Tuesday 9 November 2021

பிரம்மார்ப்பணம்

இங்கே சென்ற வாரத்திலிருந்து மழை பொழிந்து கொண்டிருக்கிறது. பகலில் வானம் வெளி வாங்கவே இல்லை. இரவில் சில நாட்கள் சில மணி நேரங்கள் மழை இல்லாமல் இருக்கிறது. நள்ளிரவுக்குப் பின் மீண்டும் மழை தொடங்கி விடுகிறது.  கிராமத்தில் இருக்கும் விவசாயத் தொழிலாளர்களின் குடிசை வீடுகள் தொடர் மழையால் தீவிர பாதிப்புக்குள்ளாகும். தரையில் ஈரம் ஊறும். கூரையில் இருக்கும் இடைவெளிகளின் வழியே மழைநீர் ஒழுகும். எரிபொருளாக வைத்திருக்கும் விறகுகள் நனைந்திடும். வீட்டு வாசல் சாலை சேறாகியிருக்கும். ஓரிரு நாள் மழை பொழிந்து அடுத்த சில நாட்கள் வெயில் இருந்தால் சமாளித்து விடுவார்கள். தொடர் மழையை எதிர்கொள்வது என்பது அவர்களுக்கு சற்றே கடினமான ஒன்று. கையில் சேமிப்பாக ஏதேனும் இருக்க வேண்டும். 99.99% எவரிடமும் எந்த சேமிப்பும் இருக்காது. மழை பொழியும் காலத்தில் விவசாய வேலைகள் எவையும் இருக்காது. நடவு, களையெடுப்பு, அறுவடை என எந்த பணிக்கும் வாய்ப்பு இருக்காது. கடினமான சூழ்நிலையை பல வருட பழக்கத்தால் கடந்து செல்ல பழகியிருப்பார்கள். 

தடுப்பூசிக்காக செயல் புரிந்த கிராமத்தின் குடிசைப்பகுதிகள் என் நினைவில் எழுந்தன. தடுப்பூசி விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்ட போது அப்பகுதிகளின் நிலை என் மனதில் பதிவாகியிருந்தது. கடலூர் வெள்ளத்தின் போது, பல கிராமங்களில் ஒவ்வொரு குடிசை வீடாகச் சென்று அந்த வீடுகளின் சிரமங்களை நேரில் அறிந்த அனுபவம் இங்கே என்ன விதமான சூழல் நிலவும் என்பதை எனக்கு உணர்த்தியது. கிராமத்தில் இருக்கும் எனது நண்பர்களுக்கு ஃபோன் செய்தேன். குடிசைப்பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதாக நண்பர்கள் கூறினார்கள். 

கொஞ்ச நேரம் யோசித்தேன். என் உள்ளுணர்வு ஏதேனும் ஒரு செயலை முன்னெடுக்கச் சொன்னது. 

கிராமத்தின் நண்பருக்கு ஃபோன் செய்தேன். 

’’ரொம்ப மோசமான பாதிப்பு 100 குடும்பத்துக்கு இருக்குமா?’’

‘’இருக்கும்ங்க’’

‘’நூறு குடும்பம்னா - குடும்பத்துக்கு 5 பேருன்னு வச்சுக்கிட்டா கூட 500 பேர். நாம ஒன்னு செய்யலாம். நான் ஃபிரண்ட்ஸ்கிட்ட பேசறன். உதவி கேக்கறன். அந்த 500 பேருக்கும் ஒரு நாளைக்கு ரெண்டு வேளை ஃபுட்-ன்னு ஆறு நாளைக்கு சப்ளை செஞ்சுடலாம்.’’

‘’6000 ஃபுட் பாக்கெட் . பட்ஜெட் ஹெவியா ஆகுமே?’’

‘’பகவான் மேல பாரத்தைப் போட்டு ஆரம்பிப்போம்.’’

‘’ராமா கிருஷ்ணா ஆண்டவா’’ என்றார் நண்பர். 

சிறிது நேரத்தில் கல்லூரிப் பேராசிரியராய் இருக்கும் எனது நண்பர் ஒருவர் வீட்டுக்கு வந்தார். அவரிடம் விஷயத்தைச் சொன்னேன். அவர் சமையல் கலை அறிந்தவர். அவரே பிரமாதமாகச் சமைக்கக் கூடியவர். 

‘’ஒரு நாளைக்கு ரெண்டு வேளை மீல்ன்னா காலைல 8 மணிக்கு ஒன்னு. சாயந்திரம் 5.30க்கு ஒன்னு. இந்த டைமிங் சரியாக இருக்கும் ‘’ என்றார். 

‘’என்ன ஃபுட் சப்ளை செய்றது?’’

‘’காலைல புளி சாதம். சாயந்திரம் கிச்சடி’’

‘’இங்கே ஃபுட் பிரிபேர் பண்ணி பேக் பண்ணிடுவோம். கிராமத்துக்குப் போய் அங்க இருக்கற ஒவ்வொரு குடிசை வீட்டுக்கும் நேரடியா கொடுத்துடுவோம். அது தான் ஈசியான வே’’

‘’எப்ப ஆரம்பிக்கலாம்?’’

‘’நாளைக்கு வில்லேஜ் போய் அங்க இருக்கற ஃபிரண்ட்ஸ்கிட்ட பேசிட்டு வரேன். அவங்க அபிப்ராயம் தெரிஞ்சுகிட்டு டேட் ஃபிக்ஸ் பண்ணிடுவோம்’’

’’பட்ஜெட் தாங்குமா?’’

‘’காட் இஸ் கிரேட்’’

நண்பர் சென்றவுடன் ஆதித்யாவுக்கு ஃபோன் செய்தேன். அவன் வங்கியிலிருந்து புறப்படும் தருவாயில் இருந்தான். 

‘’சொல்லுங்க அண்ணா’’

‘’தம்பி. நான் சொல்ற எதையும் நீ மறுத்தது கிடையாது. எங்கிட்ட எந்த விஷயம் பத்தியும் நெகடிவ்வா பேசுனது கிடையாது. என் கிட்ட கோபப்பட்டது கிடையாது. இவ்வளவு இருந்தும் எனக்கு உன்கிட்ட சில விஷயத்தை சொல்லும் போது மனசு கஷ்டப்படுது’’

‘’ஏன் அண்ணா இப்படி ஃபீல் பண்றீங்க. என்ன விஷயம்னு சொல்லுங்க’’

‘’நீ ஒருத்தன் தான் நான் கிரியேட்டிவ் ஒர்க்குக்கு கொடுக்க வேண்டிய நேரத்தை பொது வேலைகளுக்கு கொடுத்திடறன்னு வருத்தப்படுறவன். ‘’

’’அது வருத்தம்னு சொல்ல முடியாது. இன்னும் நிறைய நீங்க எழுதணும்ங்கற விருப்பத்தைத்தான் அப்படி சொல்லியிருப்பன். பரவாயில்லை. நீங்க சொல்ல வந்த விஷயத்தை சொல்லுங்க. ‘’

‘’நாம ஒரு கிராமத்துல வாக்சினேஷனுக்காக ஒர்க் பண்ணோம்ல அந்த கிராமம் இப்ப மழையால ரொம்ப பாதிக்கப்பட்டு இருக்கு. அங்க இருக்கற 500 பேருக்கு 6 நாளைக்கு சாப்பாடு போடனும்’’

‘’நல்ல விஷயம் தான் அண்ணன் செஞ்சுடலாம். இப்ப அங்க அவ்வளவு மழையா?’’

‘’இந்த விஷயத்துல கொஞ்சம் கூட இருந்து சப்போர்ட் பண்ணு’’

‘’என் சப்போர்ட் உங்களுக்கு எப்பவும் எல்லா விஷயத்துலயும் உண்டு’’

நான் திட்டமிடல் என்ன என்பதை அவனிடம் விளக்கினேன். 

‘’இன்னும் ஒன் ஆர் டூ டேஸ்ல நாம ஆரம்பிக்கணும். நீ இந்த விஷயத்துக்குள்ள பல பேரை இன்குளூட் செய்யணும். ‘’

‘’செஞ்சுடலாம்ணா’’

‘’அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின்நோய் தந்நோய் போல் போற்றாக் கடை- ன்னு ஒரு திருக்குறள் இருக்கு. அடுத்த உயிரோட துன்பத்த தன்னோட துன்பமா நினைக்கறது தான் அறிவோட லட்சணம்னு வள்ளுவர் சொல்ராரு. ‘’

‘’இந்த திருக்குறள் கேட்டிருக்கேண்ணா. நான் வீட்டுக்கு போய்ட்டு ஃபோன் செய்றன்’’

கல்லூரிப் பேராசிரியர் ஃபோன் செய்து , ‘’பிரபு ! நான் சொல்ற விஷயங்களை நோட்ல குறிச்சு வச்சுக்க.’’ என்றார். 

நான் நோட்டில் பேனாவால் குறித்துக் கொண்டேன். 

‘’அரிசி 600 கிலோ. ரவா 300 கிலோ. கடலை எண்ணெய் 120 லிட்டர். காய்கறி  (கேரட், உருளை,தக்காளி) - 50 கிலோ. புளி - 60 கிலோ. ‘’

அன்னமே பிரம்மம் என்னும் உபநிஷத மந்திரத்தை எண்ணிக் கொண்டேன்.