Wednesday 20 October 2021

பாராட்டு

நேற்று மயிலாடுதுறையில் உள்ள ஒரு அமைப்பு அவர்களுடைய மாதச் சந்திப்புக்கு அழைத்திருந்தார்கள். நூறு பேருக்கு மேல் கலந்து கொண்ட நிகழ்ச்சி. இறை வழிபாடும் அன்னதானமும் அவர்களுடைய பிரதானமான வழிமுறை. சமூகப் பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொள்பவர்களை நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக கௌரவிக்கிறார்கள். ஒரு கிராமத்தின் அத்தனை விவசாயக் குடும்பத்துக்கும் மரக் கன்றுகள் கொடுத்தது, ஒரு கிராமத்தில் எல்லா குடும்பங்களையும் தடுப்பூசி இட்டுக் கொள்ள அழைத்தது ஆகிய பணிகளுக்காக என்னைப் பாராட்டினார்கள். சமூகப் பணியில் எப்போதுமே என்னை ஒரு கருவியாகவே உணர்ந்திருக்கிறேன். உணர்கிறேன். பாராட்டப்பட வேண்டியவர்கள் நான் பணி புரிந்த கிராமத்தின் மக்களே. அவர்கள் தான் அவர்களுக்கு அளிக்கப்பட்ட மரக்கன்றுகளை தங்கள் வீட்டுத் தோட்டத்தில் நட்டு வளர்க்கிறார்கள். என் பணி பத்து சதவீதம் அளவானதே. மீதம் உள்ள 90 % பணியைச் செய்தவர்கள் கிராம மக்களே. தடுப்பூசி விஷயத்திலும் நாம் சொன்னதை ஏற்றுக் கொண்டு தடுப்பூசி போட்டுக் கொள்ள ஆர்வத்துடன் முன்வந்த கிராம மக்களே பாராட்டுக்குரியவர்கள். கிராம மக்களின் பிரதிநிதியாக உணர்ந்து - அவர்களின் பிரதிநிதியாக பாராட்டை ஏற்றுக் கொண்டேன்.  சமூகப் பணிகளின் மூலமாக சமூகத்தையும் என்னையும் மேலும் புரிந்து கொள்கிறேன். ‘’என் கடன் பணி செய்து கிடப்பதே’’ என்கிறது தமிழ் மரபு.