Monday 7 March 2022

இரவு பகல்

இரண்டு நாட்களுக்கு முன்னால், இரவு 10.15க்கு ஒரு நண்பர் அலைபேசியில் அழைத்தார். அவரது உறவினர் ஒருவர் பயணித்த காருக்கு ஒரு விபத்து ஏற்பட்டது எனத் தெரிவித்தார். ஊரிலிருந்து 25 கி.மீ தொலைவில் உள்ள இடத்தில் விபத்து. வண்டியில் பயணித்தவர்களுக்கு இங்கேயிருந்து ஒரு வாடகை வாகனம் ஏற்பாடு செய்து அனுப்பினோம். பின்னர் காவல் நிலையத்தில் சம்பவம் குறித்து தெரிவித்து விட்டு வாகனத்தை பட்டறைக்கு எடுத்துச் சென்றோம். கார் உற்பத்தி நிறுவனத்துடன் இணைந்த பட்டறை. நள்ளிரவு 1 மணி அளவில் வாகனத்தை அங்கே விட்டு விட்டு உடனிருந்தவர்களை ஒரு ஆட்டோ ஏற்பாடு செய்து அருகில் உள்ள பேருந்து நிலையத்தில் பேருந்தில் பயணித்து ஊர் வந்து சேருமாறு சொல்லி விட்டு நானும் நண்பரும் இரண்டு மோட்டார்சைக்கிள்களில் பயணித்து ஊர் வந்து சேர்ந்தோம். அப்போது காலை 4 மணி. சில மணி நேரம் படுத்து உறங்கி விட்டு எழுந்து குளித்துத் தயாராகி மீண்டும் விபத்து நிகழ்ந்த பகுதியின் காவல் நிலையம் சென்று மனு ரசீது , சான்று பெற்றுக் கொண்டு பட்டறைக்குச் சென்று வாகனக் காப்பீடு தொடர்புடைய வேலைகளை முடித்து விட்டு மாலை 6 மணிக்கு ஊர் திரும்பினோம். வாகனம் ஒரு வாரத்தில் தயாராகும் என்றார்கள். கிட்டத்தட்ட இருபது மணி நேரம் தொடர்ச்சியாக அலைந்து கொண்டே இருந்தோம். எவ்வளவு பரபரப்பிலும் மனதின் ஒரு பகுதி எல்லாவற்றையும் வேடிக்கை பார்த்துக் கொண்டே இருக்கிறது - மிக அமைதியாக.