சாம் ஒவ்வொரு கணத்தையும் கொண்டாடிக் கொண்டிருக்கிறான். தினந்தோறும் புதிது புதிதாக எதையேனும் அறிந்த வண்ணமும் உணர்ந்த வண்ணமும் இருக்கிறான். நிலம் என்பது அவனுக்குத் தோண்டப்பட வேண்டியது. மணற்கேணி என நிலம் அவனுக்கு அறிவின் ஊற்றாக வெளிப்பட்டுக் கொண்டேயிருக்கிறது. முன்னங்கால்களால் அவசர அவசரமாக எப்போதும் தோண்டியவாறிருக்கிறான். பின்னர் அந்த பள்ளத்தில் படுத்துக் கொள்வது. ஒற்றைச் செருப்பைக் கொண்டு போய் அதில் இட்டு நிரப்புவது. பழைய வாட்டர் பாட்டிலைக் கவ்வி கவ்வி இங்கும் அங்கும் கொண்டு போய் போடுவது. ஏதாவது வேலை இருந்து கொண்டேயிருக்கிறது அவனுக்கு. அவனது உற்சாகம் காணும் அனைவரையும் தொற்றக் கூடியது. இப்போது அவனது உலகில் குதூகலம் மட்டுமே இருக்கிறது.
அவன் உணவு உண்ணும் வேகம் ஆச்சர்யம் தருகிறது. படர்ந்து மேலெழும் தீயென வளர்ச்சி கொள்கிறான். பால், சோறுணவு, பிஸ்கட் எதைக் கொடுத்தாலும் அள்ளி விழுங்குகிறான். தண்ணீர் குடிக்கும் அழகே அழகு. பசியையும் தாகத்தையும் வென்று கடந்து இப்புவியின் சாரங்கள் என்ன எனத் தேடுபவனாக மாறிக் கொண்டிருக்கிறான் சாம்.
நாய்களின் உலகம் அற்புதமானது. குட்டி நாய்களின் உலகம் மேலும் அற்புதமானது. இந்த உலகை மேலும் அற்புதமாக்கிக் கொண்டிருக்கிறான் சாம்.