Monday, 22 November 2021

ஓவியம்

உனது ஓவியத்தை
தீற்றிக் கொண்டிருக்கிறேன்
பாறை உருகிய நீர் அருவியென
கொப்பளிக்கிறது
உனது கூந்தல்
இடைவெளிகளில் நிரம்புகின்றன
மேகங்களும் அடர் இரவும்
உதயத்தின் வானமும்
அஸ்தமனத்து அந்தியும்
தீட்டப்படும் போது
உனது முகத்தின் நெற்றி 
மெல்ல மெல்ல புலப்படுகிறது
வற்றாத நதிகள் வரையப்பட்ட போது
அவை  கண்களாயின
நிலமும்
காற்றும்
நீரும்
தீயும்
வரைந்த பின்னால்
வானம் 
அந்த ஓவியத்தில்
நிரப்பிக் கொண்டது
தன்னை