Tuesday 21 July 2020

நீறு பூத்த நெருப்பு

வேதத்தி லுள்ளது நீறு வெந்துயர் தீர்ப்பது நீறு
போதந் தருவது நீறு புன்மை தவிர்ப்பது நீறு
ஓதத் தகுவது நீறு வுண்மையி லுள்ளது நீறு
சீதப் புனல்வயல் சூழ்ந்த திருவால வாயான் திருநீறே.

-திருஞானசம்பந்தர், திருநீற்றுப் பதிகம்

இன்று காலை எனக்கு ஒரு புது யோசனை உதித்தது.

ஓர் ஆங்கிலக் கவிதை உள்ளது.

ஒரு சிறு குன்றை ஏறிக் கடக்கும் ரயில் என்ஜின் பாடும் பாடல்.

I think, I can, I think, I can

ஏறிக் கடந்த பின்

I knew i can, I knew i can

என்று பாடும்.

மனத்தில் முழுமையாக கிராம முன்னேற்றம் குறித்த எண்ணங்களே ஓடிக் கொண்டிருக்கின்றன. எனக்கு அது ஒரு விதமான புது அனுபவமாக இருக்கிறது. நடைமுறை சாத்தியமான விஷயத்தை முன்வைத்தால் மக்கள் வரவேற்கிறார்கள் என்பதை நேரடியாக உணர்ந்தது காரணமாக இருக்கலாம்.

காந்தியப் பொருளியல் அறிஞர் ஜே.சி. குமரப்பாவிடம் வயல்களில் உழவுக்கு டிராக்டர் பயன்படுத்துவது குறித்து கேட்ட போது அவர் டிராக்டர் சாணி போடுமா என்று கேட்டதாகக் கூறுவார்கள். அது மிகவும் பொருள் பொதிந்தது. நமது நாட்டில் ஆயிரமாயிரம் ஆண்டுகளாக ஆவினங்கள் விவசாயத்தின் ஒரு பகுதியாக – முதன்மையான முக்கியமான பகுதியாக – இருந்திருக்கின்றன. பசுவின் பாலை விடவும் வெண்ணெய், நெய் போன்ற பாலிலிருந்து உற்பத்தியாகும் பொருட்களே அதிக அளவில் உணவுப் பயன்பாட்டில் இருந்திருக்கிறது. கிருஷ்ணனின் கிராமமான கோகுலத்தில் ஆய்ச்சியர் மோரைக் கடைந்து வெண்ணெய் எடுக்கும் சித்திரம் மகாபாரத காவியத்திலேயே உள்ளது. மேலைச் சிந்தனைகள் மீது நமக்கு இருந்த வழிபாடு நமது விவசாயத்தில் டிராக்டர் போன்ற எந்திரங்களை அதிகமாக்கி ஆவினங்களுக்கும் விவசாயத்துக்குமான தொடர்பை பெருமளவு குறைத்தது.

மரக்கன்றுகள் நட உள்ள கிராமத்தில், மரக்கன்றுகள் நட்டு முடித்த பின், இந்த எண்ணத்தை மக்களிடம் சொல்லி அவர்களுடைய ஆலோசனைகளைப் பெற்று இதனைச் செயல்படுத்தலாம் என இருக்கிறேன். I think I can.

1. ஒரு கிராமத்தை எடுத்துக் கொள்வோம். அதில் 500 குடும்பங்கள் உள்ளன எனக் கொள்வோம்.

2. ஒரு ஏக்கர் பரப்புள்ள ஒரு பொது இடம் ஒன்றைத் தேர்ந்தெடுத்துக் கொள்வது. அதில் ஒரு பெரிய கொட்டகை அமைத்து அதில் கறவை நின்று போன 500 நாட்டுப் பசுமாடுகளைப் பராமரிப்பது.

3. ஒவ்வொரு மாட்டுக்கும் கொட்டகையில் 6 அடிக்கு 10 அடி என தனித்தனியான இடம் ஒதுக்கப்படும்.

4. பசுக்கள் இலக்கமிடப்பட்டு ஒவ்வொரு குடும்பத்துக்கும் இன்ன மாடு என்பது அடையாளப்படுத்தப்படும்.

5. கொட்டகைக்குப் பக்கத்திலேயே மூன்று ஏக்கர் அளவில் பகலில் மாடுகள் உலவுவதற்கு ஓர் இடம் உருவாக்கப்படும்.

6. பசுக்கள் மாலை 6 மணியிலிருந்து காலை 6 மணி வரை மட்டுமே கொட்டகையில் இருக்கும். பகலில் பக்கத்தில் உள்ள வேலியிடப்பட்ட இடத்தில் உலவிக் கொண்டிருக்கும்.

7. காலை 6 மணிக்குக் கொட்ட்கைக்கு வரும் ஒருவர் தனக்குரிய மாட்டுக்கு 20 கிலோ பசுந்தீவனம் கொண்டு வர வேண்டும். பசுந்தீவனம் சந்தையில் கிலோ ரூ. 2 என்ற அளவில் கிடைக்கிறது. அதனை பசுமாட்டுக்கு அளிக்க வேண்டும். அவர் கொண்டு வரும் பசுந்தீவனம் எடை போடப்பட்டு குறித்துக் கொள்ளப்படும். தனது மாட்டை கொட்டகைக்கு அருகில் உள்ள வெளியில்  அந்த மாடு கட்டப்பட்டிருக்கும் 60 சதுர அடி பரப்பைத் தூய்மை செய்து அதில் இருக்கும் சாணத்தை சிறு சிறு ராட்டிகளாகத் தட்டி காய வைக்க வேண்டும். இந்த பணிகள் காலை 6 மணிக்குத் தொடங்கினால் அதிகபட்சம் ஒரு மணி நேரம் தேவைப்படும். எத்தனை ராட்டிகள் தட்டப்பட்டுள்ளது என்பதும் குறித்துக் கொள்ளப்படும்.

8. போதிய பணியாளர்களைக் கொண்டு கொட்டகையில் மாடுகளுக்குத் தண்ணீர் வைக்கப்படும். அவற்றின் ஆரோக்கியம் பராமரிக்கப்படும். திறந்த வெளியில் மாடுகள் இடும் சாணம் சமமாகப் பிரிக்கப்பட்டு ராட்டிகள் தயாரிக்க வழங்கப்படும். ராட்டிகள் தீயிலிடப்பட்டு திருநீறாக மாற்றும் பணியை சில பணியாளர்கள் மேற்கொள்வார்கள்.

9. ஒரு நாட்டு மாடு ஒரு நாளைக்கு 10 கிலோ சாணமிடும். அந்த சாணத்திலிருந்து ஒரு கிலோ திருநீறு தயாரிக்க முடியும். ஒரு கிலோ திருநீறின் விலை ரூ. 400.

10. ஒவ்வொருவரும் மாட்டுக்கு அளிக்கும் உணவின் விலை ரூ. 40. பணியாளர்களின் நிகர ஊதியம் ஒரு மாட்டுக்கு ரூ.10 எனக் கொள்வோம். நெற்பதர் முதலிய செலவுகள் ரூ. 50 எனக் கொள்வோம். ஒரு மாட்டுக்கு தினமும் ஆகும் செலவு ரூ. 100. ஒரு கிலோ விபூதி மூலம் கிடைப்பது ரூ. 400. நிகர லாபம் ரூ. 300.

ஒரு சுவாரசியமான விஷயம்

ஒரு கிராமத்தில் விவசாயம் செய்யப்படும் நிலம் சராசரியாக 500 ஏக்கர். ஒரு போகத்தில் ஒரு ஏக்கருக்கு ரூ. 20,000 லாபம் கிடைப்பதாகக் கூறுகிறார்கள். இரண்டு போகம் ஆகவே லாபம் ரூ.40,000. 500 ஏக்கருக்கு லாபம் ரூ. இரண்டு கோடி.

500 நாட்டுப் பசுமாடுகளைக் கொண்டு திருநீறு தயாரிக்கும் விஷயத்தில் ஒரு மாட்டிலிருந்து ஒரு நாளைக்கு லாபம் ரூ. 300. 500 மாட்டிலிருந்து ஒரு நாளைக்கு லாபம் ரூ. 1,50,000. 500 மாட்டிலிருந்து ஒரு வருடத்தில் லாபம் ரூ. ஐந்து கோடியே நாற்பத்து ஏழு லட்சத்து ஐம்பதாயிரம்.

500 நாட்டுப் பசுமாடுகள் உருவாக்கும் செல்வம் விவசாய வருமானத்தைப் போல இரண்டரை மடங்கு.

வினாக்களும் விடைகளும்

1. இது சாத்தியமா?

எல்லா புதிய முயற்சிகளும் முன்னெடுப்புகளும் யோசனைகளும் இது சாத்தியமா என்ற வினாவை எப்போதும் எதிர்கொள்ளவே செய்கின்றன. இது சாத்தியமே. கிராம மக்கள் வீட்டுக்கு ஒருவர் என ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் மட்டுமே கொடுக்கின்றனர். ஒரு மணி நேர உடல் உழைப்பையும் 20 கிலோ பசுந்தீவனமும் நெற்பதரும் மட்டுமே கொடுக்கின்றனர். அவர்கள் ஈட்டும் லாபம் ஒரு நாளைக்கு ரூ. 300. இது விவசாயிகளுக்கு லாபம் தருவது எனவே 100 சதவீதம் சாத்தியமானது.

2. உற்பத்தியாகும் அவ்வளவு விபூதிக்கும் விற்பனை வாய்ப்பு எப்படி?

ஒரு கிராமத்தில் உள்ள எல்லா குடும்பமும் இந்த விஷயத்தில் தங்கள் பங்களிப்பை வழங்கி பயன் பெற உள்ளனர். இந்த முயற்சியை ஆவினங்களை நேசிப்பவர்களும் திருநீறு அணிபவர்களும் பெருமளவில் வரவேற்பர். தேவை மிக அதிகமாகவே உள்ளது. உற்பத்திதான் குறைவு.

3. கிராமத்துக்கு வெளியில் இருப்பவர்கள் எவ்விதம் இதில் பங்கேற்கலாம்?

பசுப் பாதுகாப்பிலும் விவசாயிகள் நலனிலும் அக்கறை உள்ளவர்கள் இதில் பங்கு பெற விரும்பினால் உற்பத்தியாகும் திருநீறை வாங்கிக் கொண்டாலே போதுமானது.

4. இதில் வேறு ஏதாவது வணிக நோக்கங்கள் உள்ளனவா?

ஒரு கிராமத்தின் மக்களே முழுமையாக இதில் ஈடுபடப் போகிறார்கள். முழுக்கப் பயன் பெறப் போவதும் அவர்களே.

கிராமியப் பொருளாதாரத்தில் நம்பிக்கை கொண்டவர்கள் இதை மேலும் செழுமையாக்க ஆலோசனை தரலாம்.

தொடர்புக்கு: ulagelam(at)gmail(dot)com