Friday, 15 October 2021

துவக்கம்

புதிதாக ஒன்றைத் துவக்குவதற்கும் பல்லாண்டு கால பயிற்சியினை புதுப்பித்துக் கொள்வதற்கும் விஜயதசமி ஆகச் சிறந்த நாள். இந்தியாவெங்கும் குழந்தைகளுக்கு இந்த தினத்தில் வித்யாரம்பம் என்னும் கல்வித் துவக்கம்  நிகழும். போர்க்கலை பயில்பவர்கள் இந்நாளில் தாங்கள் கற்றவற்றை அனைவருக்கும் செய்து காட்டுவார்கள்.  

இன்று காலை ஒரு சிறுகதையை எழுதினேன். அது நிறைவான அனுபவமாக இருந்தது. சொல்லரசியைப் போல் பிரியம் காட்டும் இன்னொரு தெய்வம் இருக்கக் கூடுமா என்று தெரியவில்லை. காணும் பொருளாய் - காண்பதெல்லாம் காட்டுவதாய் என்றான் பாரதி. 

ஐந்து ஆண்டுகளுக்கு முன்னால், விஜயதசமி நாளில் தான் காவிரிக் கரையிலிருந்து கங்கைக் கரை வரை ஒரு மோட்டார்சைக்கிள் பயணத்தைத் துவக்கினேன். அந்த நினைவுகள் நெஞ்சில் எழுந்தன. 

இன்று மாலை ஒரு சிறு பயணம் மேற்கொண்டேன். விளநகர் சிவாலயத்துக்குச் சென்று வழிபட்டேன். சிவன் துறை காட்டும் வள்ளல். அம்பிகை வேயுறு தோளி அம்மன். அங்கே தலவிருட்சம் வன்னி மரம். அதன் அடியில் சில நிமிடங்கள் அமர்ந்திருந்தேன். 

நிறைய பணிகளும் நிறைய பயணங்களும் இந்த ஆண்டு காத்திருக்கின்றன. அவற்றுக்கு இன்றைய நாள் நல் தொடக்கமாக அமைய வேண்டும்.