Friday 17 June 2022

நல்வரவு

 இன்று வாஷிங்டனிலிருந்து நண்பர் ஒருவர் அழைத்திருந்தார். என் மீது மிகுந்த அன்பும் பிரியமும் கொண்டவர். அவரைப் போன்ற இனிய மனிதர்களின் நட்பே என் வாழ்வில் நான் பெற்ற பெரும் பேறு. 

ஸ்மார்ட்ஃபோன் வைத்திருந்தால் இவர்களைப் போன்றவர்களுடன் தொடர்பில் இருக்க பெருவசதியாக இருக்கும். ஆனால் என் மனம் அலைபேசியை தொலைபேசியின் தொடர்ச்சியாகவும் இணையத்தை மடிக்கணினி அல்லது கணினியுடன் இணைத்தே புரிந்து வைத்திருக்கிறது. அது எனக்கு நிறைய சௌகர்யத்தையும் சுதந்திரத்தையும் தருவதாக உணர்கிறேன். காலை மாலை கணினி முன் அமர்வேன் என்பதால் ஸ்மார்ட்ஃபோன் வைத்துக் கொள்ள வேண்டும் என்று பிரத்யேகமாக நினைப்பதில்லை. இருப்பினும் நண்பர் ஒவ்வொரு முறை அழைக்கும் போதும் இன்னும் சகஜமான இணைப்பு சாத்தியத்தை அவருக்கு அளிக்க முடியாமல் உள்ளதே என வருந்துவேன். 

இன்று நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தேன். 

‘’தம்பி ! கூடிய சீக்கிரம் இந்தியா வந்திருங்க. ஊர் பக்கத்துல இருபது ஏக்கர் நிலத்தை வாங்கிப் போடுங்க. நடுவுல கிணறு மாட்டுக் கொட்டகையோட நேட்டிவிடி டச்சோட வீடு கட்டி பத்து பசு மாடு ரெண்டு நாட்டு ரக நாய்னு வளர்த்துக்கிட்டு ஜம்னு ராஜவாழ்க்கை வாழலாம். நாம தினமும் பத்து பேருக்கு வேலை கொடுக்கலாம் தம்பி. உங்களுக்கு இருபது ஏக்கர்ல அமெரிக்காவுல வர்ர வருமானத்தை விட அதிகமான வருமானம் வர வழி நான் சொல்றன். மண் மரம் பட்சி பிராணின்னு வாழற வாழ்க்கை தான் தம்பி நிறைவா இருக்கும்.’’

நண்பரின் அகத்தில் எப்போதும் ஒரு விவசாயி இருக்கிறான் என்பதை நான் அறிவேன். நண்பருக்கு மிகவும் மகிழ்ச்சி. 

‘’உங்களுக்கு எல்லாம் நான் அமைச்சுக் கொடுக்கறன். முடிவு மட்டும் தான் நீங்க எடுக்கணும் தம்பி ‘’

‘’கூடிய சீக்கிரம் நீங்க சொல்ற படி செய்றன் அண்ணன்’’

நண்பர் விரைவில் நாடு திரும்புவார்.