Wednesday 2 March 2022

ஆற்றல்

2016ம் ஆண்டு மயிலாடுதுறையிலிருந்து ஒரு நீண்ட மோட்டார்சைக்கிள் பயணத்தைத் துவக்கினேன். அந்த பயணம் எனக்குப் பலவிதமான அகத் திறப்புகளை அளித்தது.  வாழ்க்கை குறித்த ஆழமான புரிதல்களை உருவாக்கியது. அதில் நான் நேரடியாக உணர்ந்த விஷயம் ஒன்று உண்டு. அந்த பயணத்தில் எப்போதும் ஒரு நாளில் வழக்கமாக உண்ணும் அளவு உணவை எடுத்துக் கொள்ளவில்லை. உணவின் அளவு கிட்டத்தட்ட பாதியாகக் குறைந்திருப்பதைக் கவனித்தேன். தினமும் 250 கி.மீ க்கு குறையாமல் பயணிக்க வேண்டும். புராதான இடங்களைக் காண வேண்டும். நான்கு மடங்கு ஆற்றலுடன் செயல்பட்டுக் கொண்டிருப்பேன். எனினும் எடுத்துக் கொள்ளும் உணவு குறைவுதான். ஒரு ரொட்டி ஒரு தால் ஃபிரை. எலுமிச்சைத் துண்டுகள் துணை உணவாக இருக்கும். அந்த உணவே போதுமானதாக இருக்கும். சில நாட்கள் இரவு உணவாக வாழைப்பழத்தை மட்டும் உண்டு விடுவேன். 

நமது வழமையில் உணவு நம் மனத்தில் ஏறி இருக்கிறது. நம் நினைவுடனும் ஞாபகங்களுடனும் இணைந்து இருக்கிறது. உடல் இயங்க உணவு தேவை. எனினும் நாம் உடலைத் தாண்டி மனத்துக்கு உணவைக் கொண்டு சென்று விட்டோம். 

உண்ணும் உணவு குறித்த விழிப்புணர்வு நமக்குத் தேவைப்படுகிறது.