Sunday 1 December 2019

காத்திருப்பு - ஒரு கடிதம்

அன்பின் மயிலாடுதுறை பிரபு,

உங்களின் காத்திருப்பு கதை பலவிதங்களில் பரவசப்படுத்தியது; சற்றே சங்கடப்படுத்தியது.

முக்கியமாய் அந்த  இரயில் நிலைய சம்பவத்தின் விவரணை - லஷ்மி மணி பார்ப்பதை விவரிக்கும் விதம்

//லக்ஷ்மி தனது கடிகாரத்தைப் பார்த்தான். அது அவனது சுபாவம். அவனிடம் முக்கியமாக யாரேனும் எதையேனும் சொன்னால் அவன் கடிகார முள் நகர்வதைப் பார்ப்பான். அந்த நகர்வின் தாளத்தில் அவன் சில முடிவுகளுக்கு வருவான். முக்கியமான செயல்கள் செய்யத் துவங்கும் போதும் கடிகாரத்தைப் பார்ப்பான். வினாடி முள் நகர்ந்து கொண்டேயிருந்தது//


இதில் மிகத் துல்லியமாய் வெளிப்படும் அவனது அமைதியும், நிதானமும், கூர்மையும் கலந்த குணம்.


மேலும் அந்த சம்பவம் முழுவதுமாக வெளிப்படும் அவனது ஆளுமை, பல விதங்களில் என் கல்லூரிக் காலங்களையும் ஆரம்பகால வேலை நாட்களையும் நினைவிலிருத்தியது.

இவ்வளவு டிரமாட்டிக்காகவெல்லாம் அனுபவங்களை நான் சந்தித்ததில்லையெனினும் அது போன்ற ஒரு ஆணிடம் (ஆளுமையிடம்) நம் மனதைப் பறி கொடுத்திருப்போம் என்பது சத்தியம்.

இது போன்ற விஷயங்களை நினைவில் மீட்டியதற்காகவே எனது நன்றிகள்.


ஜெயமோகன் தளத்தில் நூல்பிடித்துப் போய் உங்களின் 'வாழ்க்கை ஒரு திருவிழா' படித்தேன்(இன்னும் முழுதாய் வாசிக்க வேண்டும்).

ஆனால் அந்த கனவே ஒரு ஆச்சரியத்தைக் கண்களில் கொண்டுவந்தது உண்மை.

உங்களின் சாகசங்களுக்கும் வாழ்த்துகள்!


அன்புடன்

சக ஜெயமோகன் வாசகன் (வேறெதையும் விட இதுவே மிகச்சரியாய் பொருந்துகிறது!) வெங்கட்ரமணன்