Friday 18 October 2019

வாழ்க்கை ஒரு திருவிழா


இன்று எனக்கு ஓர் எண்ணம் தோன்றியது. பல வருடங்களாக அதைப் பற்றி எண்ணியிருக்கிறேன். இப்போது சட்டென ஒரு சாத்தியமான வடிவம் உருவாகி விட்டதாக உணர்ந்தேன். 2020ம் ஆண்டு முழுவதும் கொண்டாட்டங்களில் முற்றிலும் திளைத்திருப்பது என்று முடிவு செய்தேன். இந்த திட்டமிடலை சரியான காலகட்டத்தில் யோசித்திருப்பதாகத் தோன்றுகிறது. 2020 ஜனவரிக்கு இன்னும் எழுபத்து ஆறு நாட்கள் இருக்கின்றன. பயணங்களை – பயண முன்பதிவுகளை வகுத்துக் கொள்வதற்கு போதுமான அவகாசம் கிடைக்கிறது. ஒவ்வொரு மாதம் ஒவ்வொரு கொண்டாட்டம் என்பது திட்டம். எந்த விழா இந்தியாவில் எந்த பகுதியில் ஆயிரக்கணக்கான மக்கள் இணைந்து கூட்டுக் கொண்டாட்டமாக கொண்டாடப்படுகிறதோ அங்கே சென்று அதில் இணைந்து கொள்வது. இந்த எண்ணத்தை இன்று தான் அடைந்தேன். நாம் ஒரே விதமான சூழலில் நம் வாழ்நாள் முழுதும் இருக்கிறோம். ஒரே விதமான எண்ணம். ஒரே விதமான நோக்கு. ஒரே விதமான அனுபவம். அதனை இந்த திட்டம் மாற்றியமைக்கும் என்று எண்ணுகிறேன். பன்னிரண்டு மாதம் பன்னிரண்டு விழாக்கள். ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு மாநிலத்தின் கொண்டாட்டத்தில் இருப்பது. பயண நாட்கள் சேர்த்து ஒரு வாரம் என்று வைத்துக் கொள்ளலாம். ரயில் பயணமாகவே வைத்துக் கொள்ளலாம். பயணத்துக்கு மூன்று நாட்கள். கொண்டாட்டத்தில் நான்கு நாட்கள்.


1. சர்வதேச காற்றாடித் திருவிழா

குஜராத்தில் இந்த விழா ஜனவரியில் கொண்டாடப்படுகிறது. உலகெங்கிலுமிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் இந்த விழாவுக்காக கூடுகிறார்கள். மகர சங்கராந்தியைக் கொண்டாடும் விதமாக மக்கள் வானில் விதவிதமான ஆயிரக்கணக்கான பட்டங்களைப் பறக்க விடுவர். ஆயிரம் வண்ணக் கனவுகள் சிறகடிக்கும் வானம். நம் அகம் எழுந்து விண் தொடும் தருணம் வாய்க்கக் கூடிய திருவிழா.

உலக நாடுகள் பலவற்றிலுமுள்ள பட்டம் தயாரிப்பவர்கள் இங்கே தங்கள் புதிய பட்டங்களை விற்பனை செய்கின்றனர். குஜராத் மாநில அரசு இந்த விழாவை சிறப்பாக ஒருங்கிணைத்து சர்வதேச முக்கியத்துவம் கொண்டதாக மாற்றியுள்ளது. 2020ம் ஆண்டு ஜனவரி 6 - ஜனவரி 14 வரை குஜராத்தின் முக்கிய நகரங்கள் அனைத்திலும் இத்திருவிழா நடைபெறும். அகமதாபாத் காற்றாடித் திருவிழா மிகச் சிறப்பானது.





2. சிவராத்திரி


இரவு அருவமானது. தனித்துவம் கொண்டது. உலகியல் நம்மை பகலில் உழைப்பவர்களாகவும் இரவில் உறங்குபவர்களாகவும் ஆக்கியுள்ளது. வாழ்க்கையின் அகத்தின் ஆழமான உணர்வுகளை இரவு அடையாளம் காட்டக் கூடியது. ‘’உயிர்கள் அனைத்தும் உறங்குகையில் விழித்திருப்பவன் யோகி’’ என்கிறான் ஸ்ரீகிருஷ்ணன். வருடத்தின் ஒரு நாள் விழித்திருக்கும் இந்த இரவு நம் வாழ்க்கை குறித்த புரிதலை இன்னும் ஆழமாக்கக் கூடும்.சிவராத்திரி தினத்தை உஜ்ஜைன் மகா காலேஸ்வர் ஆலயத்திலோ அல்லது காசி விஸ்வநாதர் ஆலயத்திலோ கொண்டாடலாம். 2020ம் ஆண்டு பிப்ரவரி 21 அன்று மகாசிவராத்திரி தினம்.

                                                                      
3. புத்த பூர்ணிமா
வாழ்க்கை நமக்குத் துயரமாக அனுபவமாகிறது. இருப்பின் துயர் மற்றும் உறவுகளின் துயர் மற்றும் பிரிவுகளின் துயர். துயரத்தின் அனுபவத்தை ஞானத்தின் முதல் படி என்றார் புத்தர். அதனை ஓர் உண்மை என்றார். துக்கம், துக்கத்திற்கான காரணம், துக்க நிவாரணம் மற்றும் துக்க நிவாரண மார்க்கம் என ஒட்டுமொத்த மானுடத்துக்கும் விடுதலையின் பாதையைக் காட்டினார். கயாவிலோ அல்லது லடாக்கிலோ புத்த பூர்ணிமாவைக் கொண்டாடத் திட்டமிட்டுள்ளேன். ததாகதரின் அருள்வெளியில் சில தினங்கள். 2020ம் ஆண்டு மே மாதம் 7ம் நாள் புத்த பூர்ணிமா.




4. கணேஷ் சதுர்த்தி
சிவ கணங்களின் தலைவன் கணேசன். மாவீரன் ஆயினும் குழந்தை மனம் படைத்தவன். பேரறிஞன் எனினும் எளியவன். இந்தியாவில் இந்தியர்கள் மனதுக்கு மிகவும் பக்கத்தில் உணரும் கடவுள் விநாயகர். எந்த சடங்காயினும் முதல் மரியாதை அவருக்கே. மராத்தியம் விநாயகர் வழிபாட்டில் மிகவும் முன்னோடியான மாநிலம். திலகர் கணேஷ் சதுர்த்தியை மாபெரும் விழாவாக்கிய பூனாவில் கொண்டாடலாம் என இருக்கிறேன். 2020ம் ஆண்டு ஆகஸ்டு 22 அன்று கணேஷ் சதுர்த்தி



5. ஓணம்
கேரளா ஆலய மரபைப் பேணுவதிலும் சமயச் சடங்குகளை சிரத்தையுடன் மேற்கொள்வதிலும் முதன்மையான மாநிலம். காலைப் பொழுதில் ஏதேனும் ஓர் கேரள ஆலயத்தில் இருப்பது என்பதே மறக்க முடியாத அனுபவமாக இருக்கும். ஒட்டுமொத்த கேரளமும் கொண்டாடும் பண்டிகை ஓணம். 2020ம் ஆண்டு ஆகஸ்டு-31 அன்று ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது.


6. துர்கா பூஜை
வங்காளம் சாக்தத்தின் மண். வைணவமும் சாக்தமும் செழித்து வளர்ந்த மண் வங்காளம். தீமையை அழிப்பவளாக - இல்லாமல் செய்பவளாக காளி வணங்கப்படுகிறாள். 2020ம் ஆண்டு அக்டோபர் 25 அன்று கல்கத்தாவில் துர்கா பூஜையைக் கொண்டாடலாம்.


7. குருநானக் ஜெயந்தி
பஞ்சாபில் குருநானக் ஜெயந்தி மிகப் பெரிய விழாவாகக் கொண்டாடப்படும். இந்திய வரலாற்றில் சீக்கியம் அளித்திருக்கும் பங்களிப்பு அளப்பரியது. சீக்கியர்கள் இல்லையெனில் வட இந்தியா இன்றிருக்கும் ஸ்திதியில் இருந்திருக்க முடியாது. இந்தியாவே இப்போதுள்ள வடிவம் கொண்டிருக்க முடியாது. வட இந்திய வரலாற்றில் குரு நானக்கும் குரு கோவிந்த் சிங்கும் மிகவும் முக்கியமானவர்கள். குரு நானக் அன்பையும் அமைதியையும் போதித்த ஆன்மீக குரு. அவரது உபதேசங்கள் ‘’குரு கிரந்த சாகிப்’’ என தொகுக்கப்பட்டது. குருத்வாராக்களில் அந்நூலே வழிபடப்படுகிறது. அந்நூலில் ராமன் பெயரும் கிருஷ்ணன் பெயரும் சொல்லப்பட்டுக் கொண்டேயிருக்கிறது.

குரு கோவிந்த் சிங் சீக்கியத்தை வீரம் செறிந்த சமயமாக்கினார். சிட்டுக்குருவிகளுக்கு வல்லூறை எதிர்க்கும் ஆற்றலைக் கொடுப்பேன் என்றார். அவர் உருவாக்கிய படை ‘’கால்சா’’. கேசம், கங்கணம். சீப்பு, குறுவாள், வாள் ஆகிய ஐந்தும் ஒவ்வொரு சீக்கியனும் கை கொள்ள வேண்டியவை. இன்றும் இந்திய ராணுவத்தில் மிக அதிக அளவில் பங்களிப்பவர்கள் சீக்கியர்களே.

குருத்வாராக்கள் பக்தர்களுக்கு உணவளிப்பதை கடவுளுக்குச் செய்யப்படும் பணியாக நினைக்கின்றன. பஞ்சாப்பில் குரு நானக் ஜெயந்தி மிகப் பெரிய கொண்டாட்டம்.2020ம் ஆண்டு நவம்பர் 30 அன்று குருநானக் ஜெயந்தி. அதை அமிர்தசரஸில் கொண்டாட வேண்டும்.


8. ரத யாத்திரை
ஒரு குடும்பத்தின் குழந்தைகள் தெய்வமாக வணங்கப்படும் இடம் பூரி. கிருஷ்ணன், பலராமன் மற்றும் சுபத்ரா. லட்சக்கணக்கான மக்கள் கூடும் பூரி ரத யாத்திரை ஒரு மாபெரும் கொண்டாட்டம். ஜூலை மாதத்தில் இவ்விழா நடைபெறும்.


9. கோகுலாஷ்டமி
இந்தியர்கள் மனதில் ராமனுக்கும் கிருஷ்ணனுக்கும் இருக்கும் இடம் மகத்தானது. இந்தியர்களுக்கு கண்ணன் ஒரு குழந்தை. கண்ணன் ஒரு நண்பன். கண்ணன் ஒரு காதலன். கண்ணன் ஓர் ஞான ஆசிரியன். பிருந்தாவனத்தில் கண்ணன் பிறந்த அந்த நாளில் மதுராவில் இருக்க வேண்டும். 2020ம் ஆண்டு செப்டம்பர் 10 அன்று ஜென்மாஷ்டமி.


10. ஹோலி
ஹோலி வசந்தத்தின் வண்ணங்களின் திருவிழா. பல வண்ணம் கொள்ளும் போதே வாழ்க்கை அழகாகிறது. ஹோலி அழகின் திருவிழாவும் கூட. 2020ம் ஆண்டு மார்ச் 9 அன்று ஹோலி கொண்டாடப்படுகிறது.


11. பீகார் கால்நடைத் திருவிழா
அக்டோபரை ஒட்டி பீகாரில் உள்ள சோன்பூரில் உலகின் மிகப் பெரிய கால்நடைச் சந்தை கூடும். யானைகள், ஒட்டகங்கள், பசுக்கள், எருமைகள், ஆடு, கோழி என அனைத்து மிருகங்களும் விற்பனை செய்யப்படும். இந்தியர்களின் வாழ்வில் கால்நடைகள் மிக முக்கியமான உணர்வுபூர்வமான தொடர்பைக் கொண்டவை. உலகின் மிகப் பெரிய கால்நடைச் சந்தையில் இருப்பது என்பது முக்கியமான அனுபவமாக இருக்கக் கூடும். 

                                                                                                                                                                    12. ராஸ லீலா

அஸ்ஸாமில் மஜூலி பகுதியில் அக்டோபர் - நவம்பர் மாதங்களில் ராஸ லீலா பாரம்பர்ய நடனங்களுடன் கொண்டாடப்படுகிறது. 
                         

பரவசமூட்டும் பன்னிரண்டு பயணங்களுக்கு - பன்னிரண்டு திருவிழாக்களுக்கு நான் தயாராகிக் கொண்டிருக்கிறேன். நீங்கள் உடன் வருகிறீர்களா?