Saturday 20 November 2021

நர்மதா பரிக்கிரமா

நர்மதா பரிக்கிரமா என்ற ஒரு நடைப்பயணம் வட இந்தியாவில் மிகவும் பிரசித்தி பெற்றது. மிக உணர்வுபூர்வமான புனித யாத்திரையாக மேற்கொள்ளப்படுவது. பெரும்பாலான இந்திய நதிகள் மேற்கு திசையில் உற்பத்தியாகி கிழக்கு திசை நோக்கி பாய்பவை. விதிவிலக்காக ஒரு சில நதிகளே கிழக்கில் உற்பத்தியாகி மேற்கு திசை நோக்கி பாய்கின்றன. நர்மதையும் தபதியும் அவ்வாறான நதிகள். நர்மதை நதியின் உற்பத்தி ஸ்தானத்திலிருந்து நதியின் தென்கரையில் நதியுடனே நடந்து நர்மதை கடலுடன் கலக்குமிடம் சேர்ந்து ஒரு படகில் நர்மதையைக் கடந்து நர்மதையின் வடக்குக் கரைக்குச் சென்று அங்கிருந்து நர்மதையின் உற்பத்தி ஸ்தானத்தை நோக்கி நடந்து சென்று துவங்கிய இடத்தில் யாத்திரையை நிறைவு செய்வது என்பதே நர்மதா பரிக்கிரமா எனக் கூறப்படுகிறது. நர்மதா நதியின் நீளம் 1200 கி.மீ . நர்மதா பரிக்ரமா 2400 கி.மீ தூரம் கொண்டது. 




இந்த நடைப்பயணத்தின் போது வெறும் காலுடன் நடக்க வேண்டும் என்றும் கையில் பணம் காசு எதுவும் வைத்துக் கொள்ளக் கூடாது என்றும் பிச்சையெடுத்தே உணவுண்ண வேண்டும் என்றும் ஒரு மரபு உள்ளது. இந்த பயணம் மேற்கொள்பவர்களை மஹாபலி, பரசுராமன், அனுமன், விபீஷ்ணன், கிருபர், அஸ்வத்தாமன், வியாசர் ஆகிய ஏழு சிரஞ்சீவிகள் காப்பார்கள் என்பது நம்பிக்கை. 

நர்மதையின் கரையில் ஓம்காரேஷ்வர், மகேஷ்வர், உஜ்ஜைன் ஆகிய புண்ணியத் திருத்தலங்கள் உள்ளன. நர்மதை உற்பத்தியாகும் அமர்கண்டக் 51 சக்தி பீடங்களில் ஒன்று. 

நர்மதை பரிக்கிரமா மேற்கொள்ள நர்மதை  அன்னையின் ஆசி கோருகிறேன்.