்குகள், சர்வதேச பொருளாதாரம், உலக நாடுகளின் பூகோள நலன்கள் மற்றும் தீவிரவாத இயக்கங்களின் செயல்பாடுகள் ஆகியவை காஷ்மீர் விவகாரத்தில் பல மாற்றங்களை உருவாக்கிக் கொண்டேயிருந்தன. காஷ்மீர் விவகாரம் இந்தியாவின் கௌரவம் தொடர்பான விஷயம் என எண்ணப்படும் தோறும் மார்க்ஸிஸ்டு செயல்பாட்டாளர்களும் மார்க்ஸிஸ்டு பத்திரிகையாளர்களும் பிரிவினைவாதிகளுக்கு ஆதரவான குரலை எழுப்பி வந்தனர்; எழுப்பி வருகின்றனர்.

காஷ்மீர் இளைஞர்கள் கைகளுக்கு சீனாவின் பாகிஸ்தானின் ஆயுதங்கள் சென்று சேர்ந்து கொண்டிருக்கும் வரை, காஷ்மீர் மக்கள் வாழ்வில் நிம்மதி ஏற்படப் போவது இல்லை. அவர்கள் வாழ்வில் நிம்மதி திரும்புவதற்கான முதல் படியாக இந்திய அரசியல் சாசனத்தின் 370வது பிரிவு நீக்கப்பட்டுள்ளது. இது கடந்த பத்தாண்டுகளில் எடுக்கப்பட்ட துணிச்சலான முடிவுகளில் ஒன்று. எல்லா இந்தியர்களுக்கும் காஷ்மீரில் சொத்து வாங்கும் உரிமை ஏற்பட்டிருப்பதன் மூலம் அங்கே ஒரு பொருளியல் மாற்றம் ஏற்பட வழி பிறந்துள்ளது. லடாக் பிராந்தியம் பௌத்தத்தின் பண்பாட்டுப் பீடமாக நிலைபெறும்.

வாழ்த்துக்கள் இந்தியா!