Friday 10 December 2021

எண்களை எண்ணுதல்

இன்று ஒரு இளைஞருடன் பேசிக் கொண்டிருந்தேன். சமூகப் பிரக்ஞை உள்ளவர். சேவையில் ஆர்வம் கொண்டவர். பொது வேலைகளை சுயமாக முன்வந்து ஆற்றுபவர். தன் மனதில் இருக்கும் ஐயங்கள் சிலவற்றை என்னிடம் கேட்டார். எந்த வினாவும் எழுப்பப்படும் போது அதன் அடிப்படைகளை நோக்கிச் சென்று பதில்களை விரிவாக முன்வைப்பது எனது வழக்கம்.  

அரசாங்கப் பணியிடங்கள் அதிகம் உருவாக்கப்படுவதும் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்படுவதும் இளைஞர்களுக்கு பயன் தருமா என்று கேட்டார். 

அவரிடம் நான் சில வினாக்களை எழுப்பினேன். அதற்கு அவர் விடையளித்தார். 

கேள்வி : தமிழ்நாடு மக்கள்தொகை எவ்வளவு ?

பதில் : ஏழு கோடி

கேள்வி : தமிழ்நாட்டில் அரசு வேலை பார்ப்பவர்கள் எத்தனை பேர் ? 

பதில் : பதினாலு லட்சம்

கேள்வி : ஏழு கோடியில் 14 லட்சம் எத்தனை சதவீதம்?

பதில் : இரண்டு சதவீதம்

கேள்வி : உங்க ஊரோட மக்கள்தொகை எவ்வளவு ?

பதில் : 5000 

கேள்வி : சதவீதக் கணக்கு படி அரசு ஊழியர் எண்ணிக்கை எவ்வளவு ? 

பதில் : நூறு பேர்

கேள்வி : சராசரியா ஒவ்வொருத்தரும் அறுபதாயிரம் ரூபா சம்பளம் வாங்குவதா வச்சுக்கவோம். அப்ப அந்த நூறு பேரோட வருட வருமானம் என்ன?

பதில் : ஏழு கோடியே இருபது லட்சம்

கேள்வி : உங்க ஊர் பாப்புலேஷன்ல அரசு ஊழியர்கள் போக மீதி எத்தனை பேர் இருக்காங்க?

பதில் : 4900 பேர்

கேள்வி : உங்க ஊர்ல ஒரு ஜூவல்லரி இருக்கு . அதோட ஒரு வருஷ லாபம் மூணு லட்சம். ஒரு பெட்ரோல் பங்க் (7,20,000).  ஒரு ஹோட்டல் (3,60,000). தேனீர்க்கடை (2,70,000). பால் வியாபாரம் (3,24,000). பால் கடை (4,32,000). இறைச்சிக் கடை (4,80,000). ஆடு வியாபாரம் (12,00,000). உர வியாபாரம் (2,50,000). மீன் வியாபாரம் (3,60,000). காய்கறிக் கடை (7,20,000). வீட்டு வாடகை ( 18,00,000). கடை வாடகை (18,00,000). இணைய சேவை (1,20,000). வெல்டிங் பட்டறை (4,80,000) .ஹார்டுவேர் (3,60,000). பூ வியாபாரம் (1,20,000). சலூன் (7,20,000). இந்த தொழில்களோட மொத்த ஒரு வருஷ லாபம் 1,08,16,000. இந்த கடைகள்ல சம்பளத்துக்கு வேலை பாக்கறவங்க குறைந்தபட்சமா 25 பேர் இருப்பாங்கன்னும் அவங்களோட மொத்த வருஷ வருமானம் 15,00,000ம்னும் கணக்கு வச்சுப்போம். (1,08,16,000 + 15,00,000 = 1,23,56,000). வெளிநாட்டுல தொழிலாளரா வேலை பாக்கறவங்க ஒரு 50 பேர் இருப்பாங்கன்னும் அவங்க சராசரியா மாசம் அம்பதாயிரம் ஊருக்கு அனுப்பறதாவும் வச்சுக்கங்க. அந்த தொகை மூணு கோடி. 

15 ஏக்கர் நிலம் வச்சுருக்கவங்க 20 குடும்பம் இருப்பாங்க. அவங்க மாச வருமானம் 75,000 . 10 ஏக்கர் நிலம் வச்சிருக்கவங்க 20 குடும்பம் இருப்பாங்க. அவங்க மாச வருமானம் 50,000. 5 ஏக்கர் நிலம் வச்சிருக்கவங்க 50 குடும்பம் இருப்பாங்க. அவங்க மாச வருமானம் 25,000. விவசாயத் தொழிலாளர் 500 பேர்.  அவங்க மாச வருமானம் 6000ம்னு கணக்கு வச்சுக்கங்க. இப்ப விவசாயம் சார்ந்து மொத்தமா கணக்கு பண்ணுங்க. எட்டு கோடியே பத்து லட்சம் ரூபாய். 

தொழில் மற்றும் விவசாய வருமானத்தை சேர்த்து சொல்லுங்க. 

பதில் : 12 கோடியே 33 லட்சத்து 16 ஆயிரம் ரூபாய் 

அந்த இளைஞரிடம் நான் கூறினேன். ‘’அதாவது தம்பி! யானை படுத்தாலும் குதிரை மட்டம்னு சொல்லுவாங்க. விவசாயமோ நாம கணக்கு பண்ணியிருக்க தொழில்களோ எதையும் சாராம சுயசார்போட இயங்கக் கூடிய தொழில்கள். நாம ரேண்டமாத்தான் கணக்கு பண்ணியிருக்கோம். விவசாய வருமானம் இரு மடங்கு ஆச்சுன்னா கிராமத்தோட எக்கனாமிக் ஸ்ட்ரக்சரே வேற மாதிரி இருக்கும். சாமானிய மக்களுக்கு குறைந்தபட்சமான முதலீடு வங்கிக்கடனா கிடைச்சாக் கூட பெரிய மாற்றம் நடக்கும்.  விவசாயம், தொழில் இந்த ரெண்டு விஷயத்தைத் தான் இளைஞர்கள் முக்கியமா நினைக்கணும். முக்கியமா நினைச்சா நாம பொழச்சோம்.’’

கேள்வி : அரசாங்க ஊழியர் எண்ணிக்கை கூடுமா?

பதில் : தெரியலையே

கேள்வி : மொத்த மக்கள்தொகைல ரெண்டு சதவீதம்ங்கறதே ரொம்ப பெரிசு. இந்த சைஸ் இனிமே கொஞ்சம் குறையுமே தவிர நிச்சயமா கூடாது. அப்ப மத்தவங்க என்ன செய்றது?

பதில் : சுயதொழில் செய்யறது நல்லது. 

இளைஞர் புரிந்து கொண்டது மகிழ்ச்சி அளித்தது.