Saturday 20 November 2021

செய்க பொருளை

செய்க பொருளைச் செறுநர் செருக்கறுக்கும்
எஃகதனிற் கூரிய தில்.

-திருவள்ளுவர் 

காவிரி டெல்டா விவசாயிகளை தினமும் சந்திக்கிறேன். முதலில் சந்திக்கும் ஒவ்வொருவரிடமும் கேட்கும் முதல் கேள்வி உங்கள் வயலில் நீங்கள் வழக்கமாகச் செய்யும் நெல் விவசாயம் போக வரப்புகளில் தேக்கு மரங்கள் நட்டு வளர்க்கிறீர்களா என்று கேட்பேன். எல்லா விவசாயிகளுமே இல்லை என்று பதில் கூறுவார்கள். அது குறித்து ஆர்வம் காட்டும் சிலருக்கு தேக்கு மரக்கன்றுகள் நானே வாங்கிக் கொடுத்து விடுவேன். மேலும் 15 நாளைக்கு ஒருமுறை அவர்கள் வயலுக்குச் சென்று அவை எப்படி வளர்ந்துள்ளன என்று பார்ப்பேன். அவ்வாறு சென்று பார்ப்பது அவர்களுக்கு ஊக்கம் தரும். சமீபத்தில், சில மாதங்களுக்கு முன் தேக்கு மரக் கன்றுகள் வழங்கிய விவசாயியின் தோட்டத்துக்குச் சென்றிருந்தேன். நூறு மரக்கன்றுகள். சிறப்பாக வளர்ந்திருந்தன. மனதுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. 

டிம்பர் மரங்களுக்கானத் தேவை உலக அளவிலானது. நூற்றாண்டுகளாக அத்தொழில் மிகுந்த லாபம் கொண்டது. குறைவான தண்ணீரே போதுமானது. ஒரு ஏக்கர் வைத்திருக்கும் விவசாயியிடம் குறைந்தது 40 மரங்கள் இருக்குமானால் 15 ஆண்டுகளில் அவர்களிடம் இருபது லட்சம் ரூபாய் இருக்கும். 

ஏதேனும் ஒரு கிராமத்திலாவது , அங்கே இருக்கும் நிலம் வைத்திருக்கும் எல்லா விவசாயிகளும் குறைந்தபட்சம் 40 தேக்கு மரங்களாவது வளர்க்கிறார்கள் என்ற நிலையை உண்டாக்க வேண்டும் என்ற விருப்பம் கொண்டுள்ளேன்.