Saturday, 28 September 2019

பிரிவென்பது

நாம் தத்தளித்துக் கொண்டிருந்தோம்
நம்மைச்
சூழும் காற்றில்
ஒவ்வொரு நாடித்துடிப்பில்
அவ்வப்போது எழும் எண்ணங்களில்
வாழ்க்கையின் முடிவற்ற சாத்தியங்களில்

இந்த உலகம்
இவ்வளவு இனிமைகளின்
பெருவெளியைக் கொண்டதா

மேகங்களும் மீன்களும்
இணைந்திருக்கும்
வானத்திற்குக் கீழே

மாடியின் மேற்பரப்பில்
மெல்ல அசையும் காற்று
அவ்வப்போது தீண்டிச் செல்கிறது

பிரிவென்பது எதனால் ஆனது
காலத்தால்? அல்லது தூரத்தால்?
அல்லது
மௌனத்தால்? அல்லது சொல்லால்?