Thursday 18 November 2021

மீண்டும் (நகைச்சுவைக் கட்டுரை)

கட்டிடவியல் , கட்டுமானம் பயின்றவர்கள் அத்துறையிலேயே குறிப்பிட்டவிதமான பணிகளை ஆற்றுவார்கள். கட்டிட வரைபடம், ஸ்ட்ரக்சுரல் டிசைன், கட்டிட கான்டிராக்ட், கட்டிடம் கட்டி விற்பனை என பல்வேறு விதமான பணி வாய்ப்புகள் உண்டு. ரியல் எஸ்டேட், ஹார்டுவேர் ஷாப் , மணல் ஜல்லி சப்ளை ஆகியவற்றிலும் சிவில் பொறியாளர்கள் ஈடுபடுவதுண்டு. வரைபடம் வரையக்கூடிய ஒருவர் கட்டிட கான்டிராக்ட் தொழிலுக்கே வராமல் ஒரு அலுவலகம், ஒரு கம்ப்யூட்டர் திரை என்று இருந்து விடுவதுண்டு. ஸ்ட்ரக்சுரல் டிசைன் செய்யக்கூடிய ஒருவர் எந்த கட்டுமானப் பணியிடத்திலும் அரைமணி நேரம் இருந்து கூட பழக்கமில்லாதவராக இருப்பார். கட்டிட கான்டிராக்டர் டிசைன் செய்திருக்க மாட்டார். ரியல் எஸ்டேட்டில் மனை விற்பவருக்கு வீடு விற்பனை செய்து பழக்கம் இருக்காது. இது இல்லாமல் சாலை உருவாக்கம் இருக்கிறது. இன்னும் சில பணிகளும் உள்ளன. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான வாழ்க்கை முறை. அனைவருக்கும் படிப்பு ஒன்று தான். 

எனது தந்தையிடம் பணி புரிவது என்பது ராணுவப் பயிற்சி போன்றது. எல்லாராலும் தாக்குப் பிடிக்க முடியாது. இருப்பினும் நான் அதில் தேறி வந்தேன். வருடங்கள் ஓடின. 

ஒருநாள் சாலையில் சென்று கொண்டிருந்த போது எங்கள் கல்லூரியில் பணியாற்றி ஓய்வு பெற்ற அலுவலர் ஒருவரைப் பார்த்தேன். அவர் , ‘’பிரபு பிரபு’’ என ஆர்வத்துடன் அழைத்தார். நான் வண்டியைத் திருப்பிக் கொண்டு அவரிடம் சென்றேன். 

‘’பிரபு ! எப்படி இருக்கீங்க?’’

‘’நல்லா இருக்கன் சார்’’

‘’உங்களை பாத்தது நல்லதா போச்சு. இன்னைக்கு காலைல சிவில் டிபார்ட்மெண்ட்ல இருந்து ஃபோன் வந்தது. வேற ஒரு விஷயமா பேசினவங்க இன்னொரு விஷயத்தையும் சொன்னாங்க. M. E பார்ட் டைம் ஒரு பேட்ச் ஆரம்பிக்க போறாங்க. நீங்க அப்ளை பண்ணுங்க’’

‘’சார் நானா?’’

‘’அப்ளை பண்ண இன்னும் ரெண்டு நாள் தான் டைம் இருக்கு. நாளைக்கு அட்மினி போறீங்க. அப்ளிகேஷன் ஐந்நூறு ரூபா. வாங்கி ஃபில் பண்ணி பாக்ஸ்ல போட்டுட்டு வந்திடறீங்க’’ 

‘’சார் அப்ளை பண்றது சரி சார். எனக்கு இப்ப ஏகப்பட்ட சைட்ல வேலை நடக்குது. சைட்டை விட்டு ஒரு நிமிஷம் கூட நகர முடியாது.’’

‘’இது பார்ட் டைம் டிகிரி. அண்ணா யுனிவர்சிட்டில இருக்குல்ல அந்த மாதிரி. வேலை பாக்கறவங்க தங்களை அப்டேட் பண்ணிக்க. சனி ஞாயிறு தான் ஃபுல் டே கிளாஸ். மத்த நாள்லாம் சாயந்திரம் 6 மணிக்குத் தான் கிளாஸ் ஆரம்பிக்கும். நீங்க 4.30 பாசஞ்சர் பிடிச்சா கிளாஸுக்குப் போயிடலாம். ‘’

‘’சார்! சாயந்திரம் ஆளுங்களுக்கு சம்பளம் கொடுக்கணும் ‘’

‘’நல்ல வாய்ப்பு. மிஸ் பண்ணாதீங்க. நாளைக்கு அப்ளை பண்ணிட்டு எனக்கு ஃபோன் செஞ்சு சொல்லுங்க’’

என் மனதில் சலனங்களை உருவாக்கி விட்டு சென்று விட்டார். 

வீட்டுக்கு வந்து யோசித்தேன். 




பள்ளி முடித்து கல்லூரியில் இணைந்த பிரபு கிடையாது இப்போது. இப்போது உள்ள பிரபுவுக்கு கட்டிடத் தொழில் முழுக்கத் தெரியும். நான்கு வருடம் இளநிலைப் பொறியியல் படித்த அனுபவம் இருப்பதால் பாடங்களை எப்படிப் படிக்க வேண்டும் என்று தெரியும். காலையிலிருந்து இரவு வரை கட்டிட வேலை இருக்கிறது என்றாலும் இந்த எம். ஈ படிப்பு இரண்டு ஆண்டுகளுக்குத் தான். மாதங்கள் கல்லூரியில் சர சர என்று ஓடி விடும். அப்பாவும் படிக்க வேண்டும் என்று சொன்னால் தடை சொல்ல மாட்டார். நான் எம். ஈ படிக்க வேண்டும் என்று விரும்பியதே அப்பா தானே! இப்படியாக யோசித்தேன். 

என்னுடைய ஒருநாள் பொழுதைக்  கற்பனை செய்து பார்த்தேன். காலை 6 மணிக்கு எழுகிறேன். 7 மணிக்கு ஜல்லி லோடு வருகிறது. சைட்டில் இறக்குகிறேன். வீட்டுக்கு வந்து காலை உணவு. பின்னர் சைட்டுக்குச் செல்கிறேன். பணியாளர்கள் வந்து பணி துவங்குகின்றனர். அளவுகளையும் குறிப்புகளையும் தருகிறேன். மெட்டீரியல் சப்ளை செய்தவர்களுக்கு பேமெண்ட் செட்டில் செய்கிறேன். மதியப் பொழுது. அப்பாவிடம் சொல்லி விட வேண்டும். நான் காலை 7 மணியிலிருந்து மாலை 4 மணி வரை பார்த்துக் கொள்கிறேன். நீங்கள் தினமும் மாலை 4 மணிக்கு வந்து என்னை ரிலீவ் செய்தால் போதும் என. மாலை விழுப்புரம் பாசஞ்சர் பிடித்து சிதம்பரம் செல்கிறேன். மாலை 6 மணியிலிருந்து 9 மணி வரை வகுப்பு. வகுப்பு முடிந்ததும் ஒரு ரயில் வரும். அதில் ஊர் திரும்புகிறேன். நமக்கு நாமே இப்படி ஒரு டாஸ்க்கை ஃபிக்ஸ் செய்ய வேண்டும். நம்மால் முடியும். அப்படி இப்படி என. 

மறுநாள் கல்லூரி கிளம்பினேன். அப்ளை செய்ய போவதிலிருந்தே ஒரு புரஃபஷனல் தன்மையை வெளிப்படுத்த வேண்டும். முழுக்கை சட்டையை இன் செய்து பெல்ட் அணிந்து கைகளை மடித்து விடாமல் பட்டன் போட்டு ஒரு நல்ல ஷூ அணிந்து கொண்டு கிளம்பினேன். முதலில் நடராஜர் ஆலயத்துக்கு செல்ல வேண்டும். பி. ஈ சேர்ந்த அன்று முதல் நாள் நடராஜர் கோயிலில் சாமி கும்பிட்டோம். இப்போது அப்ளை செய்யும் போதிலிருந்தே சாமி கும்பிட வேண்டும். பரவாயில்லை ஒரு ஸ்டூடண்ட்டாக நடராஜர் முன் நின்றேன். இன்று ஒரு என்ஜினியர். சைட்டில் 15 பேர் வேலை செய்கிறார்கள். 

தில்லை ஆலயத்தில் கூத்தர்பிரானை வணங்கி விட்டு அட்மினி சென்று விண்ணப்பம் வாங்கி அப்ளிகேஷன் நிரப்பி பெட்டியில் போட்டு விட்டேன். ஓய்வு பெற்ற ஸ்டாஃப்ஃபுக்கு ஃபோன் செய்து விபரம் சொன்னேன். 

மானசீகமாக ஒரு எம். ஈ ஸ்டூடண்ட்டாகவே எண்ணிக் கொண்டேன். வீட்டில் எல்லாரும் ஒரு விதமாக பார்த்தார்கள். 

‘’என்னப்பா இனிமே காலேஜே போக மாட்டன்னு சொன்ன. இப்ப அட்மிஷன் ஆறதுக்கு முன்னாடியே சப்ஜெக்ட் புக்லாம் கலெக்ட் பண்ணி டேபிள் மேல வச்சிருக்க’’

‘’மனுஷ வாழ்க்கைன்னா மாற்றம் இருக்கணும். அன்னைக்கு நான் அப்படி நினைச்சன். அது சரியான முடிவுதான். இப்ப என்னால தொழிலையும் படிப்பையும் மேனேஜ் செய்ய முடியும்னு தோணுது. இதுவும் சரியான முடிவுதான். விவேகம் இருக்கறவன் முன்னாடி ஒரு விஷயம் செஞ்சோம்ங்கறதுக்காக அதை பிடிச்சுக்கிட்டே தொங்க மாட்டான்.’’

‘’நீ பி. ஈ படிக்கும் போதே அசைன்மெண்ட் சப்மிட் பண்றதுண்ணா உனக்கு வேப்பங்காயா கசக்கும். அது ஞாபகம் வந்தது’’

‘’பாஸ்ட் இஸ் பாஸ்ட். லெட் அஸ் லுக் ஃபார் ஃபியூச்சர்’’

பத்து நாளில் நுழைவுத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வந்தது. நுழைவுத் தேர்வின் நாளின் நேரமும் குறிக்கப்பட்டிருந்தது. 

நுழைவுத் தேர்வன்றும் காலையில் சிதம்பரம் கோவிலில் நடராஜரைக் கும்பிட்டு விட்டு வந்தேன். 

பத்து மணி தேர்வு நேரம். நான் 15 நிமிடம் முன்னதாகவே டிபார்ட்மெண்ட் சென்றேன். அங்கே இருந்த எழுத்தர் ஹால் டிக்கெட்டைப் பார்த்தார். 

‘’சார் ! மொத்தமா ஆறு அப்ளிகேஷன் தான் வந்திருக்கு. அதுல இப்ப நீங்க மட்டும் தான் என்டிரன்ஸுக்கு வந்திருக்கீங்க. மத்தவங்க வராங்கலான்னு நாம ஒரு மணி நேரம் வெயிட் பண்ணுவோம். நீங்க கேண்டீனுக்குப் போய் டீ சாப்ட்டுட்டு கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணிட்டு வாங்க. ’’

கேண்டீனில் டீ குடித்த அனுபவம் தான் பி.ஈ படித்த நாலு ஆண்டுகளும் இருக்கிறதே. மீண்டும் அதே கேண்டீன். அதே டீ யா என சோர்ந்து விட்டேன். 

காலேஜை ஒரு சுற்று சுற்றி வந்தேன். 11 மணிக்கு 3 பேர் மட்டுமே இருந்தோம். அதில் ஒருவர் என்னைப் போல கட்டிட கான்டிராக்டர். இன்னொருவர் கல்லூரி விரிவுரையாளர். 11 மணிக்கு என்டிரன்ஸ் துவங்கியது. அப்ஜெக்டிவ் டைப். வினாக்கள் எளிதாகவே இருந்தன. 45 நிமிடத்தில் முடித்து விட்டோம். 

அங்கிருந்து கிளம்பினேன். கிளம்பும் போது என்னுடன் தேர்வு எழுதிய இரண்டு பேரும் ‘’சார்! அவசியம் கோர்ஸ் ஜாயின் பண்ணிடுங்க.’’ என்றனர். நான் எந்த வாக்குறுதியும் தரவில்லை. 

வண்டியை எடுத்தேன். பேருந்து நிலையத்துக்குப் பக்கத்தில் ஒரு தியேட்டரில் ஹிந்திப் படம் ஒன்று ஓடிக் கொண்டிருந்தது. அதைப் பார்த்தேன். சிதம்பரத்தில் காலைக் காட்சி 12 மணிக்குப் போடுவார்கள். 3 மணிக்கு படம் முடிந்ததும் வழக்கமாக சிதம்பரத்தில் சாப்பிடும் ஹோட்டலுக்குச் சென்று டிஃபன் சாப்பிட்டேன். 

ஐந்து மணி அளவில் வீடு திரும்பினேன். 

ஓய்வு பெற்ற ஸ்டாஃபுக்கு ஃபோன் செய்து நடந்ததைச் சொன்னேன். 

‘’தம்பி அதப் பத்தி ஒன்னும் ஃபீல் பண்ணாதீங்க. அவங்க டைம் எக்ஸ்டென்ஷன் கொடுப்பாங்க. இன்னும் பத்து பேரு அட்மிஷன் ஆக வாய்ப்பு இருக்கு’’

‘’சார் எனக்கே விருப்பம் இருந்து சின்சியரா தான் முயற்சி செஞ்சன். ஆனா கோர்ஸ் ஆரம்பிக்குமான்னே டவுட்டா இருக்கு’’ 

எனது சந்தேகம் உறுதியானது. பார்ட் டைம் எம். ஈ கோர்ஸை ஒரு வருடம் தள்ளி வைத்தனர். அடுத்த ஆண்டும் அது துவங்கவில்லை. அந்த திட்டத்தையே கைவிட்டனர்.