Wednesday 27 October 2021

இரு உரையாடல்கள்

நேற்று காலை என்னை ஒரு நண்பர் சந்திக்க வந்தார். ஊருக்குப் பக்கத்தில் இருக்கும் கிராமத்தைச் சேர்ந்தவர். ஊரில் பெரிய வீடொன்று இருக்கிறது. வீடு கட்டி 10 ஆண்டுகள் இருக்கும். அவரது தந்தை தனது ஓய்வூதியப் பலன்களைக் கொண்டு கட்டியது. நண்பர் சென்னையில் தகவல் தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றில் பணிபுரிகிறார்.  ஊதியத்தின் ஒரு பகுதியை முதலீடு செய்ய வழி கேட்டார். ஊருக்கு அருகில் இருக்கும் நகராட்சிப் பகுதியிலோ அல்லது ஏதேனும் ஒரு மாநகராட்சியிலோ மனையோ அல்லது வீடோ அல்லது அடுக்கக வீடோ வாங்குமாறு சொன்னேன். வீட்டுக்கடன் வங்கிகள் வழங்கும். லாபமான முதலீடாக இருக்கும் என்று சொன்னேன். 

ஸ்மார்ட் ஃபோனை வைத்து இ.எம்.ஐ கணக்கைப் போட்டு போட்டு பார்த்தார். 

‘’நம்ம சூழ்நிலைல சேவிங்க்ஸ் செய்யணும்னா அதுக்கு பிரத்யேகமான மைண்ட் செட் வேணும். இருக்கறத சேமிக்கணும்னு நினைக்கற ஒருத்தர் எளிமையான லைஃப் ஸ்டைல ஈசியா அடாப்ட் செஞ்சுக்கறவரா இருக்கணும். அது ரொம்ப டஃபா இருக்கு. இப்ப நீங்க கிராமத்துல வீடு கட்டியிருக்கீங்க. உங்க குடும்பத்துக்கு சிம்பிளா 1000 சதுர அடி போதும். ஆனா கிட்டத்தட்ட ரெண்டு மடங்கு ஏரியா கட்டப்பட்டிருக்கு. ஒரு சிட்டில இருக்கற வீட்டுக்கு செய்யற அத்தனை செலவும் செஞ்சிருக்கீங்க. ரெண்டல் இன்கம்முக்கும் வாய்ப்பில்லை. ஒரு பெரிய வீடு இருக்குங்கற உணர்வு உங்களை ரியல் எஸ்டேட்ல இன்வெஸ்ட் பண்ணாம தடுத்துடுச்சு. சென்னைல ஒரு வீடு ரெண்ட்டுக்கு எடுத்திருக்கீங்க. அதுக்கு மாசம் 15,000 ஆகுது. குடும்ப செலவு ஆகிட்டே இருக்கு. கையில இப்ப உங்கள்ட்ட சேவிங்ஸ் இல்லை. நீங்க கொஞ்சம் சிரமப்பட்டு ஒரு வீடு வாங்குனா இழுத்து பிடிச்சு இருந்தாலும் சமாளிச்சிடலாம். யோசிச்சு முடிவு பண்ணுங்க.’’

அவருக்கு உகந்தது என நான் நினைத்ததை அவரிடம் சொன்னேன். 

மாலை நடைப்பயிற்சிக்கு சென்று கொண்டிருந்தேன். 

ஓர் இளைஞர் மோட்டார்சைக்கிளில் வந்தார். என்னைப் பார்த்ததும் வண்டியை ஆஃப் செய்து விட்டு வண்டியிலிருந்து இறங்கி என்னை நோக்கி வந்தார். 

‘’சார்! இந்த ஏரியால வீடு ஏதும் விலைக்கு கிடைக்குமா?’’ என்றார். 

சாலையில் நடந்து சென்று கொண்டிருக்கும் என்னிடம் ஏன் கேட்கிறார் என்பது எனக்கு வியப்பு அளித்தது. 

‘’தம்பி! வாக்கிங் போயிட்டு இருக்கன். ஒரு மணி நேரம் கழிச்சு என்னோட வீட்டுக்கு வா. நாம டிஸ்கஸ் செய்வோம்’’ என்றேன். எனது வீட்டின் அமைவிடத்தைச் சொன்னேன். 

வாக்கிங் முடிக்க ஒரு மணி நேரம் ஆனது. நான் வீடு திரும்பி 10 நிமிடம் கழித்து அந்த இளைஞன் வீட்டுக்கு வந்தான். 

அவனுக்கு ஊரின் மையப்பகுதியில் ஒரு பெரிய வீடு இருக்கிறது. கணிசமான விலை அந்த வீட்டுக்கு கிடைக்கும். அதனை விற்று விட்டு சிறியதாக ஒரு வீட்டை வாங்கி அங்கே குடி வந்து விடலாம் என்பது அந்த இளைஞனின் திட்டம். பாதிப் பணம் அதற்கு செலவானால் கூட மீதிப் பணத்தைக் கொண்டு ஏதேனும் தொழில் தொடங்கலாம் என்று எண்ணம். 

’’தம்பி! வீடா வாங்கறத விட மனையா வாங்கி சிம்பிளா கட்டிக்கங்க. ரிஜிஸ்ட்ரேஷன் செலவு மிச்சமாகும். மீதி இருக்கற பணத்தை முழுசா ஒரு தொழில்ல போடாதீங்க. 20 பெர்சண்ட்டை தொழில் தொடங்க யூஸ் பண்ணிக்கங்க. 80 பெர்சண்ட்டை போஸ்ட் ஆஃபிஸ்ல டெபாசிட் செய்ங்க. அதுல கிடைக்கற இண்ட்ரஸ்ட்டே உங்களோட மன்த்லி எக்ஸ்பெண்டிச்சருக்குப் போதும்.’’

நான் சொன்னதைப் பரிசீலிப்பதாகச் சொல்லி விட்டு இளைஞன் புறப்பட்டான்.