Thursday 3 March 2022

பதில் கடிதம்

தகவல் பெறும் உரிமைச் சட்டம் (2005) குடிமக்களையும் அரசாங்கத்தையும் இணைப்பதை மிக அற்புதமாகச் செய்கிறது. தகவல் அளிக்கும் அலுவலருக்கு தான் அளித்த தகவல்களின் மேல் பொறுப்பு உண்டு என்பதும் குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் தகவல் அளிக்கவில்லை என்றால் தகவல் கேட்டவருக்கு அபராதம் செலுத்த வேண்டும் என்பதும் அந்த சட்டத்தை உயிர்ப்பான ஒன்றாக ஆக்குகின்றன.  

தகவல் பெறும் உரிமைச் சட்டம் படி தகவல் பெற ரூ.10 கட்டணம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனை வங்கி வரைவோலையாகவோ கருவூல சலானாகவோ நீதிமன்ற வில்லையாகவோ அல்லது இந்திய போஸ்டல் ஆர்டராகவோ செலுத்தலாம். வங்கி வரைவோலை எனில் வரைவோலை கமிஷன் ரூ.30லிருந்து ரூ.45 வரை ஆகும். இந்திய போஸ்டல் ஆர்டரின் கமிஷன் ஒரு ரூபாய் மட்டுமே. தபால் அலுவலகங்கள் எண்ணிக்கையில் அதிகம் இருப்பதாலும் பரவலாகப் பரவியிருப்பதாலும் அதனைப் பெறுவது மற்ற முறைகளினும் ஒப்பீட்டளவில் எளிதானது. 

இந்த சட்டத்தின் படி தகவல்களைக் கோரும் போது நான் போஸ்டல் ஆர்டர்களைகளைப் பயன்படுத்துவதை விரும்புவேன். சமீபத்தில் ஒரு அஞ்சல் அலுவலகத்தில் ரூ.10 போஸ்டல் ஆர்டர் வாங்கச் சென்றேன். அங்கே இருப்பு இல்லை. தலைமை தபால் நிலையம் சென்று வாங்கினேன். 

ரூ.10 க்கான இந்திய போஸ்டல் ஆர்டர் எல்லா கிளை அஞ்சல் அலுவலகங்களிலும் இருப்பு இருப்பதை உறுதி செய்வது தகவல் பெறும் உரிமைச் சட்டத்தைப் பயன்படுத்தும் பொதுமக்களுக்கு உதவிகரமானது எனத் தெரிவித்து ஊரின் அஞ்சல்துறை கண்காணிப்பாளருக்கு சில நாட்கள் முன்னால் ஒரு கடிதம் எழுதினேன். நேற்று அவரிடமிருந்து ஒரு பதில் கடிதம் பதிவுத் தபாலில் வந்தது.

ஊரின் அனைத்து அஞ்சல் அலுவலகங்களுக்கும் ரூ.10 இந்திய போஸ்டல் ஆர்டரை இருப்பு வைத்துக் கொள்ள குறிப்பு வழங்கப்பட்டுள்ளது என பதில் கடிதம் எழுதியிருந்தார். 

இவரைப்  போன்ற அதிகாரிகள் அரசாங்கம் என்பது நம்முடையது ; நமக்கானது என்ற உணர்வை பொதுமக்களிடம் உருவாக்குகிறார்கள். 

அவருக்கு நன்றி தெரிவித்து ஒரு கடிதம் நேற்று அனுப்பினேன்.