Friday 26 August 2022

அரசு வளாகம்

நான் அரசமைப்பின் மேல் நம்பிக்கை கொண்டவன். மக்களாட்சி என்பது கடைசி குடிமகனையும் சென்றடைய வேண்டும் என்ற தன்மையைக் கொண்டது என முழுமையாக நம்புபவன். அதன் எல்லைகளுக்குள் குடிமக்களின் தேவைகளும் கோரிக்கைகளும் விருப்பங்களும் பூர்த்தி செய்யப்பட வேண்டும் என்று எண்ணுபவன்.

தமிழ்நாட்டின் அரசு அலுவலகங்களுக்கு அவ்வப்போது செல்பவன் என்ற முறையில் எனக்கு சில அவதானங்கள் உண்டு. அவற்றை இந்த தருணத்தில் பதிவு செய்வது சில விஷயங்களை பரிசீலனை செய்ய உதவிகரமாக இருக்கும் என்பதால் அவற்றைப் பதிவு செய்கிறேன். 

1. பொதுமக்கள் அரசு அலுவலகம் ஒன்றனுக்கு செல்ல வேண்டும் என்றால் அதை எவ்வளவு ஒத்திப் போட முடியுமோ அவ்வளவு ஒத்திப் போட முயற்சி செய்கிறார்கள். ஒத்திப் போட்டு போகாமல் இருப்பதே உத்தமமானது என நினைக்கிறார்கள். அரசு அலுவலகத்தை விட இடைத்தரகர்கள் மூலம் அந்த அலுவலகத்தில் அவர்கள் பெற வேண்டிய சேவையை அடைந்து கொள்வதே மேலானது என்ற எண்ணம் மக்களிடம் உள்ளது. 

2. பெரும்பாலான அரசு அலுவலகங்களில் உள்ள அரசு ஊழியர்கள், அதிகாரிகள் ஆகியோர் தங்கள் அலுவலகத்துக்கு பொதுமக்கள் வருவதையே விரும்புவதில்லை. அவர்கள் பழகியிருக்கும் உதாசீனமே இடைத்தரகர்கள் தலையீட்டை அதிகமாக்குகிறது. 

3. அரசு ஊழியர்கள் ஒரு குறுங்குழு மனப்பான்மையுடன் செயல்படுகின்றனர். 

4. அரசு ஊழியர்களின் திறன் என்பது ஊழல் செய்வதிலும் ஊழலை மறைப்பதிலும் மட்டுமே உள்ளது. 

5.  அரசு ஊழியர்களின் பணித்திறன் என்பது மிகக் குறைவானதாக உள்ளது. அவர்களுடைய சட்ட அறிவு என்பது பணித்திறனைக் காட்டிலும் குறைவானது. 

6. மிகத் தவறான செயல்பாட்டு முறையை அரசு ஊழியர்கள் இங்கே பழக்கி வைத்துள்ளார்கள். 

ஓரிரு முறை அரசு அலுவலகங்களுக்கு சென்று வந்தவர்கள் கூட இவை அனைத்தும் உள்ளவை தானே புதிதாக என்ன இருக்கிறது என்று நினைப்பார்கள். ஆனால் நாற்பது ஆண்டுகளுக்கு முன்னால் முப்பது ஆண்டுகளுக்கு முன்னால் இருபது ஆண்டுகளுக்கு முன்னால் பத்து ஆண்டுகளுக்கு முன்னால் இவ்வாறு தான் நிலைமை இருந்தது என்றாலும் இன்றும் இப்படித்தான் நிலைமை இருக்கிறது என்பது பெரும் அபாயம் ஒன்றின் அறிகுறி. 

‘’சிஸ்டம்’’ பெரிய அளவில் கெட்டுப் போயிருக்கிறது.   இந்த ’’சிஸ்டம்’’ மாற வேண்டும்.