Friday, 25 December 2020

உயிர்த்துணை (சிறுகதை)

செங்கொன்றை வாசலை நிறைத்து எதிர்வீடு வரை நிழல் பரப்பி நின்று மலர்களாக எங்கும் கொட்டிக் கிடந்தது தாரிணிக்கு மகிழ்ச்சி தந்தது. ஒரு சிறு வட்டம் பெருக்கி நீர் தெளித்து கோலமிடப்பட்டிருந்தது. கோலத்தின் கோடுகளில் பத்மாவின் விரல் ஓட்டங்களை தாரிணி கண்டு கொண்டாள்.  அதன் வெளி வட்டத்தில் மரம் போட்ட மலர்க்கோலம்.

படியேறிச் சென்றதும் மாடிவீட்டின் வாசலில் ஒரு சிறு கோலம். வெளியில் இருந்த சுவிட்சை ஒரு முறை அழுத்தினாள். சன்னமான ஒலி ஒன்றின் துணுக்கு தாரிணிக்கு மெல்ல கேட்டது.

கதவைத் திறந்தது பத்மா.

‘’தாரிணி! வா உள்ள வா’’

கைகளைப் பிடித்து அழைத்துச் சென்று நாற்காலியில் அமர வைத்தாள்.

‘’நடந்தா வந்த?’’

‘’ஹஸ்பண்டு டிராப் பண்ணார்.’’

‘’ஹஸ்பண்டு அண்ட் லவர்?’’

‘’யெஸ் யெஸ் யெஸ். ஹஸ்பண்ட், லவர், ஃபிரண்ட், கைட், ஃபிலாசஃபர் எல்லாம் அவர்தான்’’

‘’இன்னைக்கு எங்களோட டிஃபன் சாப்பிடு’’

‘’வீட்டுல சாப்டிட்டு தான் வந்தேன். நேத்து சாயந்திரத்துல இருந்து தலை சுத்தல் மயக்கம்’’

‘’தாரிணி! நல்ல சேதி ஏதாவது?’’

‘’என்ன நல்ல சேதி?’’ என்றவாறு மோகனா அறையிலிருந்து பர்வதாவுடன் வெளியே வந்தாள்.

‘’அதெல்லாம் ஒண்ணும் இல்ல. ஒண்ணும் இல்ல’’

‘’சரி சரி இப்ப இல்லன்னா என்ன? சீக்கிரம் வரட்டும்’’

‘’உடம்புக்கு என்னடா? நான் லீவு போட்டுட்டு கூட இருக்கட்டுமா?’’

‘’பத்மா மேடம் நீங்க லீவு போட்டா பிரளயம் வந்துடுமே?’’ பர்வதா சொன்னாள்.

‘’ஏன் நான் லீவு எடுத்துக்கிட்டதே இல்லையா?’’

‘’நாங்க டிரான்ஸ்ஃபர் ஆகி வந்து ரெண்டு வருஷமா உங்க கூட இந்த வீட்ல இருக்கோம். ஒருநாள் கூட லீவ் எடுத்து நாங்க பாத்ததில்லை.’’

‘’தாரிணி நீ சொல்லுடா நான் கூட இருக்கட்டுமா?’’

‘’இல்லை ஆன்ட்டி. என்னை சாயந்திரம் டாக்டர் கிட்ட கூட்டிட்டு போங்க’’

பத்மா ஆரிகமி தாள்களையும் ஆரிகமி புத்தகங்களையும் தாரிணியிடம் அளித்தாள்.

‘’ரெஸ்ட் எடுத்துக்க. இந்த புக்-ல இருக்கற உருவங்களை செஞ்சு பாரு.’’

மூவரும் காலை உணவைச் சடுதியில் முடித்து வெளியேற அவசரப்பட்டார்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு வங்கி.

‘’பால் இருக்கு. தோசை மாவு இருக்கு. கருவேப்பிலைப் பொடி மேல் ஷெல்ஃபில இருக்கு. மதியம் தோசை சாப்பிடு. சாயந்திரம் நான் நொய்யரிசிக் கஞ்சி வச்சு தர்ரேன்.’’

சாய்வு நாற்காலியில் அமர்ந்து கொண்டாள் தாரிணி. கால்களை நீட்டிக் கொண்டாள். மின்விசிறி காற்றைச் சீராக அவள் மேல் வீசியது.

என்ன ஊர் இது. என்ன செய்து கொண்டிருக்கிறேன் நான். புது மனிதர்கள். இவர்கள் காட்டும் பிரியம் உண்மையானது. அப்பாவும் அம்மாவும் எப்படி மறந்தார்கள். அப்பாவால் எப்படி மறக்க முடிந்தது? அம்மாவால் எப்படி விசாரிக்காமல் கூட இருக்க முடிகிறது? வாயிற்படிகளில் எத்தனை தடவை ஏறிக் குதித்து விளையாடியிருப்பேன்? வீட்டு வாசலில் எத்தனை நாள் ஷெட்டில் ஆடியிருப்பேன்? அவை ஒன்றுமே இல்லையா?

ஆரிகமி காகிதங்களிலிருந்து உயிர்களையும் உருவங்களையும் உண்டாக்கிக் கொண்டிருந்தாள். அவள் உருவாக்கிய பெருங்கப்பல் புயல் வீசும் கடலில் தாக்குப் பிடித்தது. அவளது காற்றாலை பைய சுழன்றது. உறுமீனை நோக்கியிருந்தன அவளது கொக்குகள்.

வண்ணக் காகிதங்களை மடித்துக் கொண்டேயிருந்தாள். சற்று நேரம் மாடி வாசற்படியில் நாற்காலியைப் போட்டு வீதியை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள். இரண்டு காகங்கள் மரத்தில் வந்து அமர்ந்தன. இந்த நேரத்தில் பத்மா வீட்டில் யார் புதிதாக என ஒரு காகம் பார்த்தது. இன்னொரு காகம் அதனிடம் என்ன என்றது. முதல் காகம் பதில் சொல்லவில்லை. தாரிணி சமையலறைக்குச் சென்று ஒரு சோற்றுருண்டையை எடுத்து வந்து வைத்து தள்ளி வீட்டினுள் நின்றாள். இரண்டும் ஐயம் நீங்காமல் தத்தி வந்து கொத்தி உண்டன. பேருக்கு குரல் எழுப்பின இரண்டும். மறுகுரல் ஏதுமில்லை. உருண்டையை முழுதாகத் தின்று விட்டு அங்கிருந்து கிளம்பின காகங்கள் இரண்டும்.

பத்மாவின் கோல நோட்டில் பத்மா போட்டிருந்த சில கோலங்களை மீண்டும் முயற்சி செய்து பார்த்தாள். ஏதாவது ஒரு இடத்தில் பிசிறடித்தது. ரப்பரால் அழித்து விட்டு இணையாத பகுதிகளில் மீண்டும் புள்ளி வைத்து சரி செய்தாள். ஈஸி சேரில் வந்து மீண்டும் அமர்ந்து கொண்ட போது மனம் லகுவாக இருந்தது.

வெள்ளை வெளேரென ஆடை அணிந்த தோளில் மஞ்சள் பையைத் தொங்க விட்டிருந்த கையில் மேலும் கீழும் பூண் போட்ட சிறு கோல் வைத்திருந்த வண்ணத் தலைப்பாகை அணிந்த இளைஞன் வாசல் முன் வந்து நின்றான். தாரிணி உள்ளே சென்று ஜன்னல் வழியாக அவனைப் பார்த்தாள். ஊரில் பழக்கம். குடுகுடுப்பைக் காரர்கள், குறி சொல்பவர்கள் குறி சொல்லும் போது நேர் எதிரில் நிற்கக் கூடாது. சிறுமியாக தாரிணிக்கு அவர்களை ரொம்ப பிடிக்கும். ஒருமுறை அம்மாவிடம் கேட்டாள். அம்மா அவங்க எங்க தங்குவாங்க. ‘மயானத்துல’.

’’கடல் நிக்கும் குமரி. செந்தூர் முருகன். மதுரை மீனாட்சி. ஆனைக்கா அகிலாண்டேஸ்வரி. தில்லை காளி. காஞ்சி காமாட்சி. காசி விசாலாட்சி’’ இளைஞன் ஒரு குறிப்பிட்ட இடத்தை வெறித்துப் பார்த்தான்.

‘’உங் கவலை நீங்கும் ஆச்சி. உன் வயத்துல செல்வ முத்துக்குமரன் வரப் போறான். நீ தொட்டது துலங்கும் தாயி. ஊர் பாக்க வாழ்வம்மா. பராசக்தி துணை உனக்கு எப்பவும் உண்டு.’’ சட்டென சொல் அறுபட்டு நின்றான்.

தாரிணி, ‘’தம்பி! கொஞ்சம் இருப்பா’’ என்றாள்.

மாடியிலிருந்து கீழே இறங்கிச் சென்று அவனுக்கு நூறு ரூபாய் கொடுத்தாள்.

உள்ளம் உற்சாகமானது. எதிர்பாராமல் வயிற்றின் மேல் கை பட்டது. பட்டதும் உடலெங்கும் ஒரு பூரிப்பு. ஒரு குழந்தை. இவளை விட்டுப் பிரியாமல் இருக்கிறது. எப்போதும் தூக்கி வைத்துக் கொள்ள வேண்டும் என்கிறது. அவள் குரல் கேட்டால் அமைதியாயிருக்கிறது. சிறிது நேரம் குரல் கேட்கா விட்டால் அழுகிறது. நெஞ்சோடு சேர்த்து பாலூட்டுகிறாள். அதன் மார்பில் தட்டிக் கொடுத்துக் கொண்டே இருக்கிறாள். ஒருநாள் ‘’ம்மா’’ என்கிறது. ஒருநாள் ‘’ம்மா’’ எனக் கூப்பிடுகிறது. அம்மா யார் என்றால் தாரிணியைப் பார்க்கிறது. தவழ்கிறான். எழுந்து நிற்கிறான். சின்ன சின்ன அடிகளால் வீடெங்கும் நடக்கிறான்.

ஹாலில் இருந்த தொலைபேசி ஒலித்தது.

‘’ஹலோ’’

‘’தாரிணி’’

‘’ஆன்ட்டி’’

‘’தோசை ஊத்தி சாப்பிடு. நான் நாலே காலுக்கு வந்திடுவன்.’’

உணவு முடித்து சிறிது நேரம் ஆரிகமியும் கோலமும் போட்டாள். மூன்றரைக்கு கண் அயர்ந்தாள். சரியாக நாலு மணிக்கு அழைப்பு மணி ஒலித்தது.

’’தாரிணி! ஃபீலிங் பெட்டரா? காலைலக்கு இப்ப ரொம்ப உற்சாகமா இருக்கியே’’

தாரிணி நடந்ததைச் சொன்னாள்.

பத்மா தாரிணியின் கைகளைப் பிடித்துக் கொண்டாள். ‘’உன் நல்ல மனசுக்கு நீ நல்லா இருப்பம்மா’’.

‘’அப்பப்ப அம்மா ஞாபகம் வருது ஆன்ட்டி. அப்பா என் மேல எவ்வளவு பிரியமா இருப்பார். இப்ப எப்படி என்னை அவ்வளவு வெறுக்க முடியுது.’’

பத்மா பதிலேதும் சொல்லவில்லை. சமையலறைக்குச் சென்று பாலை அடுப்பில் வைத்தாள். வென்னீர் போட்டாள்.

‘’ஓ! இத்தனை ஆரிகமி உருவம் செஞ்சிருக்கயே’’

‘’உங்களுக்கு இத யார் சொல்லிக் கொடுத்தா?’’

பத்மாவுக்கு ஆரிகமி புத்தகங்களும் காகிதங்களும் வாங்கிக் கொடுத்து பழக்கியது அவளது அப்பா.

‘’நான் ஹைஸ்கூல் படிச்சப்ப என் பக்கத்துல சந்திரான்னு ஒரு பொன்னு ஒக்காந்திருப்பா. அவ கிட்டயிருந்து கத்துகிட்டன்.’’

காஃபி கொண்டு வந்து பத்மா தாரிணியிடம் தந்தாள்.

‘’நான் எந்த தப்பும் செய்யல ஆன்ட்டி. நான் அவரத்தான் கல்யாணம் செஞ்சுப்பன். இல்லன்னா கல்யாணம் வேண்டாம்னு சொன்னன். வீட்டுல சம்மதிக்கலன்னா கல்யாணம் செஞ்சுக்காம இருந்திடலாம்னு தான் இருந்தன். அவர் உயிரோட இல்லன்னா கல்யாணத்துக்கு சம்மதிப்பல்லன்னு கேட்டாங்க’’

‘’பழைய விஷயங்களைக் கிளற வேண்டாம் தாரிணி. உடம்பு பரவாயில்லன்னா ஒரு சின்ன வாக் போய்ட்டு வருவமா?’’

இருவரும் கிளம்பினார்கள். லால்கான் தெருவிலிருந்து சிதம்பரம் மேல வீதிக்கு வந்தார்கள். வீதி காய்கறிகளால் நிரம்பியிருந்தது. நிலக்கடலையை குவித்துப் போட்டிருந்தார்கள். மேல வீதியும் வடக்கு வீதியும் சந்திக்கும் முக்குக்கு வந்து வடக்கு வீதியில் திரும்பினார்கள்.

‘’தாரிணி! சிதம்பரம் தேர் பாத்திருக்கியா?’’

‘’நான் வந்து மூணு மாசம் தான ஆகுது ஆன்ட்டி.’’

‘’அவ்வளவு பெரிய தேர் நகர்ரதை சின்ன முட்டுக்கட்டை தடுத்து நிறுத்திடும். முட்டுக்கட்டையை ஒரு கையால தூக்கிடலாம். நினைச்சுப் பாத்தா ஆச்சர்யமா இருக்கும்.’’

கீழவீதியின் தேரடியைத் தாண்டிச் சென்றனர் இருவரும். பூ விற்கும் பெண்ணிடம் பூ வாங்கிக் கொண்டாள் பத்மா.

‘’இங்கயே வச்சு விடவா’’

‘’ஆன்ட்டி. நான் என்ன கொழந்தையா?’’

‘’நீ எனக்கு கொழந்தை தாண்டா.’’

‘’ஆன்ட்டி’’ தாரிணி சிணுங்கினாள்.

வீட்டில் மோகனாவும் பர்வதாவும் அமர்ந்திருந்தார்கள்.

‘’காலைல நம்ம வீட்டுல யாருக்கோ ஒடம்பு சரியில்லைன்னு சொன்னாங்களே அவங்க யாரு?’’ இருவரும் கேட்டார்கள்.

‘’ஒடம்பு காலைல சரி இல்லாம இருக்கும். சாயந்திரம் சரியாகும். இதுல புதுசு ஒன்னும் இல்லையே!’’ பத்மா சொன்னாள்.

ஈ ஸி சேரில் சாய்ந்து அமர்ந்து கொண்டாள் பத்மா.

மூவரும் பத்மாவைச் சூழ்ந்து அமர்ந்து கொண்டார்கள்.

‘’பத்மா மேடம் கதை சொல்லுங்க’’

என்ன கதை சொல்லலாம் என்று பத்மா யோசித்தாள். சோன் பப்டி விற்கும் வண்டி எழுப்பும் மணிச்சத்தம் கேட்டது. ‘’முல்லை அரும்பு முல்லை அரும்பு’’ என பூக்காரர் ஒருவர் சொல்லிக் கொண்டே சைக்கிளில் சென்றார்.

‘’இராமாயணத்துல இந்த கதை வருது. காட்டில ஒரு மரத்துல ரெண்டு புறாக்கள் இருக்கு. ஒன்னு கணவன். இன்னொன்னு மனைவி. மனைவிக்கு ஒடம்பு சரியில்ல. கணவன் இரை தேடப் போறான். அப்ப அங்க வந்த வேடன் வலை விரிக்கிறான். பெண் புறா அந்த வலைல சிக்கிடுது. அதைப் பிடிச்சு அவன் கூண்டுல அடைச்சிர்ரான். இரை தேடிட்டு வந்த கணவன் மனைவியைக் காணாம கவலைப்படுது. அப்ப அங்க ரொம்ப குளிருது. கூண்டுல இருக்கற பெண் புறா ஆண் புறாவைப் பாத்துட்டு குரல் கொடுக்குது. உன்னை இந்த வேடன் நாளைக்கு உணவா சாப்பிட்டுவானே. இந்த ஜென்மத்துல இனிமே நான் உன்னைப் பாக்க முடியாதான்னு கேக்குது. நான் உன்னை அடுத்த ஜென்மத்துல சந்திக்கறன்னு சொல்லுது பெண் புறா. வேடன் குளிரால ரொம்ப கஷ்டப்படறான். வேட்டையாடறது வேடனோட தர்மம். அவன் தன்னோட குடும்பத்துக்காக அதைச் செய்யறான். நம்ம இடத்துக்கு வந்திருக்கற அவன் நம்மோட விருந்தினன். அதனால அவன் குளிரைப் போக்க ஏதாச்சும் செய்னு பெண்புறா சொன்னது. ஆண்புறா சுள்ளியைப் பொறுக்கிட்டு வந்து போட்டு தீ உண்டாக்குச்சு. அந்த தீயில குளிர் நீங்கன வேடனுக்குப் பசி எடுத்துச்சு. ஆண் புறா மூட்டின நெருப்பில பெண் புறாவை வேடன் போட்டுட்டான். உன்னைப் பிரிஞ்சு நான் இருக்க மாட்டன்; என் மாமிசத்தையும் தின்னு வேடன் பசியாறட்டும்னு ஆண் புறாவும் தீயில விழுந்தது.’’

தாரிணி கண்களில் நீர்த்திரை. பர்வதா விசும்பினாள். மோகனா பேச்சற்று இருந்தாள்.

பத்மா ‘’தெய்வமே’’ என்றாள்.

***