Friday 11 March 2022

கால்சியம்

இன்று இரவு ஒரு பிரிண்ட் அவுட் எடுக்க வேண்டியிருந்தது. பைக்கை எடுத்துக் கொண்டு புறப்பட்டேன். வேலைகளை முடித்து விட்டு வண்டியை மேலே ஏற்றி கதவைப் பூட்டி விட்டேன். அவ்வாறு செய்து விட்டால் மறுநாள் தான் மீண்டும் வெளியே செல்வேன். கறாரான விதி கிடையாது. ஒரு பழக்கம் அவ்வளவே. எனினும் இன்று விதிவிலக்காகக் கிளம்பினேன்.  

வீட்டிலிருந்து 100 மீட்டர் சென்றிருப்பேன். எனக்கு பரிச்சயமான ஒருவர் சாலையில் நின்று கொண்டிருந்தார். நான் கடந்து சென்று விட்டேன். ஒரு சில வினாடிகளில் அவர் கடைத்தெரு செல்ல கையில் வாகனம் இல்லாமல் நிற்கிராரோ என்ற எண்ணம் தோன்றியது. வண்டியைத் திருப்பிக் கொண்டு அவரிடம் சென்றேன். ‘’சார் ! பிளே கிரவுண்ட்க்கு எதிர இருக்கற ஜெராக்ஸ் கடைக்குப் போறன். நீங்க கடைத்தெரு போகணுமா? நான் டிராப் செய்யட்டுமா?’’என்று கேட்டேன். அவர் மகிழ்ச்சியுடன் ஏறிக் கொண்டார். 

‘’சார்! சாரி சார். நான் உங்களைப்  பாத்தன் ஆனா வாக்கிங் போறீங்கன்னு நினைச்சுக்கிட்டன். அதனால தான் தாண்டிப் போயிட்டன்.’’

‘’வாக்கிங் காலைல போறன் தம்பி. இன்னைக்கு ஏ.டி.எம் ல பணம் எடுக்கணும். அதனால தான் வந்தேன்.’’

அவரது மகன் ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தில் பணி புரிகிறார். அவருடைய சௌக்கியத்தை விசாரித்தேன். 

நண்பர் என்னிடம் ஒரு விஷயம் சொன்னார். 

‘’தம்பி! என்னோட முதுகுத் தண்டுவடத்தில லேசா ஒரு வலி இருக்கு தம்பி”

தண்டுவடம் ரொம்ப ‘’சென்சிடிவ்’’ என்றாலும் நான் மையமாக ‘’அப்படியா’’ என்றேன். அவர் ஆமோதித்து விட்டு அமைதியாக இருந்தார். நானும் எதுவும் பேசாமல் மௌனமாக யோசித்தேன். 

‘’உங்களுக்கு வலி எப்ப இருக்கு? நிற்கும் போது நடக்கும் போதா?’’

‘’இல்ல தம்பி! நாற்காலில ரொம்ப நேரம் ஒக்காந்திருந்து எழுந்திருக்கும் போது. தூங்கி எழுந்திருக்கும் போது’’

எனக்கு பிரச்சனை ரொம்ப பெரிதில்லை என்று தோன்றியது. 

‘’இது மேஜர் இல்ல. மைனர் இஸ்யூ தான். அதாவது, தண்டுவடத்தில ரத்த ஓட்ட்ம் ஒக்காந்திருக்கும் போதும் படுத்திருக்கும் போதும் கொஞ்சம் குறைவா இருக்கு. அத சீராக்கனும். தண்டுவடத்த இன்னும் கொஞ்சம் வலுவாக்கனும்.’’

‘’அதுக்கு என்ன செய்யணும் தம்பி’’

‘’தண்டுவடம் எலும்பு நரம்பு சதை ஜவ்வு எல்லாம் சேந்து இருக்கற ஒரு அமைப்பு. அது வலுவாகனும்னா உங்க உடம்புல கால்சியம் சத்து இன்னும் சேர்க்கணும்’’

‘’தம்பி அதுக்கு ஏதாவது மாத்திரை சொல்லுங்க . நான் சாப்பிடறன்.’’

எனக்கு தூக்கி வாரிப் போட்டது. 

‘’மருந்து நான் சொல்லக் கூடாது ஆனா எந்த எந்த உணவுல கால்சியம் அதிகம் இருக்குன்னு சொல்றன். அத சாப்பிடுங்க’’

‘’சரி தம்பி’’

‘’தினமும் முருங்கைக்கீரை சூப் குடிங்க. முருங்கைல கால்சியம் அதிகம். நெல்லிக்காய் சாப்பிடுங்க. சியவனப்பிரகாசம்னு ஒரு ஆயுர்வேத மருந்து இருக்கு. அதுல நெல்லிக்காய் தான் மெயின் சப்ஸ்டன்ஸ். காலைல வெறும் வயத்துல சாப்பிடணும். டேஸ்ட்டா இருக்கும். உங்களுக்கு சுகர் கம்ப்ளைண்ட் இல்லயே?’’

‘’இல்ல தம்பி’’

‘’அப்ப சரி. வெத்தல பாக்கு போடுவீங்களா?’’

‘’இல்ல தம்பி. அந்த கெட்ட பழக்கம் இல்ல’’

‘’வெத்தல பாக்கு போடறது கெட்ட பழக்கம் இல்ல. அதோட புகையிலை சேர்த்து போடறது தான் தப்பு. வெத்தலை பாக்கோட நாம சேக்கற சுண்ணாம்புல கால்சியம் அதிகம் இருக்கு. கால்சியம்னாலே சுண்ணாம்புதான். அதனால சொன்னேன்’’

’’நாளைக்கு காலைல உங்க வீட்டுக்கு வந்து நீங்க சொன்ன மருந்தை எழுதி வாங்கிக்கறன். அப்புறம் கடைல வாங்கி சாப்பிடறன்’’ என்றார்.