Monday 31 January 2022

சாமானியனின் குரல்

என் கவனத்துக்கு நேரடியாக வரும் விஷயங்கள் குறித்து ஏதேனும் செய்ய முயல்வது என்ற தீர்மானத்தில் இருக்கிறேன்.  சமூக விழிப்புணர்வு என்பது சமூகத்தின் அங்கமான மக்கள் பல்வேறு விஷயங்கள் குறித்து அறிந்திருப்பதும் உணர்ந்திருப்பதும் சிந்திப்பதும் தான். எந்திர கதியான தன்மை கொண்ட பழக்கம் என்பது மக்கள் வாழ்க்கைமுறையை பெருமளவு கட்டமைத்து விடுகிறது. அதிலிருந்து விடுபட்டால் மக்கள் தங்கள் துயரிலிருந்து சிறிதளவாவது மீள்வர். அந்த சிறிதளவு மீட்சியையாவது அவர்களுக்கு அளிக்க வேண்டும் என்பதே எனது செயல்முறைகளின் அடிப்படை. 

எனது தொடர்பில் இருக்கும் கிராமத்து மக்கள் பல விஷயங்கள் குறித்து என்னிடம் சொல்வார்கள். கேட்பார்கள். 

அவர்களால் எளிதாக செய்யக் கூடிய விஷயங்களை அவர்களுக்கு ஒருங்கிணைத்துக் கொடுத்தாலே அவர்கள் அதனை முன்னெடுத்துச் செல்வார்கள். இன்று மாலை ஒரு விவசாயியை அஞ்சல் அலுவலகத்தில் தற்செயலாகப் பார்த்தேன். ‘’ சார் ! நீங்க கொடுத்த தேக்கு கன்னு இப்ப 15 அடி உய்ரம் வளந்துருக்கு’’ என்றார். மகிழ்ச்சியாக இருந்தது. ‘’ஊர்ல மத்தவங்க மரம் எப்படி வளந்திருக்கு?’’ என்றேன் . எல்லாம் நல்லா இருக்கு என்றார். 

பல விதமான பணிகள். அதன் மறுபக்க உண்மையான பல விதமான கடுமையான அலைச்சல்கள். தனியாக பல விஷயங்களை செய்து கொண்டிருப்பதாக எப்போதாவது தோன்றும். நான் பணி என இறங்கி விட்டால் தீவிரமாக மிகத் தீவிரமாகப் பணியாற்றக் கூடியவன். என் சொந்த வேலையாக இருந்தாலும் அப்படித்தான். பொது வேலையாக இருந்தாலும் அப்படித்தான். 

நேற்று ஒரு தென்னந்தோப்பு ஒன்றில் என் நண்பர் ஒருவரிடம் என் பொது வேலைகள் குறித்து கூறிக் கொண்டிருந்தேன். அந்த தோப்பின் காவலர் நாங்கள் பேசுவதைக் கவனித்துக் கொண்டிருந்தார். நாங்கள் கிளம்பும் சமயத்தில் என்னிடம் சொன்னார். ‘’ சார்! நீங்க சரின்னு நினைக்கற விஷயத்தை தயங்காம செய்ங்க சார்.  ஜனங்களுக்கு ஏதாவது செய்யணும்னு நினக்கறவங்களே கொறச்சல். செய்யணும்னு முடிவு செஞ்ச ஒருத்தரால கூட பல பேர் வாழ்க்கைல மாற்றம் கொண்டு வர முடியும் ‘’ என்றார்.