Wednesday 21 October 2020

ஆசான் சொல் - 3

மனநலம் மன்னுயிர்க் காக்கம் இனநலம்

எல்லாப் புகழும் தரும். (457)

 

இன்று மனநலம் என்ற வார்த்தை பரவலாகப் பயன்படுத்தப் படுகிறது. அதனை முதலில் திருவள்ளுவர் பயன்படுத்தியிருக்கிறார். பௌத்தம் மனத்தை தூய வாழ்க்கைப் பாதைக்கான கருவியாகப் பயன்படுத்த முடியும் என்கிறது. பௌத்தத்தின் எண் பெரும் நெறிகள் மனத்தின் மீது ஆளுகை கொள்வதற்கானவையே.

மனநலம் – ஆரோக்கியமான மனம். ஆரோக்கியமான மனம் ஒரு தனி மனிதனின் ஆத்ம சாதனைக்கும் ஆன்மீகப் பாதையில் அவன் முன்னேற்றத்துக்கும் பெரிய அளவில் உதவும்.

இனநலம் – இங்கே இனம் என்ற சொல் ஒத்த மனம் கொண்டு இணைந்து ஒரே இடத்தில் வாழ்பவர்களையும் செயல் புரிபவர்களையும் குறிக்கிறது. இந்திய மரபில் ‘’சத்சங்கம்’’ என்ற ஒன்று உண்டு. ஒரு நற்செயல் புரிய விரும்புபவர்கள் இணைந்து இருக்க வேண்டும். ’’சத்சங்க’’த்தின் வழிமுறை ஒன்றிணைதல். பொதுப் புரிதலின் அடிப்படையில் இணைந்து ஒருவருக்கொருவர் பரஸ்பரம் உதவி வாழ்பவர்களையே திருவள்ளுவர் ‘’இனம்’’ என்ற சொல்லால் சுட்டுகிறார்.

வாழ்க்கை குறித்த மேலான பார்வை கொண்டோருடன் இணைந்து இருத்தலும் இணைந்து செயல்படுதலுமே பல நன்மைகளை உருவாக்கித் தரும்.