Friday 26 November 2021

வாசகர்

இன்று அமெரிக்காவிலிருந்து ஒரு வாசகர் பேசினார். என்னுடைய வலைப்பூவை தொடர்ந்து வாசிக்கக் கூடியவர். ‘’காவிரி போற்றுதும்’’ முன்னெடுக்கும் செயல்பாடுகள் குறித்து தனது மகிழ்ச்சியைத் தெரிவித்தார். ‘’காவிரி போற்றுதும்’’ மக்கள் ஒருங்கிணைப்பை உருவாக்குவதை தனது பணிப் பாணியாகக் கொண்டது. எனவே அதன் செயல்பாடுகளின் வெற்றி முழுக்க முழுக்க  மக்களையே சாரும். எனவே பணி குறித்த எல்லா நற்சொற்களையும் வான் நோக்கி ‘’ ராம் கிருஷ்ண ஹரி’’ என்று சொல்லி இறைவனுக்கு அர்ப்பணித்து விடுகிறேன்.  

வலைப்பூவில் எழுதிய ‘’யானை பிழைத்தவேல்’’ தொடரை தொடர்ந்து வாசித்திருக்கிறார்.  அதன் பின் தினம் மூன்று கம்ப ராமாயணப் பாடலை வாசித்து அவற்றை அவர் திறக்கும் விதத்தை விரிவாக எழுதி வைத்திருக்கிறேன் என்று சொன்னார். அவற்றை எனக்கு அனுப்புமாறு கேட்டுக் கொண்டேன். கம்பன் கவி குறித்து சொல்வதற்கு அவருக்கு நூறு நூறு சொற்கள் இருக்கின்றன. கடந்த ஓராண்டாக கம்பனைத் தொடர்ந்து வாசிப்பதால் அவருக்குள் ஏற்பட்ட பல நுண் உணர்வுகளைத் தெரிவித்தார். அமெரிக்காவின் பூங்காக்களில் மலர்ந்திருக்கும் மலர்களைக் காண கம்பன் மேலும் இரண்டு கண்களை அளித்து விட்டதாக சொன்னார். 

பால், காஃபி , தேனீர் தவிர்த்திருப்பது குறித்து எழுதிய பதிவை வாசித்து விட்டு அதன் பாதிப்பில் அவரும் அவற்றைத் தவிர்த்து விட்டு இப்போது ‘’பிளாக் டீ’’ மட்டும் அருந்துவதாகச் சொன்னார். எனக்கு ஒரு ஜென் கவிதை நினைவில் வந்தது. அதனை அவரிடம் சொன்னேன். 

தேனீர் என்பது இவ்வளவுதான்
முதலில் தண்ணீரைக் கொதிக்க விடு
பிறகு தேயிலைப் போட்டுக் கலக்கு
பிறகு உரிய விதத்தில் அருந்து
இது தெரிந்தால்
போதும் உனக்கு