Friday 15 July 2022

தபால் வங்கிகள்

சில வாரங்களுக்கு முன்னால், சில ஆண்டுகளாக செயல்படாமல் இருந்த என்னுடைய தபால் அலுவலக சேமிப்புக் கணக்கில் சிறுது தொகை செலுத்தி செயல்பாட்டுக்குக் கொண்டு வந்தேன். மேற்படி கணக்கின் பாஸ் புத்தகம் மேஜையை சரி செய்த போது கண்ணில் பட்டது. அதனையே ஓர் நிமித்தமாகக் கொண்டு கணக்கை செயல்பாட்டுக்குக் கொண்டு வந்தேன். தபால் அலுவலக சேமிப்புக் கணக்குடன் பல ஆண்டு உறவு எனக்கு உண்டு. எங்கள் பகுதியில் ஒரு தபால் அலுவலகம் இருந்தது. அந்த அலுவலகத்தின் சப்- போஸ்ட் மாஸ்டர் எனது நண்பர். அப்போது எனக்கு பத்து வயது. அவருக்கு முப்பது வயது இருந்திருக்கும். நான் போஸ்ட் ஆஃபிஸ் சென்று அவருடன் உரையாடிக் கொண்டிருப்பேன். அவர் தான் எனக்கு தபால் அலுவலகங்கள் இயங்கும் முறை குறித்து ரயிலில் தபால்கள் கொண்டு செல்லுதல் குறித்து விளக்குவார். எனது அண்டை வீட்டில் மூன்று வயதுக் குழந்தை இருந்தான். அவன் எப்போதும் என்னோடுதான் இருப்பான். என்னுடைய பள்ளி விடுமுறை நாட்களில் காலை 9 மணிக்கு எங்கள் வீட்டுக்கு வந்தால் இரவு 9 மணிக்குத்தான் அவனுடைய வீட்டுக்குச் செல்வான். அவனையும் அழைத்துக் கொண்டு தபால் அலுவலகம் செல்வேன். நாங்கள் பேசுவதை ஆர்வமாக கவனிப்பான். குழந்தை என்பதால் அவனும் உரையாட ஆர்வம் காட்டுவான். இப்போது அவன் எம். டி படித்து மருத்துவத்தில் டாக்டரேட் செய்து மருத்துவராக உள்ளான். ஊருக்கு வரும் போது வீட்டுக்கு வருவான் . இப்போது பார்த்தாலும் அவனை எனக்கு குழந்தையாகத்தான் தோன்றும். 

என்னுடைய முதல் அஞ்சலக சேமிப்புக் கணக்கு அந்த கிளையில் தான் தொடங்கப்பட்டது. பின்னர் அந்த அலுவலகம் வேறு இடத்துக்கு மாற்றப்பட்டுவிட்டது. பல ஆண்டுகளுக்குப் பின் வங்கிக் கணக்கு துவங்கியதும் அந்த கணக்கை குளோஸ் செய்து விட்டேன். 

ஒருமுறை வெளிநாட்டிலிருந்து ‘’மணி டிரான்ஸ்ஃபர்’’ முறையில் நண்பர் அனுப்பிய பணத்தை எடுக்க முயன்ற போது தனியார் நிறுவனங்களில் ஒரு நாள் ஆகும் என்ற நிலை. தற்செயலாக தபால் அலுவலகத்தில் ’’மணி டிரான்ஸ்ஃபர்’’ வசதி இருப்பது தெரிந்து அங்கு சென்றேன். சில மணித்துளிகளில் ஒரு அஞ்சலக சேமிப்புக் கணக்கு துவங்கி அந்த கணக்கில் பணத்தை வரவு வைத்து உடன் என் கைகளில் பணத்தை சேர்த்து விட்டனர். இந்த சம்பவம் குறித்து தளத்தில் முன்னரே எழுதியுள்ளேன். அந்த கணக்கு அதன் பின் அப்படியே இருந்தது. அதைத்தான் இப்போது நடப்பில் கொண்டு வந்துள்ளேன். 

தபால் அலுவலக கணக்கைப் புதுப்பித்து அலுவலகத்துக்கு வெளியே வந்த போது அதன் பக்கவாட்டில் ‘’இந்தியன் போஸ்டல் பேமெண்ட் பேங்க்’’ என்ற அறிவிப்புப் பலகை இருந்தது. அங்கே சென்று அது குறித்து விசாரித்தேன். மிக எளிய நடைமுறை கொண்ட வங்கி இது. அஞ்சலக சேமிப்புக் கணக்குடன் இணைத்துக் கொள்ள முடியும். தனியாகவும் துவங்க முடியும். இது காகிதமே பயன்படுத்தாத வங்கி நடைமுறை. நமது கட்டை விரலை ஸ்கேன் செய்து அதன் மூலாம் ஆதார் தளத்துக்குச் சென்று அதில் உள்ள விபரங்களைக் கொண்டு கணக்கு துவங்கப்பட்டுவிடும். கணக்கு எண் முதலிய விபரங்கள் குறுஞ்செய்தியாக வரும். இதனைப் பயன்படுத்த ஒரு ஸ்மார்ட்ஃபோன் அவசியம். ஸ்மார்ட்ஃபோன் இல்லாதவர்கள் அஞ்சலக கணக்குடன் இணைத்துப் பயன்படுத்தலாம். எனது நண்பரின் ஸ்மார்ட்ஃபோன் மூலம் கணக்கை இயக்கிக் கொள்கிறேன். உபயோகமாக உள்ளது. 

எதிர்காலத்தில் இந்தியாவில் இருக்கும் பொதுத்துறை வங்கிகள் இப்போது இருக்கும் வடிவத்தில் செயல்முறையில் இருக்குமா என்பது ஓர் ஐயம். மிகப் பரவலான வலைப்பின்னல் கொண்ட இந்திய தபால் துறை வங்கித் துறையில் முக்கியப் பங்காற்றக் கூடும்.