Monday 26 October 2020

விஜயதசமி

சில ஆண்டுகளுக்கு முன்னால், விஜயதசமி தினத்தன்று மயிலாடுதுறையிலிருந்து ரிஷிகேஷ் வரை நீண்ட மோட்டார்சைக்கிள் பயணம் ஒன்றைத் துவக்கினேன்.  (காவிரியிலிருந்து கங்கை வரை). 22 நாட்கள் பயணம் அது. மொத்த தூரம் 6166 கி.மீ. 

இன்று காலை மரக்கன்றுகள் வழங்கிக் கொண்டிருக்கும் கிராமத்துக்குக் கிளம்பிச் சென்றேன். அங்கே சென்று கொண்டிருக்கும் போது சட்டென நான் மேற்கொண்ட மோட்டார்சைக்கிள் பயணத்தை விஜயதசமி அன்று துவக்கியது நினைவுக்கு வந்தது. எண்ணற்ற கிராமங்கள். பல்வேறு விதமான கிராம மக்கள். பல மொழி பேசுபவர்கள். அவர்கள் காட்டிய அளவற்ற பிரியம். எந்த முன்னேற்பாடும் இன்றி இந்த நாட்டில் எங்கு வேண்டுமானாலும் கிளம்பிச் செல்லலாம் என்ற நம்பிக்கையை அவர்கள் நாளும் பயணிகளுக்கு அளித்துக் கொண்டிருக்கிறார்கள். ‘’அதிதி தேவோ பவ’’ என்ற சொல்லின் பொருளாக விளங்குபவர்கள். 

உண்மையில், அந்த பயணம்தான் ஏதேனும் ஒரு கிராமத்துக்கு முழுமையாக ஏதேனும் செய்ய வேண்டும் என்ற உந்துதலை அளித்தவாறே இருக்கிறது. எனது கடமையை முழுமையாகச் செய்கிறேன் - முயற்சிகளை முழுமையாக அளிக்கிறேன். முயற்சிகள் முழுமையாக இருக்கையில் திட்டமிடல் துல்லியமாக இருக்கையில் நல்ல பயன் நிச்சயமாகக் கிடைக்கும் என்பதை அனுபவபூர்வமாக உணர்கிறேன். 

இன்று கிராமத்தில் பார்த்த பல விவசாயிகள், அவர்கள் தோட்டத்திற்கு வந்து நன்றாக வளரும் மரக்கன்றுகளைப் பாருங்கள் என்கிறார்கள். மரக்கன்றுகள் நல்ல வளர்ச்சி பெறும் தோறும், அவர்களுக்கு என் மீதான பிரியம் கூடிக் கொண்டே செல்கிறது. 

அன்பு நிறைந்த அந்த முகங்களிலிருந்து, மேலும் செயல் புரிவதற்கான ஊக்கத்தை அடைகிறேன்.