Monday 27 January 2020

பழக்கம்

சில மாதங்களுக்கு முன், ஸ்மார்ட்ஃபோனைப் பயன்படுத்தும் எனது நண்பர் ஒருவரைப் பற்றி ஒரு குறிப்பு எழுதியிருந்தேன்.

தேவையும் அவசியமும்

இப்போது மீண்டும் இன்னொரு நிகழ்ச்சி. இன்னொரு நண்பருக்கு.

சென்ற வாரம் அவரைச் சந்தித்தேன். மங்கல நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக திண்டுக்கல் சென்று வந்ததாகச் சொன்னார். நான் சந்தித்த தினத்துக்கு முதல் நாள் கிளம்பியிருக்கிறார். நான் பார்த்த அன்று காலை ஊர் திரும்பியிருந்தார். முதல் நாள் காலை அவர் கிளம்பிய நேரம் காலை 4 மணி.

‘’ரயிலில் தானே சென்றீர்கள்?’’ யதார்த்தமாகக் கேட்டேன்.

‘’இல்லை. பஸ்ஸில் சென்றேன். ‘’

‘’ஏன் பஸ்ஸில் சென்றீர்கள். அந்த நேரத்துக்கு சென்னை தாம்பரம் - நாகர்கோவில் அந்த்யோதயா இருக்குமே? திண்டுக்கல்லுக்கு காலை எட்டு மணிக்கே சென்று விடுமே?’’

‘’அந்த ரயில் இருப்பதை மறந்து விட்டேன்’’

‘’உங்களிடம் ஸ்மார்ட்ஃபோன் இருக்கிறதே. முதல் நாள் இரவே என்னென்ன ரயில்கள் இருக்கிறது எனப் பார்த்திருக்கலாமே? பஸ் ஸ்டாண்ட் வந்த பின்பு கூட அந்த ரயில் மயிலாடுதுறை ரயில் நிலையம் வந்து விட்டதா எனப் பார்த்து அறிந்திருக்கலாமே?’’

‘’காலை 4 மணிக்கு பஸ் ஏறினேன். பஸ் எடுக்க 4.45 ஆனது. அப்போதுதான் அந்த்யோதயா ஞாபகம் வந்தது. ரயில் ஆப்-ஐ ஆன் செய்து பார்த்தேன். ரயில் பாபநாசத்தைத் தாண்டி போய்க் கொண்டிருந்தது. பஸ்ஸில் செல்லும் போதெல்லாம் அந்த ரயிலின் இயக்கத்தை ஜி.பி.எஸ்-ல் பார்த்துக் கொண்டிருந்தேன். திண்டுக்கல்லுக்கு மதியம் ஒரு மணிக்குச் சென்றேன். ரயில் அப்போது திருநெல்வேலியைத் தாண்டியிருந்தது. ’’

ஒரே நேரத்தில், பஸ்ஸிலும் மானசீகமாக ரயிலிலும் பயணித்திருக்கிறார் என்று எண்ணிக் கொண்டேன்.