Wednesday 15 December 2021

a s d f g f ; l k j h j (நகைச்சுவைக் கட்டுரை)

2003ம் ஆண்டு பொறியியல் பட்டம் பெற்றதும் உண்மையில் ‘’அப்பாடா’’ என இருந்தது. தமிழ்நாட்டில் பள்ளிக்கல்வியோ கல்லூரிக்கல்வியோ எவருக்கும் உவப்பளிக்கும் விதத்தில் இருக்காது என்பதே உண்மை. பள்ளிக்கல்வியில் உயர்நிலை மற்றும் மேல்நிலையில் மொழிக்கல்விக்கான முக்கியத்துவம் என்பது இல்லாமல் ஆக்கப்பட்டுள்ளது. சமூக அறிவியல் மழுங்கடிக்கப்பட்டுள்ளது. கணிதமும் அறிவியலும் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளன. உயர்நிலை பள்ளிக்கல்வியில் மொழிப்பாடங்களும் கணிதமும் அறிவியலும் சமம் எனினும் மானசீகமாக பெற்றோராலும் மாணவர்களாலும் ஆசிரியர்களாலும் மொழிக்கல்வியும் சமூக அறிவியலும் ஒதுக்கி வைக்கப்படுகின்றன. பள்ளிக்கல்வியில் பொருளாதாரம், வணிகவியல் பயிலும் மாணவர்கள் அந்தப் பாடங்களை ஆர்வத்துடன் கற்க வாய்ப்பு இருக்கக் கூடும் என்று நான் யூகிக்கிறேன். அவை சாமானியர்களின் அன்றாட வாழ்வை - செயல்பாடுகளை தங்கள் பாடத்தின் அடிப்படையாகக் கொண்டுள்ளன. மாணவர்கள் அப்பாடங்களை கற்பனை செய்து பயில முடியும். கல்லூரியிலும் அதனை விரிவாக புரிந்து கொள்ள முடியும். 

தமிழ்நாட்டில் அறிவியல் கல்வியையும் தொழில்நுட்பக் கல்வி பின் தள்ளி விட்டது. அரசு  வேலைவாய்ப்பு என்பதை மிகப் பெரிய விஷயமாக தமிழ்நாட்டில் ஆக்கி விட்டனர். பள்ளிக்கல்வி மற்றும் கல்லூரிக் கல்வியை சமூகத்தின் பொருளியல் மாற்றத்துக்கான ஒரு கருவியாக பயன்படுத்த முடியும். எனினும் தமிழ்நாட்டில் அது நிகழவில்லை. ஒவ்வொரு காலகட்டத்தை ஒவ்வொரு பணி வாய்ப்புகள் ஆதிக்கம் செலுத்தின. அதனை நோக்கிச் சென்றவர்கள் ஏதேனும் ஒரு வேலை வாய்ப்பில் பொருந்திக் கொண்டனர். பொறியியல் படித்தவர்கள் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் வேலை பார்த்தனர். வங்கிப் பணிக்குச் சென்றனர். 

எல்லா மாணவர்களுக்கும் இவ்வகையான அனுபவமே இருக்கும் என்றாலும் ‘’கிரியேட்டிவ்’’ மனநிலை கொண்டவர்களுக்கு பள்ளியும் கல்லூரியும் அளிக்கும் நுட்பமான சுமைகள் கணிசமானவை. 

நான் கடைசி பரீட்சை எழுதினோமோ பஸ்ஸைப் பிடித்து ஊர் வந்து சேர்ந்தோமா என்று இருந்தேன். ‘’அப்பாடா’’ இனிமேல் நாம் நினைப்பதை செய்யலாம். வருகைப் பதிவு கிடையாது. சைக்கிள் டெஸ்ட் கிடையாது. இண்டெர்னல் மார்க் கிடையாது. அசைன்மெண்ட் கிடையாது. இவையெல்லாம் இல்லை என்ற நினைவே ஒரு புதிய உலகத்தை உண்டாக்கியது போல் இருந்தது. 

இருந்தாலும் இவ்வளவு கடினமாக ஒரு பாதையைக் கடந்த அனுபவம் இருந்ததால் ஏதேனும் ஒரு புதிய கல்வியை கற்க வேண்டும் என்று விரும்பினேன். நான் தேர்ந்தெடுத்தது தட்டச்சு. ஒரு தட்டச்சு வகுப்பில் சேர்ந்தேன். அங்கே உடன் பயில்பவர்கள் அனைவரும் சிறுவர்கள். எட்டாம் வகுப்பு ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டிருப்பவர்கள். பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு என்பதால் ஒன்பதாம் வகுப்பு தேர்ச்சி பெறுவதற்குள் தட்டச்சு பயின்று விட வேண்டும் என வகுப்பில் இணைந்திருப்பவர்கள். 

a s d f gf ; l k j h j என ஆரம்பப் பாடத்தை பயில ஆரம்பித்தேன். என்னிடம் அப்போது கணிணி இல்லை. எனவே தட்டச்சு வகுப்பில் தட்டச்சு எந்திரம் தான் ஒரே தொடர்பு. ஒரு மணி நேரத்தில் இரண்டு பக்கம் அடிக்க வேண்டும் . என்னால் ஒரு பக்கம் தான் அடிக்க முடியும். எனக்குப் பின்னால் சேர்ந்த சிறுவர்கள் எந்த சிரமமும் இல்லாமல் ஒரு நாளைக்கு இரண்டு பக்கம் தட்டச்சிடுவார்கள். நான் எப்போதுமே ஒரு பக்கத்தைத் தாண்டியது இல்லை. தட்டச்சின் அடிப்பையான நடு வரிசை, மேல் வரிசை மற்றும் கீழ் வரிசை பாடங்களை மெல்ல மெல்ல கற்று a b c d e f .... z வரை 26 எழுத்துக்களையும் தட்டச்சிட கற்றுக் கொண்டேன். என்னுடன் பயின்ற சிறுவர்கள்  z y x w v u t ... எனத் தொடங்கி a வரை சென்று சேரும் தலைகீழ் பயிற்சியும் பெற்று பத்திகளை குறிப்பிட்ட நேரத்துக்குள் தட்டச்சிடும் நிலைக்குச் சென்று விட்டனர். 

தட்டச்சுப் பயிற்சி என்பது ஒன்றைப் பார்த்து தட்டச்சுப் பொறியில் தட்டச்சிடுவது. கண்கள், மனம், கைவிரல்கள், எந்திரம் என இந்த நான்கினுக்கும் ஒரு ஒருங்கிணைப்பை ஏற்படுத்துவது. ஏ பி சி டி ஈ எஃப் ஜி ஹெச் தெரியும் என்றாலும் கண்கள் ஒவ்வொரு அட்சரமாகப் பார்த்துத்தான் தட்டச்சிட வேண்டும். நான் ஸ்கிரிப்டைப் பார்க்க மாட்டேன். அதனை எப்போதும் சுட்டிக் காட்டுவார்கள். உடன் பயின்ற சிறுவர்கள் அனைவரும் பரீட்சைக்குப் பணம் கட்டும் நிலைக்கு வந்து விட்டார்கள். அப்போது நான் ஆங்கில் அட்சரங்களை தலைகீழாக அடித்துக் கொண்டிருந்தேன். நான் ஒருநாள் கூட ஒரு பக்கத்தைத் தாண்டியது இல்லை. எனது தட்டச்சு பிழை இல்லாமல் இருக்கும். ஆனால் ஒரு பக்கம் தான் இருக்கும். சிறுவர்கள் இரண்டு பக்கம் அடிப்பார்கள் ஆனால் பிழைகள் கணிசமாக இருக்கும். 

ஏ பி சி டி பயின்று விட்டோமே என்று வகுப்புக்குச் செல்வதை நிறுத்தி விட்டேன். சில மாதங்கள் சென்றன. மீண்டும் வகுப்புக்குச் சென்றேன். ஏ பி சி டி யிலிருந்து ஆரம்பித்தேன். ஆசிரியர் வந்து பார்த்தார். ஏ எஸ் டி எஃப் லிருந்து ஆரம்பியுங்கள் என்றார். மீண்டும் சில மாதங்கள் பயின்று அட்சர வரிசைக்கு வந்தேன். வகுப்பை நிறுத்தி விட்டேன். 

பயிற்சியில் நமக்கு சில பின்னடைவுகள் இருக்கின்றன. அதனை சரி செய்வோம் என மீண்டும் வகுப்புக்கு செல்வோம் என முடிவெடுத்தேன். இம்முறை சென்ற இடத்துக்கே செல்வதற்குப் பதில் புதிய இடத்தில் சேர்ந்தேன். அங்கும் முதலில் இருந்து. அங்கும் அட்சர வரிசையில் நிறுத்தம். பின்னர் இன்னொரு இடம் . இன்னொரு இடம். எங்கும் அட்சரத்தைத் தாண்டவில்லை. 

பொறியியல் பட்டம் பெற்று சில ஆண்டுகளில் மடிக்கணினி வாங்கினேன். அப்போது அனைவரிடமும் மேஜைக் கணினிதான் இருக்கும். மடிக்கணினி குறைவு. தமிழ் யூனிகோட் அப்போது  பிரபலமாகிக் கொண்டிருந்தது. லேப்டாப்பில் தமிழ் டிரான்ஸ்லிட்டரேஷன் முறையில் அ ஆ இ ஈ உ ஊ எ ஏ என டைப் செய்தேன். முதல் முறையிலேயே உயிரெழுத்தும் மெய்யெழுத்தும் எளிதாக தட்டச்சிடும் முறையில் இருந்தன. பின்னர் சில வார்த்தைகளையும் தட்டச்சிட்டேன். மள மள என கணினி திரையில் எழுத்துக்கள் நிறைந்தன. 

12 + 4 வருடங்கள் என்ற முறையில் பயின்ற பள்ளி மற்றும் கல்லூரிக் கல்வியை நல்ல மதிப்பெண் பெற்று நிறைவு செய்தோம் ஆனால் தட்டச்சுப் பரீட்சைக்கு பணம் கட்டும் நிலைக்குக் கூட வர முடியவில்லையே என இப்போதும் நினைப்பேன்.