Friday 13 December 2019

எட்டு தினங்கள்

சென்ற வெள்ளியன்று நண்பருடன் மருத்துவமனை சென்றதிலிருந்து இன்று வரை பல்வேறு விதமான மருத்துவமனைகளில் பல்வேறு விதங்களில் உடனிருந்து விட்டேன். நண்பர் இப்போது நலமாக இருக்கிறார். சென்ற வெள்ளி அவரை மயிலாடுதுறையிலிருந்து கும்பகோணம் அழைத்துச் சென்றேன். பின்னர் அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சாவூர். அவருடைய உறவினர்கள் அங்கு வந்த பின் ஊருக்கு வந்தேன். அவர் நான்கு நாட்கள் மருத்துவமனையில் இருந்தார். அந்த நான்கு தினமும் தஞ்சாவூர் சென்று பார்த்து வந்தேன். பின்னர் தஞ்சாவூரிலிருந்து டிஸ்சார்ஜ் செய்து மயிலாடுதுறை அழைத்து வந்தோம். மறுநாள் இரவே அவரை மருத்துவ ஆலோசனைக்காக ரயிலில் சென்னை அழைத்துச் சென்றோம். நானும் உடன் சென்றேன். நேற்று காலை 6 மணிக்கு சென்னை எழும்பூரை ரயில் அடைந்தது. அவர் உறவினர்களுடன் அவரை அனுப்பி வைத்து விட்டு நான் 8 மணி சோழன் எக்ஸ்பிரஸில் ஊருக்கு உடன் புறப்பட்டேன். அவரும் அவரது உறவினர்களும் வீட்டுக்கு வந்து விட்டு செல்லுமாறு வற்புறுத்தினர். ஒரு வாரம் ஊரில் முழுமையாக இல்லாமல் அலைச்சல் இருந்ததால் சில பணிகள் நிலுவையில் இருந்தன. எனவே உடன் கிளம்பினேன். வங்கியில் சில வேலைகள். நேற்று அவற்றைப் பார்த்தேன். ஒரு நண்பருக்கு ரியல் எஸ்டேட் சிக்கல். அவருக்கு சில ஆலோசனைகளைச் சொன்னேன். மனம் முழு ஓய்வு பெற்று இயல்பு நிலைக்கு முற்றும் திரும்பிவிடவில்லை. நேற்று ரயிலில் பயணித்த போது சக பயணிகளில் ஒருவர் முப்பது வயதான ஒரு பெண்மணி. சிறுநீரகம் பாதிக்கப்பட்டு டயாலிசிஸ் செய்து வருகிறார். தனது சிகிச்சை விபரங்களைக் கூறிக் கொண்டு வந்தார். மனம் மிகவும் சஞ்சலமாயிருந்தது. அலைந்து கொண்டேயிருக்கிறேன் என வீட்டாருக்கு மனக்குறை. சில நாட்களாவது வீட்டில் தொடர்ந்து இருக்க வேண்டும்.