Saturday 13 November 2021

இரண்டாம் நாள்

தமிழ்நாட்டில் ஒரு பொதுவான நம்பிக்கை உண்டு. முதல் நாள் பணியைப் போலவே இரண்டாம் நாள் பணியும் முக்கியமானது என. முதல் நாள் உருவாக்கித் தரும் துவக்க வேகத்தை முன்னெடுத்துக் கொள்ள வேண்டிய சூழ்நிலையை இரண்டாம் நாளில் உருவாக்கிக் கொள்ள வேண்டும்.  

இன்று காலை கிராமத்துக்குச் சென்றிருந்தேன். அங்கே உள்ள எனது நண்பரிடம் முதல் நாள் விஷயங்கள் குறித்து பகிர்ந்து கொள்ளவும் விவாதிக்கவும் எண்ணம். நான் சென்ற போது அவர் பூஜை செய்து கொண்டிருந்தார். ஐம்பது ஆண்டுகளாக காலையில் இருபது நிமிடங்கள் பூஜை செய்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். இப்போது அவருக்கு எண்பது வயது.  கூடத்தில் ஒரு பகுதி பூஜை அறை. நான் அமைதியாக அமர்ந்திருந்து யோசித்துக் கொண்டிருந்தேன். 

பூஜை முடித்து விட்டு நண்பர் வந்தார். நண்பரின் வீட்டுக்கார அம்மா எனக்கு ஒரு தஞ்சாவூர் ஃபில்டர் காஃபி கொண்டு வந்தார்கள். அவர்களுடைய சொந்த ஊரே தஞ்சாவூர். 

‘’அம்மா! இன்னையோட சரியா 43 நாள் ஆகுது காஃபி, டீ, பால் தவிர்த்து. இருந்தாலும் பிரியமா கொண்டு வந்துட்டீங்க. பரவாயில்லை’’

கையில் பூஜைத்தட்டுடன் கோயிலுக்குப் புறப்பட்டார். 

‘’என்னம்மா வழக்கமா சாயந்திரம் தானே கோயிலுக்குப் போவீங்க. இன்னைக்கு என்ன காலையிலயே?’’

’’இன்னைக்கு குருப்பெயர்ச்சி’’

‘’ஓ அப்படியா’’

நண்பர் நேற்று நடைபெற்ற பணி குறித்து கேட்டுக் கொண்டிருந்தார். சட்டென தனது சொந்த அனுபவம் ஒன்றை என்னிடம் சொன்னார். 

‘’என்னோட அப்பா ரொம்ப கரடுமுரடானவர் பிரபு. கடுமையானவர். அவர பாத்து வளந்ததால நான் எந்த விதமான ஹார்டுனெஸ்ஸையும் மனசுல வச்சுக்கக் கூடாதுன்னு முடிவு பண்ணன். சாஃப்ட்டா இந்த உலகத்தை அணுகிறவங்க தான் வலிமையானவங்க. இத்தனை வருஷ வாழ்க்கையில நான் உணர்ந்த விஷயம் இது’’

சமையல்கட்டில் வாணலியில் ஏதோ பொறியும் சத்தம் கேட்டது. 

‘’சார் அம்மா வாணலியில எதையோ வச்சுட்டு போயிருக்காங்க’’

அவர் சமையல் கட்டுக்குள் சென்றார். 

‘’அவங்களுக்கும் வயசாகுதில்லையா. மறந்திட்டாங்க. எப்படி உங்களுக்கு மட்டும் சத்தம் கேட்டது தெரிஞ்சது?’’

’’சார் நேத்து முழுக்க ஃபுட் பிரிபேர் பண்ண இடத்துல இருந்திருக்கன். வாணலி சூடாகி அதில் உணவுப் பொருள் இருந்தா என்னென்ன மாதிரி சத்தம் போடும்னு நேத்து முழுக்க அந்த சத்தங்களை கேட்டுக்கிட்டு இருந்தன்.’’

கொஞ்ச நேரம் ஆனது. 

நண்பரின் மனைவி வந்தார். அவர் உள்ளே நுழைந்ததுமே , ‘’அம்மா ! எண்ணெய் சட்டி அடுப்பில இருக்கும் போது ஆஃப் பண்ணாம கோயிலுக்குப் போய்ட்டீங்க. சார் தான் ஆஃப் செஞ்சார்’’ என்றேன். 

அவர் சமையல்கட்டுக்குள் அவசரமாக சென்றார். 

‘’பிரபு ! நான் ஸ்கூல் படிக்கும் போது படிச்ச ஒரு திருக்குறள் என் மனசை பாதிச்சுது. அதுல இருந்து நான் மாமிசம் சாப்பிடறதை நிறுத்திட்டேன். எங்க வீட்ல எல்லாரும் மாமிச உணவு சாப்பிடறவங்க. எங்க அம்மா எனக்கு மட்டும் சைவ உணவு கொடுக்க ரொம்ப கஷ்டப்படுவாங்க. பல நாள் அவங்களை சிரமப்படுத்த வேணாம்னு மோர் சாதம் மட்டுமே சாப்பிடுவேன். எனக்கு கல்யாணம் ஆன பிறகு எனக்காக ஒய்ஃபும் மாமிசம் சாப்பிடறதை நிறுத்திட்டாங்க.’’ 

நான் வாழ்க்கைக் காட்சிகளின் சம்பவங்களின் நூதனம் குறித்து எண்ணிக் கொண்டிருந்தேன். 

‘’சார் ! எனக்கு ஒரு ஐடியா இருக்கு. அத நீங்க தான் எக்ஸிகியூட் பண்ணனும்’’

‘’என்ன விஷயம்?’’

‘’நான் இங்க ஒரு மீட்டிங் அரேன்ஞ் செய்யறன். நூறு பெண்கள் கலந்துக்கற மாதிரி. நீங்க இத்தனை வருஷமா செய்யற பூஜையைப் பத்தி நீங்க ஸ்பிரிச்சுவாலிட்டின்னு உணர விஷயங்கள் பத்தி அவங்களுக்குச் சொல்லுங்க’’

‘’நான் ரொம்ப சாதாரண ஆள் பிரபு’’ 

‘’சாதாரணமானவங்க எந்த விஷயத்தையும் சரியா புரிஞ்சவங்களா கூட இருப்பாங்க சார்’’

‘’நாம சமயப் பிரச்சாரம் செய்யற யாரையாவது கூப்ட்டு மீட்டிங் அரேஞ்ச் செய்வோம்’’

‘’இல்லை சார் ! நீங்களே பேசுங்க. நீங்க விவசாயி. இந்த ஊர்ல இருக்கற நிறைய பேரு உங்களுக்கு சொந்தக்காரங்க. நீங்க சொல்ற விஷயங்களை ஆர்வமா கேட்பாங்க. நூறு பேர்ல பத்து பேரு நீங்க சொல்ற விஷயங்களை கன்சிடர் பண்ணாக் கூட அதுவே பெரிய சக்ஸஸ் சார்’’ 

நண்பருக்கு நான் என்ன சொல்கிறேன் என்பது முழுதும் பிடிபடவில்லை. 

‘’சார் ! ஒரு திருமந்திரப் பாடல் இருக்கு.

 யாவர்க்குமாம் இறைவற்கொரு பச்சிலை 

யாவர்க்குமாம் பசுவுக்கொரு வாயுறை 

யாவர்க்குமாம் உண்ணும்போது ஒரு கைப்பிடி

யாவர்க்குமாம் பிறர்க்கு இன்னுரை தானே 

நீங்க கேட்டிருப்பீங்க. முதல் லைன் பூஜை - ஆலய வழிபாடு போன்ற வழிமுறைகள் தொடர்பானது. ரெண்டாவது லைன் நம்மோட சக ஜீவன்கள் மேல காட்டுற பிரியம் அன்பு தொடர்பானது. மூணாவது லைன் சக மனுஷங்கள் மேல நாம எடுத்துக்கற பொறுப்பு அக்கறை அன்பு தொடர்பானது. கடைசி லைன் நம்மோட சோஷியல் இண்டெலிஜென்ஸ் தொடர்பானது. இந்த நாலுமே உங்க லைஃப்ல இருக்கு. உங்களுக்கு சாத்தியம் ஆனது எல்லாருக்கும் சாத்தியம் தான். இந்த நாலும் ஒவ்வொருத்தருக்கும் சாத்தியம் ஆகணும்னு கட்டாயம் இல்லை. நாலுல ஒன்னு அவங்களுக்கு ஓப்பன் ஆனாலோ பிராக்டிஸ் ஆனாலோ அதுவே கிரேட் திங்’’

நண்பர் என்னிடம் ‘’உங்களுக்கு நிறைய விஷயம் தெரிஞ்சிருக்கு. நீங்களே பேசுங்க.’’ என்றார். 

’’நாம டிஸ்கஸ் பண்ணி என்ன விஷயம் பேசனும்னு முடிவு பண்ணுவோம். நீங்க பேசுங்க. அதான் கரெக்ட்டா இருக்கும்.’’

நண்பர் சம்மதித்தார். 

‘’மீட்டிங்கை நான் டிசைன் செய்றன். ஆலயத் தூய்மை, எறும்புகளுக்கும் காக்கை பட்சிகளுக்கும் உணவிடுதல், தீப வழிபாட்டின் தொன்மை, சக மனுஷங்க கிட்ட கனிவா நடந்துக்கறது, வீட்டுல மலர்ச்செடிகளை வளக்கறது , மரம் வளக்கறதுன்னு இந்த விஷயங்களை நீங்க பேசணும். இந்த மாதிரி விஷயங்கள் தான் சார் நம்ம நாட்டோட ஆன்மீகம்’’ 

நண்பர் ஆமோதித்தார். 

‘’மீட்டிங் முடிஞ்சு அவங்க போகும் போது ஒவ்வொருத்தருக்கும் ஒரு வன்னி மரக் கன்னு கொடுத்து வீட்டுல வச்சு வளர்க்க சொல்லுவோம். ஒரே நாள்ல நூறு மரக்கன்னு ஊர்ல பிளாண்ட் ஆகும்’’ 

அடுத்த திட்டம் உருவான மகிழ்ச்சியுடன் புறப்பட்டேன். 

இன்று 500 பேருக்கு கிச்சடி செய்து எடுத்துக் கொண்டு மாலை 5.30க்கு கிராமத்துக்குச் சென்று வினியோகித்தோம். கல்லூரிப் பேராசியரான எனது நண்பரும் உடன் வந்து வினியோகித்தார். அவருக்கு மிகவும் மகிழ்ச்சி. அரைமணி நேரத்தில் கொண்டு சென்ற உணவு தீர்ந்தது. வீடு திரும்பும் போது, நண்பர் நாளை எலுமிச்சை சாதம் அல்லது வெஜிடபுள் சாதம் செய்து கொண்டு செல்வோம் என்றார்.