Monday 17 February 2020

ஒரு துயர்

இன்று காலை எட்டு முப்பது மணியளவில் வீதியில் படுத்திருந்த நாயினை விலகச் செய்ய பள்ளி வாகனம் ஒன்று ஹாரன் எழுப்பியது. மிகக் கடுமையான ஹாரன் இரைச்சல். சுற்றிலும் வசிப்பவர்கள் அனைவரும் ஏதோ அசம்பாவிதமோ என அஞ்சி வாசலுக்கு வந்தனர். அந்த நாய் சற்று நோயுற்றிருந்திருக்கிறது. ஆதலால் அது நகர சற்று தாமதமானது. அந்த பள்ளி வாகன ஓட்டுநர் குரூரமான மனோபாவத்துடன் அந்த நாயின் மீது வாகனத்தை ஏற்றி விட்டு சென்றார். அதன் உடலிலிருந்து குருதி முற்றிலும் பிழியப்பட்டு தார்ச்சாலையில் ரத்தம். நான் கால்நடைகளுக்கான மருந்தகத்துக்குச் சென்று ஆயின்மெண்ட் வாங்கி வந்தேன். காயத்தின் மேற்பரப்பில் ஆயின்மெண்ட் இட்டேன். நிகழ்ந்த சம்பவம் குறித்து வருவாய்த்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தேன். அவர்கள் நடவடிக்கை எடுப்பதாகக் கூறினர். 

அதன் மூச்சு மெலிதாய் ஓடிக் கொண்டிருக்கிறது. கண்களை மட்டும் லேசாகத் திறக்கிறது. அதற்கு தினமும் சோறிடும் குடும்பத்தின் குழந்தைகள் டைகர் என்றால் லேசாக வாலை ஆட்டுகிறது.