உனது ஓவியத்தை
தீற்றிக் கொண்டிருக்கிறேன்
பாறை உருகிய நீர் அருவியென
கொப்பளிக்கிறது
உனது கூந்தல்
இடைவெளிகளில் நிரம்புகின்றன
மேகங்களும் அடர் இரவும்
உதயத்தின் வானமும்
அஸ்தமனத்து அந்தியும்
தீட்டப்படும் போது
உனது முகத்தின் நெற்றி
மெல்ல மெல்ல புலப்படுகிறது
வற்றாத நதிகள் வரையப்பட்ட போது
அவை கண்களாயின
நிலமும்
காற்றும்
நீரும்
தீயும்
வரைந்த பின்னால்
வானம்
அந்த ஓவியத்தில்
நிரப்பிக் கொண்டது
தன்னை