Friday 27 September 2019

நவராத்திரி விரதம்

நான் மாற்றத்தின் மீது பெரும் நம்பிக்கை கொண்டவன். வாழ்க்கை முழுமையை நோக்கியே எல்லா விதத்திலும் நகர்கிறது என்னும் பார்வையைக் கொண்டவன். உடல் ஆரோக்கியத்தின் மீதும் மன அமைதி மீதும் நாட்டம் உடையவன். செயல்களைச் செம்மையாக சீராக ஆற்ற வேண்டும் என்ற விருப்பம் எனக்கு எப்போதுமே உண்டு. இந்த ஆண்டு, என்னை நான் மேலும் உற்று நோக்கி அறிய - என்னுடைய உடல், மன எல்லைகளை விரிவாக்கிக் கொள்ள - ஒன்பது நாட்கள் (29.09.19 முதல் 07.10.19 வரை) உணவு அருந்தாது உண்ணா நோன்பிருக்க எண்ணியுள்ளேன். மழைக்காலம் தொடங்க இருக்கும் இக்காலகட்டத்தை அன்னைத் தெய்வங்களுக்குரியதாய் வகுக்கிறது இந்திய மரபு. இக்காலத்தில், உணவு ஒழித்து வாழ்க்கையின் மீது மேலும் கவனம் செலுத்தி இருப்பது எனக்கு மிகவும் தேவையானது என்று தோன்றுகிறது. உயிர்கள் பசியை உணரும் தோறும் வாழ்வைத் தீவிரமாக உணர்கின்றன. முழுமுதல் அன்னையிடம் ஒப்படைத்து இருப்பது நன்மை பயக்கும் என நம்புகிறேன். 

அதிகாலை எழுந்து யோகப் பயிற்சிகள் செய்யலாம். ஆலயம் சென்று வழிபடலாம். பகல் பொழுதுகளில் தியானத்தில் அமரலாம். உறங்கும் பொழுதை மிகக் குறைந்ததாக வைத்துக் கொள்ளலாம். 

அன்னை துணையிருக்க வேண்டும். அன்னை ஆசியளிக்க வேண்டும்.