Sunday 3 November 2019

ஆழமும் உயரமும் – 2


சிதம்பரம்

வைணவத்தில் கோவில் என்றால் அது ஸ்ரீரங்கத்தைக் குறிக்கும். சைவத்தில் அது சிதம்பரத்தைக் குறிக்கும். விசும்பின் உயிர் நடனத்தை ஆடிக் கொண்டிருக்கிறான் ஆடலரசன். சிதம்பரம் என்றதும் என் நினைவில் எழுவது நாட்டியாஞ்சலி. சிறு வயதிலிருந்து பலமுறை பார்த்திருக்கிறேன். சின்னஞ் சிறுமிகள், இளம்பெண்கள்  கடவுளைத் தன் காதலனாக கணவனாக எண்ணி நடனமிடும் ஒரு கணத்தில் உணர்வின் அதிதூய தருணத்தை எட்டுவதன் மாயத்தை பலமுறை கண்டிருக்கிறேன். பேரரசிகளைப் போன்ற உணர்வுடன் அந்த ஒரு பொழுது அவர்கள் ஆவது அற்புதமான நிகழ்வு.

நடராஜர் சன்னிதி முன் நிற்கும் கணமென்பது வாழ்க்கை மேல் நம்பிக்கையை உண்டாக்குவது. ஒரு புறம் ஆடலரசன். இன்னொரு பக்கம் கோவிந்தராஜன். சிதம்பர தரிசனம் எவராலும் மறக்க இயலாதது.

ஸ்ரீமுஷ்ணம்

வராக வழிபாடு விஜயநகரப் பேரரசு பரவியிருந்த பகுதிகளில் முக்கிய இடம் பெற்றிருந்தது. அவர்களின் நாணயம் வராக முத்திரை பதிக்கப் பெற்றது. எனவே வராகன் என பெயர் பெற்றது. ஸ்ரீமுஷ்ணம் ஆலயம் ஒரு சிற்றாலயம். தினமும் பக்தர்கள் வந்த வண்ணமிருப்பர். வராக மூர்த்தி சுயம்பு. இந்த ஆலயம் சோழர் காலத்தில் எழுப்பப்பட்டுள்ளது. விஜயநகரப் பேரரசால் பல விரிவாக்கங்கள் செய்யப்பட்டுள்ள  ஆலயம்.

மேலக்கடம்பூர்

கோனார்க்கின் சூர்யக் கோவில் போல வடிவமைக்கப்பட்டுள்ள ஆலயம். ஆலய வடிவமைப்பே மிக அழகானது. இவ்வாறான ஓர் சிவாலயத்தை வேறெங்கும் காண இயலாது. சிறிய ஆனால் மிக முக்கியமான ஓர் ஆலயம்.

வலிவலம்

இந்த சிவாலயமும் வேறுபட்ட அமைப்பை உடையது. இறைவன் பெயர் கமலநாதன். இங்கே உள்ள வலம்புரி வினாயகர் பிரசித்தி பெற்றவர். தேவாரத்தின் பிரபலமான பாடலான

பிடியத னுருவுமை கொளமிகு கரியது
வடிகொடு தனதடி வழிபடு மவரிடர்
கடிகண பதிவர வருளினன் மிகுகொடை
வடிவினர் பயில்வலி வலமுறை யிறையே.

சம்பந்தரால் வலிவலம் இறைவனை நோக்கி பாடப்பட்டது.

திருக்கண்ணபுரம்

ஆலயத்தின் முன் ஆலயத்தை விடப் பெரியதாய் விரிந்திருக்கும் ஒரு திருக்குளம். சௌரிராஜப் பெருமாள் வசீகரமானவர். இந்த ஆலயத்துக்குப் பக்கத்தில் திருச்செங்காட்டாங்குடி உள்ளது.

நாகப்பட்டிணம்

சௌந்தர்ராஜ பெருமாள் ஆலயம். கடல் இருக்கும் ஊர்களில் அமைந்திருக்கும் ஆலயங்கள் மனதுக்கு மிகவும் நெருக்கமாகி விடுவதைக் காணலாம். அழகின் திரு உரு சௌந்தர்ராஜன்.