Thursday 25 August 2022

சென்னையில் இரு நாட்கள்

உத்யோக நிமித்தமாக எனது நண்பர் ஒருவருடன் இரு நாட்கள் சென்னை சென்றிருந்தேன். நண்பருக்கு என்னுடைய உதவி ஒரு விஷயத்தில் தேவைப்பட்டது. என்னை உடன் வந்து உதவுமாறு கேட்டுக் கொண்டார். நானும் அவரும் சென்னைக்கு காரில் பயணித்தோம். நண்பர் சிறப்பாக கார் ஓட்டக் கூடியவர். சென்னையை முழுமையாக அறிந்தவர். ஒரு நாளில் பணி முடிந்து விடும் என்ற எதிர்பார்ப்புடன் சென்றிருந்தோம். எனினும் இரு நாட்கள் ஆயிற்று. சென்னையின் பல பகுதிகளுக்கு செல்ல வேண்டிய அவசியம் இருந்தது. அவரது நண்பர்கள் சிலரைச் சந்தித்தோம். அந்த சந்திப்புகள் மகிழ்ச்சி அளிப்பவையாக இருந்தன. அவர்கள் பலவிதமான தொழில்களில் ஈடுபடுபவர்கள். அவர்களுடைய தொழில்களின் நடப்பு நிலவரம் குறித்து கேட்டுக் கொண்டிருந்தேன். நண்பரும் நானும் சென்னையில் ஒரு திரைப்படம் பார்த்தோம். கண் முன்னால் ஒரு பெரும் திரையில் காட்சிகள் விரிவதை எனக்குப் பார்க்க மிகவும் பிடிக்கும். வருடத்துக்கு மூன்று அல்லது நான்கு படம் பார்ப்பேன். 

சென்னையில் புதிது புதிதாக உருவாகியிருக்கும் கட்டடங்களினூடாக நான் அறிந்த பழைய சென்னையை தேடிக் கொண்டிருந்தேன். சில பகுதிகள் முழுவதும் அடையாளம் தெரியாத அளவு மாறியிருக்கின்றன. இரு சக்கர வாகனங்களும் கார்களும் மிகப் பல மடங்கு பெருகியுள்ளன. அதன் தாக்கம் நகரில் பயணிக்கும் போது தெரிகிறது. 

விதவிதமான மக்களைப் பார்ப்பது என்பது எனது பெருவிருப்பங்களில் ஒன்று. ஒரு பொது செயல்பாட்டாளன் மக்களைக் காணும் போது அவர்களிடமிருந்து ஆற்றலைப் பெறுகிறான்.