Monday 11 October 2021

கொலு

கொலுக்களை
கொலு பொம்மைகளை
காணும் 
ஒரு சிறுவனுக்கு
ஆனந்தமானது
இந்த உலகம்
என்று 
தோன்றிவிடுகிறது
அல்லது
ஆனந்தமானது
கொலு பொம்மைகளின் உலகம்
என்று
செட்டியார் பொம்மை
அவனுக்குப் பிடித்திருக்கிறது
ஆச்சி பொம்மையும்
மிருதங்கம் வாசிக்கும் நந்தி
அர்த்த நாரீஸ்வரர்
மீனாட்சி கல்யாணம்
சீதா கல்யாணம்
அமைதியாய் இருக்கும் நரசிம்மர்
மானுடக் கல்யாண கோஷ்டி ஒன்று
ராமன் கிருஷ்ணன் அனுமன் இலக்குவன்
அரவில் பள்ளி கொள்ளும் பெருமாள்
அம்மாக்களும்
அக்காக்களும்
பாட்டிகளும்
அமைக்கும் 
கொலு 
ஒவ்வொன்றையும்
அவன் ஒவ்வொரு முறையும்
ஆர்வத்துடன் பார்க்கிறான்
அவர்கள்
மகிழ்ச்சியான உலகை
உருவாக்க
அல்லது
மகிழ்ச்சியின் வெவ்வேறு வடிவங்களைக்
காட்சிப்படுத்துவதாய்
எண்ணம் தோன்றுகிறது
கொலு அமைப்பவர்கள்
ஏன்
அத்தனை மகிழ்கிறார்கள்
என அறிய வேண்டும்
என்ற தீரா ஆவல் 
அவனுக்கு உண்டாகிறது
கேட்கத் தெரியாமல் கேட்கிறான்
அவர்கள் மௌனமாகப் புன்னகைக்கின்றனர்
அந்த புன்னகை
மகிழ்ச்சிக்கானது
என
அவனுக்குப்
புரிகிறது