Wednesday, 3 November 2021

துவங்கிய இடம்

கல்லூரிப் படிப்பு முடித்து சில மாதங்கள் நான் சில பயணங்கள் மேற்கொண்டேன். கங்கையைக் காண ஹரித்வார் சென்று வந்தேன். தமிழ்நாட்டில் நான் சென்றிராத சில பகுதிகளுக்குச் சென்று வந்தேன். ஆயிரக்கணக்கான மக்கள் முகங்களை மக்கள் வாழிடங்களைப் பார்த்தவாறே பயணம். முன்பதிவு செய்யாத ரயில் பெட்டியிலோ அல்லது பேருந்திலோ பயணிப்பேன். காலை 6 மணிக்கு வீட்டில் கிளம்பினால் இரவு 9 மணிக்கு வீடு திரும்புவேன். ஊரில் மோட்டார்சைக்கிள் எடுத்துக் கொண்டு அருகில் இருக்கும் ஆலயங்களுக்குச் சென்று வருவதும் உண்டு. 

அதன் பின்னர் என் முதல் கட்டுமானப் பணியைச் செய்தேன்.

அதில் எனக்கு நிறைய அனுபவம் கிடைத்தது. தொழிலின் பல நடைமுறை விஷயங்கள் குறித்த புரிதல் உண்டானது.  நாம் எதை அறிந்தாலும் எதை உணர்ந்தாலும் நாம் நம்மைப் பற்றியே அறிகிறோம் ; உணர்கிறோம். 

என்னுடைய இரண்டாம் கட்டுமானப் பணியை நான் பொறியியல் கல்வி பயின்ற ஊரில் மேற்கொண்டேன். அந்த பணியிடம் கல்லூரியை நோக்கிச் செல்லும் சாலையில் அமைந்திருந்ததால் எனக்கு பாடம் எடுத்த பல விரிவுரையாளர்கள் அந்த வழியே செல்வார்கள். அப்போது எங்கள் பணியிடத்துக்கு வந்து வேலை எவ்விதம் நடைபெறுகிறது என்று பார்ப்பார்கள். பணியின் தரம் சிறப்பாக இருக்கிறது என்று அனைவருமே அபிப்ராயம் சொன்னார்கள். அது மிகுந்த மகிழ்ச்சி அளித்தது. 

கல்லூரியில் எங்கள் பேராசிரியர் ஒருவர் கூறுவார் : The college will teach you to solve ''n'' number of problems but you have to face ''n+1'' number of problems in real life. அதனை அனுபவபூர்வமாக உணர்ந்து கொண்டேன்.