Saturday 16 April 2022

நினைவில் காடுள்ள மிருகம்

இன்று காலையிலிருந்து ஏகப்பட்ட அலைச்சல். சித்திரை மாதம் தொடங்கி சில நாட்கள் ஆகியிருந்தாலும் இன்னும் பங்குனி வெயிலின் தாக்கம் மாறாமல் இருக்கிறது. அக்னி நட்சத்திரம் இனிமேல் தான் என்பது இன்னொரு செய்தி. முழு நாளும் வெயிலில் அலைந்து கொண்டிருந்தேன். மாலை வீட்டுக்கு நண்பர் ஒருவர் வந்திருந்தார். புதிதாக வெளியாகியுள்ள ‘’தேவதேவன் கவிதைகள்’’ முழுத் தொகுப்பை எனக்கு வாசிப்பதற்காகக் கொடுக்க வந்திருந்தார். இரண்டு தொகுதிகளாகக் கொண்டு வந்திருக்கிறார்கள் தன்னறம் பதிப்பகத்தினர். மிக நேர்த்தியான பதிப்பாக வெளிவந்திருக்கிறது. புத்தகத்தை கையில் எடுத்துப் பார்த்தேன். ஒரு வாசகன் புத்தகம் கையில் இருக்கும் போது அடையும் மகிழ்ச்சிக்கு சமமாக உலகில் வேறொன்று இருக்குமா என்றே எண்ணுவான்.  

‘’நீங்க இன்னும் வாசிக்கலையா?’’ நண்பரிடம் நான் கேட்டேன். 

‘’என்னோட மைண்ட் செட்டுக்கு கவிதைகள் கொஞ்சம் தூரமா இருக்கு’’

‘’அதெல்லாம் நீங்களா நினைச்சுக்கறது. நாம சேந்து ஒரு கவிதையை வாசிப்போம். ‘’ என்று கூறி தொகுப்பின் முதல் கவிதையை வாசிக்கத் தந்தேன். 

இரண்டு மாபெரும் உண்மைகள்
------------------------------------------------------

நான்தான் அந்தக் கடவுள் 
என உணர்ந்த ஒரு தருணமும்

நான் முழுமையாய் அழிந்த போதே
இந்த உலகம் பேரமைதியில் ஜொலித்ததும்


***

‘’நான்தான் அந்தக் கடவுள் ... ‘’ என்று தொடங்கி வாசித்தார். 

புத்தகத்தை அவர் கையிலிருந்து வாங்கிக் கொண்டேன். ‘’இரண்டு மாபெரும் உண்மைகள்’’ என தலைப்பை வாசித்து விட்டு கவிதையை வாசித்தேன். 

‘’இந்த கவிதை தலைப்புலயே ஆரம்பிச்சிடுது. சிறுகதையும் அப்படித்தான். அதனால எந்த கவிதையை வாசிச்சாலும் அந்த கவிதையோட தலைப்பு அந்த கவிதைல முக்கியமான பங்கு வகிக்குதுன்னு நாம புரிஞ்சுக்கணும்.  சரி ! இந்த கவிதையை நீங்க எப்படி வாசிக்கறீங்க?’’

நண்பர் இந்த கவிதையில் ஒரு முரண் காட்டப்பட்டுள்ளது என்றார். 

‘’அது ஒரு வாசிப்பு. ஆனா இன்னொரு வாசிப்பு இருக்கு. அதை சொல்றன். உங்களுக்கு ஓப்பன் ஆகுதான்னு பாருங்க.’’

நான் பேசத் தொடங்கினேன். 

’’கவிஞர் அந்தக் கடவுள்னு சொல்றார். அப்ப யாரோ ஒருத்தன் அவன் தான் கவிதைல வர்ர ‘’நான்’’ அந்தக் கடவுளைப் பத்தி கேள்விப்படறான். யோசிக்கறான். எப்பவும் நினைச்சுக்கிட்டு இருக்கான்.  கடவுளோடயே சேர்ந்து பிராத்திக்கறான். அவருக்குப் பக்கத்துல போகணும்னு நினைக்கறான்.  ‘’நான்’’க்கு எப்பவுமே ஒரு குவெஸ்ட்டும் என்கொயரியும் டிராவலும் இருந்திட்டே இருக்கு. ஒன் ஃபைன் மொமண்ட்,  ‘’நான்’’க்கு ‘’ நான்தான் அந்தக் கடவுள்’’னு அனுபவம் ஆகுது. இதைத்தான் கவிஞன் 

நான்தான் அந்தக் கடவுள் 
என உணர்ந்த ஒரு தருணமும் 

அப்படீன்னு சொல்றான். 

அடுத்தது,

நான் முழுமையாய் அழிந்த போதே
இந்த உலகம் பேரமைதியில் ஜொலித்ததும்

னு சொல்லிடறான். 

இந்த ரெண்டு மொமண்ட்டும் பக்கத்துல பக்கத்துல இருக்கா? இல்ல தூரமா இருக்கா? பக்கம்னா எவ்வள்வு பக்கம் ? தூரம்னா எவ்வளவு தூரம்? இப்படி வச்சுப்போம். முதல் பாரா ஒரு மனுஷனோட வாழ்க்கைல இளமையில ஏற்படுதுன்னு வச்சுப்போம். அடுத்த பாரா அவனோட முதுமைல ஏற்படுமா? யாராவது சிலருக்கு முதல் பாரா அனுபவமும் ரெண்டாம் பாரா அனுபவமும் அடுத்தடுத்து நிகழுமா? அப்ப அவன் எப்படிப்பட்டவன்? முன்னாடி இருக்கறவன் எப்படிப்பட்டவன்?’’

நான் சிறிய இடைவெளி கொடுத்தேன். என் அகத்தில் சொற்கள் பொங்கிக் கொண்டிருந்தன. 

‘’நம்ம மரபுல மஹா வாக்கியங்கள் நாலு. ‘’பிரக்ஞானம் பிரம்மஹ’’, ‘’அஹம் பிரம்மாஸ்மி’’, ’’தத்வமஸி’’, ’’அயம் ஆத்மா பிரம்ம’’ . இந்த நாலு மகா வாக்கியங்களோட பாதைல இந்த கவிதையை அணுகிப் பாருங்க. இன்னும் குறிப்பா ‘’தத்வமஸி’’ ‘’அஹம் பிரம்மாஸ்மி’’ங்கற ரெண்டு மகா வாக்கியங்கள் இந்த கவிதைக்கு இன்னும் நெருக்கமா இருக்கு. 

ஒரு ஆத்ம சாதகன் தன்னோட சாதனைல தன்னோட அகங்காரத்தை முழுமையா அழிக்கறான். அப்ப அவனுக்கு ‘’நான்தான் அந்தக் கடவுள்’’ங்கற அனுபவம் ஏற்படுது. அந்த அனுபவம் ஏற்படும் போது இத்தனை நாள் பொங்கிக்கிட்டு இருந்த அவனோட அகம் அமைதியடையுது. அந்த அமைதி நிறையும் போது மொத்த உலகமும் அவனுக்கு அமைதியாயிடுது. 

இந்த ரெண்டு மொமண்ட்டும் ஒரே மொமண்ட்தான். ஆனா கவிதைல ரெண்டு மொமண்ட்டா எழுதப்படுது. 

கவிதையோட தலைப்பு ’’இரண்டு மாபெரும் உண்மைகள்’’. கவிஞன் ‘’இரண்டு உண்மைகள்’’னு தலைப்பு வச்சிருக்கலாம். ஏன் ‘’இரண்டு மாபெரும் உண்மைகள்’’னு தலைப்பு வச்சான்?

யோக மரபுல ‘’ஆக்ஞா’’ வும் ‘’சகஸ்ர ஹாரம்’’ மும் பக்கத்துல பக்கத்துல இருக்கு. ஆன்ம சாதகர்கள் லட்சம் பேருன்னா அதுல ஒருத்தர் தான் ஆக்ஞாவுக்கு வர்ராங்க. ஆக்ஞாவுக்கு வந்த சாதகர்கள்ல லட்சத்துல ஒருத்தர் தான் சகஸ்ரஹாரத்துக்குப் போறாங்க இந்த ‘’இரண்டு மாபெரும் உண்மைகள்’’ல ஒரு மாபெரும் உண்மை அனுபவமாகறதுக்கும் இன்னொன்னு அனுபவமாகறதுக்கும் இடையே நிறைய ஜென்மம் ஆகலாம். ஜீவன் முக்தர்களுக்கு இந்த ‘’இரண்டு மாபெரும் உண்மைகள்’’ ஒரே மொமண்ட்ல அனுபவம் ஆகலாம். ‘’

என்று பேசி முடித்தேன். 

என் சொற்கள் நிரம்பியிருந்த அறையில் அப்போது மௌனம் நிரம்பியிருந்தது. 

இன்று நாள் முழுக்க கடுமையான அலைச்சல் . சந்திப்புகள். ஏற்பாடுகள். சற்று சோர்வுடன் தான் இருந்தேன். பேசி முடித்ததும் வேறொருவன் ஆகி விட்டதாக உணர்ந்தேன். ‘’நினைவில் காடுள்ள மிருகத்தை எளிதில் பழக்க முடியாது ‘’ என்ற தேவதேவன் வரி நினைவில் வந்தது.