Wednesday 22 April 2020

மாலை உரையாடல்கள் - 10

’’தம்பி! இந்த பத்து நாள் நாம பல விஷயம் பேசியிருக்கோம். இதுநாள் வரைக்கும் எனக்குத் தெரியாத பல விஷயங்களை நீங்க சொல்லியிருக்கீங்க. முதல் தடவையா இந்த மாதிரி விஷயங்களைக் கேட்கிறேன். நானும் பட்டப்படிப்பு படிச்சன். தினமும் நியூஸ் பேப்பர் படிக்கிறன். ஆனா இது எதுவுமே இத்தனை நாள் தெரியாம இருந்துட்டனேன்னு வருத்தமா இருக்கு தம்பி” . நண்பர் மிகவும் விசனப்பட்டார்.

தமிழ்நாட்டில் திராவிட இயக்கம் என்பது ஒரு பாப்புலிச இயக்கம். பல்வேறு யுக்திகளால் ஜனத்திரளைக் கூட்டி அவர்கள் உணர்ச்சிகளை ஒரு இல்லாத எதிரியைக் கட்டமைத்து அவர்கள் மேல் வெறுப்பை உண்டாக்கி அவர்களால்தான் நாம் வளராமல் இருக்கிறோம் என்ற எண்ணத்தை தொடர்ச்சியாக விதைப்பது அவர்களுடைய அரசியல் பாணி. இன்று தமிழ்நாட்டில் அவர்களுடன் இணைந்து செயல்படுபவர்கள் அவர்களை எதிர்ப்பவர்கள் கூட திராவிட இயக்கம் பின்பற்றும் அரசியல் பாணியையே பின்பற்றும் அளவுக்கு தமிழ் மக்கள் மனத்தில் வெறுப்பு அரசியல் வேரூன்றி உள்ளது. பெரும்பாலான பத்திரிக்கைகள் திராவிட இயக்க ஆதரவாளர்களான பத்திரிக்கையாளர்களால் ஆனவை. திராவிட இயக்கம் உருவாக்கும் தேய்வழக்குகளும் மனோநிலைகளும் தமிழ் நாட்டில் பரவரலான பொதுஜனங்களிடம் கூட பதிந்திருப்பது தமிழ்நாட்டின் துரதிர்ஷ்டங்களில் ஒன்று.

நம் நாட்டின் பண்பாடு என்பது மதம் தொடர்பானது அல்ல. அதனுடன் நீதி உணர்வும் மனித நேயமும் மானுட ஒருமைப்பாடும் இணைந்து இருக்கிறது. தனிப்பட்ட அரசியல் நலன்களுக்காக நம் பண்பாட்டின் மீது தமிழ்நாட்டில் தொடர்ந்து தாக்குதல் தொடுக்கப்படுகிறது. இதனை தமிழ்நாட்டின் குடிமக்கள் உணர வேண்டும்.

நாம் மக்களாட்சியில் 73 ஆண்டுகளாக இயங்கி வருகிறோம். இன்று நமது தேசம் அதன் பயணத்தைத் தொடங்கிய 1947லிருந்து கணக்கிட்டால் ஒரு நிலையான இடத்திற்கு வந்திருக்கிறது. நமது நாட்டின் குடிமக்கள் இணைந்து ஒரு முன்னேற்றமான சமூகமாக மாறுவதற்கான காலகட்டம் இது. 

தமிழ்நாட்டின் குடிமக்களைத் தினமும் பாதிக்கும் பிரச்சனைகள்:

1. தமிழ்நாடு அரசாங்கம் மது விற்கிறது. தமிழ்நாட்டுப் பெண்களின் உழைப்பை தினமும் உறிஞ்சி மீளாத் துயரில் அவர்களை ஆழ்த்தும் செயல் இது.

2. வாக்குக்குப் பணம் தருதல் என்பது தமிழ் மக்களின் அகத்தை கறை படிந்ததாக ஆக்குகிறது. 

3. நீர் ஆதாரங்கள் அழிக்கப்படுகின்றன. அது குறித்த அடிப்படை அறிவோ புரிதலோ கூட தமிழ் மக்களிடம் இல்லை.

4. அரசு அலுவலகங்களில் புறையோடிப் போயிருக்கும் லஞ்சம்.

5. கல்வித்தரம் பெரும் பாதிப்பைச் சந்திந்துள்ளது. அதனால் நம் மொழிக்கே பேராபத்து நிகழ்ந்துள்ளது. 

இந்த முக்கிய விஷயங்களின் மீது கவனம் திரும்பாமல் இருக்கவே இங்கே வெற்று அரசியல் கோஷங்கள் முன்வைக்கப்பட்டுக் கொண்டேயிருக்கின்றன.

மேடையில் இல்லாத எதிரியை உருவாக்கிக் கத்தும் வெறுப்பு அரசியல் பேச்சுக்களை நம்பாமல் எது தொடர்பான முடிவை எடுப்பதற்கும் முன்னால் அதன் மறுதரப்பு என்ன அதன் உண்மைத்தன்மை என்ன ஆராய்வதற்குத் தேவைப்படும் மூளை உழைப்பை நல்குவது தமிழ்ச் சமூகத்துக்கு நலம் பயக்கும்.