Saturday 28 November 2020

அனந்தம்

நாளை திருக்கார்த்திகை. நாடெங்கும் மாலை அந்தியில் தீபங்கள் மலரக் கூடிய தினம். நாளை காலை, செயல் புரியும் கிராமத்துக்குச் சென்று, அங்குள்ள ஆலயத்தில் ஏழு தீபங்கள் ஏற்றி விட்டு ‘’காவிரி போற்றுதும்’’ செயலின் அடுத்த படியான ‘’பத்து கிராமங்கள்’’ என்னும் இலக்கை நோக்கி நகர உள்ளோம். திருக்கார்த்திகை அந்தியன்று செயல் புரியும் கிராமத்தில் இருக்க வேண்டும் என எண்ணினேன். எனினும் நாடெங்கும் தீபம் ஏற்றப்படும் அத்தினத்தில் ஒரு செயல் தொடக்கத்தை நிகழ்த்துவது மேலும் பொருத்தமாக இருக்கும் என்று தோன்றியது. எனவே காலை அந்தியில் அங்கு சென்று தீபம் ஏற்றி விட்டு அடுத்த கிராமத்தின் கணக்கெடுப்புப் பணியைத் துவக்குகிறேன். கணக்கெடுப்பு காலை 6 மணிக்குத் துவங்கும். மாலை 4 வரை கணக்கெடுப்பு நிகழும். ஒரு நாளைக்கு 70 வீடுகளைல் உள்ள விவசாயிகளைச் சந்திக்க முடியும்.  ஒரு கிராமம் என்பதில் 500 வீடுகள் இருக்கும். முழுமையாகக் கணக்கெடுக்க ஒரு கிராமத்துக்கு ஒரு வாரம் தேவைப்படும். அடுத்த இரண்டு மாதத்தில் பத்து கிராமங்களுக்கான கணக்கெடுப்பை மேற்கொண்டிட திட்டமிட்டுள்ளோம்.

மாலைப் பொழுதில் ஐந்து மணி அளவில் வீடு திரும்பி சொந்த வேலைகளைப் பார்த்துக் கொள்ளலாம். ஒரு தீவிரமான பணியில் ஈடுபடுத்திக் கொள்ளும் போதே நம்மால் பல செயல்களை மிக இயல்பாக ஆற்ற முடியும் என்பதே நடைமுறை உண்மை. நான் அதை என் ‘’காவிரியிலிருந்து கங்கை வரை’’ மோட்டார்சைக்கிள் பயணத்தில் உணர்ந்திருக்கிறேன். ஒரு முழுநாள் பயணம் முடித்த பின்னரும் மனம் மிக உற்சாகமாக இருக்கும். புதிது புதிதாக பல எண்ணங்கள் தோன்றும். பெரும் நம்பிக்கை பிறக்கும். அடுத்த நாள் மேலும் புதிய இடங்கள் மேலும் புதிய மனிதர்கள் என தீரா ஊக்கம் பிறக்கும். 

நேற்றும் இன்றும், கணக்கெடுக்க உள்ள கிராமத்தின் வீதிகளை பார்வையிட்டு வந்தேன். நம் உள்ளுணர்வே அங்கே எவ்விதம் பணியை வடிவமைத்துக் கொள்ள வேண்டும் என வழிகாட்டி விடும். 

ரிஷிகேஷின் மாலை அந்தி நினைவில் எழுகிறது. மகாநதியின் கரையில் மானுடர் தொன்னையில் மலருடன் தீபங்களை மிதக்க விடுவர். 

நாளை, ஒரு சிறு தீபத்தை மகாநதிக்கு அர்ப்பணிக்கிறேன்.