Wednesday 20 July 2022

மரம் - சட்டம் - விதிகள்

’’பொது இடம்’’ என்பது தெருக்கள், நீர்நிலைகளின் கரைகள், ஊருக்குப் பொதுவாக இருக்கும் மைதானங்கள், சாலைகள், அரசுக் கட்டிடங்கள் ஆகியவற்றைக் குறிக்கும். இந்தகைய இடங்களில் தானாக வளரும் அல்லது  மக்களால் அல்லது அரசால் வளர்க்கப்படும் மரங்கள் அரசாங்கத்தின் சொத்துக்கள் ஆகும். 

அவை வெட்டப்பட வேண்டும் என்றால் அதற்காக பல விதிமுறைகள் உள்ளன. 

1. மரம் வெட்டப்பட வேண்டும் என்றால் எழுத்துப்பூர்வமாக இன்ன காரணத்துக்காக மரம் வெட்டப்பட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அல்லது சார் ஆட்சியருக்கு விண்ணப்பிக்க வேண்டும். 

2. அந்த மனுவை ஆய்வு செய்து சார் ஆட்சியர் அல்லது வருவாய் கோட்ட அதிகாரி முதலில் அந்த இடத்திற்கு நேரில் வந்து ஆய்வு செய்வார். 

3. அந்த மரம் அகற்றப்பட்டே தீர வேண்டும் எனில் அந்த மரத்தின் பொருள்  மதிப்பை அரசாங்கத்துக்கு செலுத்தி மீண்டும் விண்ணப்பிக்குமாறு கூறுவார். அந்த மதிப்பு சந்தை விலையை விட அதிகமாகவே நிர்ணயிக்கப்படும். 

4. சார் ஆட்சியர் அல்லது வருவாய் கோட்ட அதிகாரி நேரில் ஆய்வு செய்ததோ அல்லது மரத்தின் மதிப்பை அரசாங்கத்துக்கு செலுத்தச் சொன்னதோ விண்ணப்பித்தவருக்கு அந்த மரத்தை வெட்ட முகாந்திரம் அளித்ததாக ஆகாது. 

5. மாவட்ட ஆட்சியர் அல்லது மாவட்ட வருவாய் அதிகாரி அல்லது சார் ஆட்சியர் அல்லது வருவாய் கோட்டாட்சியர் இன்ன இடத்தில் உள்ள இன்ன மரம் இன்ன காரணத்துக்காக வெட்டப்பட அனுமதிக்கப்பட்டுள்ளது என உத்தரவு இட வேண்டும். அந்த உத்தரவின் அடிப்படையில் மரத்தை வெட்டிக் கொள்ளலாம். விண்ணப்பிப்பவர் பொதுஜனமாக இல்லாமல் அரசை சேர்ந்த ஒரு அலுவலர் எனில் வெட்டப்பட்ட அந்த மரம் ஏலம் விடப்பட்டு அரசு கணக்கில் மரத்தின் தொகை சேர்க்கப்பட வேண்டும். 

இத்தனை விதிமுறைகள் ஏன் உருவாக்கப்பட்டுள்ளன என்பதை சாமானியர் கூட எளிதில் புரிந்து கொள்ளலாம். இத்தனை விதிமுறைகளும் உயிர் மரங்கள் காக்கப் பட வேண்டும் என்பதற்காகவே. 

மரங்களை முழுமையாக வெட்ட மட்டும் அல்ல அதன் கிளைகளை வெட்டக்கூட இந்த விதிமுறைகள் பொருந்தும். அதாவது அதன் அர்த்தம் என்ன எனில் பொது இடத்தில் இருக்கும் மரங்களுக்கு மனிதர்களால் எந்த பாதிப்பும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதே. 

இந்திய அரசியல் சாசனம் ,’’இயற்கை வளங்களைப் பாதுகாத்தல் மற்றும் உயிர்கள் மேல் கருணையோடிருத்தல்’’ என்பதை தனது குடிகளின் அடிப்படை கடமையாக அறிவிக்கிறது. அந்த அடிப்படையிலேயே ‘’காவிரி போற்றுதும்’’ பொது இடத்தில் உள்ள மரங்கள் தனிநபர்களால் வெட்டப்படும் போது அந்த செயலை சட்டத்தின் முன் கொண்டு வருகிறது.