Wednesday, 13 October 2021

காலைப் பொழுதுகள்

ஊரில் நல்ல மழை பெய்கிறது. மாலையில். இரவில். பகலில். காலை நேரங்களிலும் கூட. மழையின் சப்தம் கேட்டவாறு வீட்டில் இருப்பது என்பது ஓர் இனிமையான அனுபவம். அகம் நோக்கிச் செல்ல மழை ஒரு நல்ல வாய்ப்பு.  காலையில் எழுந்து நடைப்பயிற்சிக்குச் செல்லும் போது வானில் மேகங்கள் விதவிதமான தோற்றங்களில் உள்ளன. வானை மேகங்கள் நிறைத்திருப்பதால் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவுகிறது. ஒரு நாளைக்கு காலை, மாலை இரண்டு வேளையும் நடக்கிறேன். வீட்டு வாசல்களில் மலர்கள் மலர்ந்திருப்பதைப் பார்த்தவாறு நடந்து செல்வேன். விருட்சிப் பூ, செம்பருத்தி, பவழமல்லி, நந்தியாவட்டை, அலரி ஆகிய பூக்கள் பூத்திருப்பதைக் கண்டவாறு செல்வது என்பது பெருமகிழ்ச்சியை அளிக்கும் செயல். நம் அகமும் புறமும் மலர்களால் நிறைய வேண்டும்.